Posts

Showing posts with the label கவிதை

தாத்தா வீடு

தக்க ஊதியம் கிட்டாததற்க்கும் எப்பொழுதும் பற்றாக்குறையில் ஓடிய தின வாழ்வுக்கும் காரணம் இது பாட்டன் வீடாம்... பாட்டன் வீட்டில் மகன் இருக்கலாம் பேரனுக்கு ஆகாதெனச் சொல்லிக் கொண்டிருக்கிறான் கட்டம் போட்டு குறி சொல்லியவன். மங்கிப் போன புகைப்படத்தில் கையில் கைத்தடியுடன் அந்தக் கட்டங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா..

உயர் ரகம்

Image
புசுபுசுவென்ற முடிக் கற்றைகள்.. இல்லையெனில் முடியே இல்லாமல்.. பிறந்து ஒரு வாரம் என்றாலும் பத்து, இருபது ஆயிரங்களில் விலை உயரம், எடை, உணவு என்று நாட்டு இனங்களை விட வித்தியாசங்கள் நிறைந்தவை... எனினும் கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள் நெடுஞ்சாலை வாகனங்களில் தவறியும் அடிபடுவதில்லை நாட்டு நாய்களைப் போல்..

குழந்தைகளுக்கு நேரமில்லை

குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை பள்ளியில் இடம்  வேண்டி ஆறு மாத குழந்தைக்கு விடிய விடிய வரிசையில் நிற்கிறோம் ஆறு மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடி ஏழு மணிக்கு குளி  எட்டு மணிக்கு வீதியில் பள்ளி வண்டி நிற்கும் அதற்குள் சாப்பிட்டு முடி படிப்பது பாலர் வகுப்பு என்றாலும் அரை மணி நேரம் பயணம் செய்து பள்ளிக்கூடம் செல் கேட்ட கேள்விக்கு பதில் சொல் தமிழில் பேசாதிருப்பது முக்கியம் அவனைவிட அதிக மதிப்பெண் எடு காலையில் அடைத்து வைத்ததை மதியம் சாப்பிடு அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி நேரத்துக்கு செல் வாரத்தில் ஒருநாள் மட்டும் அரை மணி நேரம் பி.டி. நேரத்தில் விளையாடு மாலை ஓய்ந்து வா ஏதாவது தின்று தண்ணீர் குடி மீண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிப் படி டியூசன் போ.. அங்கும் படி சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைத்தால் டி.வி பார் கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்.. அக்கம் பக்கத்தில் பேச நேரமில்லை விளையாட்டு.. மூச். நேரத்துக்கு சாப்பிடு நேரத்தில் தூங்கு காலையில் நேரத்தில் எழ வேண்டும். பெரியவர்கள் ...

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

Image
காட்டுச் செடி காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ அதைப் பறிக்க நினைத்த நரியோ அல்ல மர்மமான துக்க இருள் நடுவே ஒரு காட்டுச் செடி தூய்மையின் வண்ணத்துடன் பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர் ஆக மெல்லிய அதன் மணக் கைகள் தட்டுகின்றன எல்லோர் கதவையும் ************************* நீர்ப்பயம் நாய் கடிக்காது பார்த்துக்கொள் அதிலும் வெறிநாய் கடித்தால் பேராபத்து அந்த வெறிநாய் போலே ஊளையிட்டுத் திரிவாய் தண்ணீர் அருந்த இயலாது தொண்டை நரம்புகள் தெறிக்கும் அப்புறம் தண்ணீரைக் கண்டாலே அலறித் துடிப்பாய் மரணத்தில்தான் உனக்கு விடுதலை ஆகவே நாய்க்கு வரும் நோய்பற்றிக் கவலை கொள் நாய் பற்றிக் கவலை கொள் ************************* புல்வெளியில் ஒரு கல் புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித் தத்திய காட்சி, அழிந்து புல்வெளிமீது  ஒரு கல் இப்போது. மனிதச் சிறுவன் ஒருவனால் அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட கல்லாயிருக்கலாம் அது. இப்...

