Wednesday, January 18, 2012

சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men )

வழக்கமான படங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது இந்தப் படம். மற்ற படங்களைப் போல் அல்லாமல், ஒரே அறையில் கதை ஆரம்பித்து அதே அறையில் முடிகிறது. கதை என்றும் சொல்வதற்கு இல்லை, 12 மனிதர்கள் படம் நெடுகிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்?.

ஒரு சிறுவன், தனது தந்தையைக் கொலை செய்து விட்டதாக,  நீதிமன்றத்தில் இருக்கிறான். இந்த வழக்கில் நீதிபதியைத் தவிர, பொது மக்களிலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களும் அந்த வழக்கில் நீதிபதியாக இருப்பார்கள். அப்படி இந்த வழக்கில் 12 பேர் நீதி மன்றத்தில் இருக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்களிடம் வழக்கைப் பற்றிக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் அனைவரும் கூடிப் பேசி சொல்லுமாறு கூறுகிறார். இது ஒரு கொலை சம்பந்தப்பட்டது என்றும், அதேபோல ஒருவனின் வாழக்கை பற்றியது என்றும் கூறும் அவர், சரியான காரணங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என ஒரு அறைக்கு அனுப்பி விடுகிறார்.

உள்ளே சென்றதும், அனைவரும் இருக்கையில் அமர்ந்து, வழக்கைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தச் சிறுவன், "குற்றம் செய்தவனா, இல்லையா" என்பதைத் தீர்மானிக்க, அங்கே தலைமை வகிக்கும் ஒருவர் கை தூக்கச் சொல்கிறார். எல்லோரும் கை தூக்க, ஒருவர் மட்டும் கை தூக்கவில்லை. கூட்டத்தில் இருந்து இன்னொருவர், "ஏன் நீங்கள் மட்டும் அவனை நிரபராதியாகப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்க, அவர் "ஒரு காரணம் பற்றியும் நாம் பேசாமல், ஆராயாமல் ஒருவனை எப்படி குற்றம் செய்தவன் என்று ஒப்புக் கொள்வது. நாம் கண்டிப்பாக இதைப் பற்றி விவாதித்து பின்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதை விட்டு, இப்படி எடுத்த உடனே அவனை குற்றவாளி என்பது தவறு" என்று சொல்ல, தலைமை வகிப்பவர் "சரி, நாம் விவாதிப்போம்" என்று சொல்கிறார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் பேசப்பட்ட விஷயங்கள், கிடைத்த தடயங்கள், காவல் துறையின் அறிக்கை, அச்சிறுவன் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி என எல்லாவற்றை பற்றியும் விவாதிக்கிறார்கள்.

ஒரு இடத்தில் ஒருவர், "அந்த கத்தியை அவன்தான் வாங்கி இருக்கிறான். அந்தக் கடையில் அதுபோல ஒரே ஒரு கத்திதான் இருந்திருக்கிறது. எனவே அவன்தான் கொலை செய்தவன்" என்று கூற, இன்னொருவர் "இதோ அதே போல இன்னொரு கத்தி" என்று மேசை மீது வீசி எறிகிறார்.

இதுபோல, படம் நெடுகிலும் பேச்சிலேயே நகரும் கதை, ஒவ்வொரு வாக்கு மூலத்தையும் ஆராய்கிறார்கள். பொத்தாம் பொதுவாக, ஒருவனை குற்றம் செய்தவன் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது, சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் ஒரு தீர்ப்பை எழுதுவது தவறு என்று படத்தில் கோடிட்டு காட்டியிருப்பார்கள்.

அதிலும், பன்னிரெண்டு மனிதர்களும், அவர்கள் அனைவருக்கும் சில கருத்துக்கள் உண்டு, அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் கோபப் படுகிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள். அதிலும் ஒருவன், வெகு சீக்கிரம் இதை முடித்துக் கொண்டு விளையாடப் போக வேண்டும் என்கிறான். ஒருவன் பங்குச் சந்தை பற்றி இன்னொருவனிடம் அறிமுகம் செய்து கொள்கிறான்.

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு, தனிப் பார்வை உண்டு. எடுத்த உடனே, ஒருவனை குற்றம் செய்தவன் என்று, எதைப் பற்றியும் ஆராயாமல், தீர்ப்பு வழங்கிய அவர்கள், ஒருவரின் கேள்விக்காக, திரும்பவும் வழக்கைப் பற்றி பேசுகிறார்கள். இறுதியில் என்ன தீர்ப்பை வழங்கி இருப்பார்கள் என, படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஒரே அறை என்பதால், புழுக்கம், மின் விசிறி வேலை செய்யாமல் வேர்த்துக் கொட்டும் இடங்கள், கொஞ்ச நேரம் கழித்துப் பெய்யும் மழை என, ஒரே அறையில் இருந்து கொண்டு முழுப் படத்தையும் நகர்த்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கியங்களும் கவனிக்க வேண்டியவை. அனைவரும் அறையை விட்டு வெளியேறியவுடன், இருவர் மட்டும் எதேச்சையாக வெளியே சந்தித்துக் கொள்கிறார்கள். பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டு, இப்படி சொல்கிறார்கள்;

"Well, So Long"
"So Long"

ஆம், நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.







5 comments:

  1. இளங்கோ ..இதத்தான் நான் எதிர்பாத்தேன் ...இப்படியான நீளமான பதிவுகள் ..நல்லா எழுதியிருக்கீங்க . படம் பாக்கணும் !

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  3. உங்கள் பார்வைக்கு இன்று ..

    நண்பன் VS வேட்டை

    ReplyDelete
  4. @ஷஹி
    சில நேரங்களில் நீளமான பதிவா அமைந்து விடுகிறது. படம் கண்டிப்பா பாருங்க.

    ReplyDelete
  5. @"என் ராஜபாட்டை"- ராஜா
    நன்றி நண்பரே..

    ReplyDelete