ஒரு வனதேவதையின் உக்கிரம்

Image
ஆதியில் தண் பசுமையும் குளிர் காற்றும் பட்சிகளின் வாழ்வும் பகலவனின் ஒளி புகாத கானகத்தினுள் ஒரு வேம்பினடியில் மடித்து வைத்த பாதங்களோடு அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன். கொடும் கரம் கொண்டு பசுமையழித்து கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு என்னை ஒரு நாற் சுவருக்குள் அடைத்தது ஒரு கூட்டம். தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய் மாறிப்போன எனக்கு தினந்தோறும் பூசைகள் பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள் என எதுவும் பிரியமில்லை. அறிந்துகொள்ளுங்கள் மக்களே நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை எனக்கு ஒரு கானகம் வேண்டும். படங்கள் : இணையத்திலிருந்து.

தொலைந்த எழுத்து

வெகு நாளாக புரட்டாத புத்தகத்தில் ஒரு பூச்சி உயிர் விட்டிருந்தது... உயிர் விட்டிருந்த பக்கத்தில் ஓர் எழுத்தை மறைத்து கிடந்தது.. பூச்சியை எடுத்த பின் அவ்விடத்தில் இருந்த எழுத்தும் காணவில்லை... எந்த எழுத்தை போட்டும் அவ்வாக்கியத்தை நிரப்ப முடியவில்லை அதன் உயிரைப் போல.. குறிப்பு: முன்னரே இத்தளத்தில் பதிந்த கவிதை.  

மாற்றப்படாத வீடு - தேவதேவன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து... இருள் ஓளி கேள்வி இருளுக்கு ஒளி பதிலானது எவ்விதம் ? இருளை உற்று நோக்க நோக்க இருளே ஒளியாயிற்று ஒளி நோக்கும் உந்தலற்று அற்று ஒளியே இருளாயிற்று. இவ்விதமே இருளும் ஒளியும் ஒன்றாகி பேரொளி. கேள்வியும் பதிலும் இணைந்து பெருவியப்பு. =================== துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை. மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால். மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த கணமே பறவை. =================== அழைப்பு கடைசி மத்தாப்பும் உதிர்ந்து மரணம் என்னைச் சூழ.. உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி வானம் என்னை அழைக்கிறது..

சாந்தக்கா

நாலரை மணி ரயிலுக்கு நாலு மணிக்கே கூடையுடன் வந்து ஜங்சனில் அமர்ந்திருக்கும் கொய்யா விற்கும் சாந்தக்கா மெல்லிய வெள்ளை வேட்டியை இரண்டாக மடித்து கூடை மேலே போடப்பட்டும் கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள் வெளியே தெரியும். கொய்யா வெட்ட பெரிய கத்தியும் விருப்பமானவர்களுக்கு உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த பிளாஸ்டிக் டப்பாவும் கூடையில் இருக்கும். வண்டி வந்து நின்றவுடன் யாரோ ஒருவர் தூக்கி விட கூடையுடன் வந்து பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா திரும்ப இறக்கி வைக்கவும் ஏற்றவும் யாரோ ஒருவர் உதவுவர் வண்டி கிளம்பியதும் கூடையை நகர்த்திக்கொண்டு கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா அடுத்த ஸ்டேசனில் அடுத்த பெட்டி என்று ஒவ்வொரு பெட்டியாய் கொய்யா மணம் பரவும் ஒருநாள் சுமையைத் தூக்கிவிடும்போது 'சொமையா இல்லியா அக்கா?' என்றேன். 'ம்.. இதென்ன சொமை.. குடிகார புருசனும் ரெண்டு புள்ளை,  ஒரு பையனையும் விடவா பெரிய சொமை' என்று சொல்லிவிட்டு.. 'கொய்யாக் காயேய்..' எனக்  கூவிக் கொண்டு அடுத்த பெட்டிக்கு அவசரமாகப் போனது சாந்தக்கா.. சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது.

ஆதலினால் காதல்..

உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! ********************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் .. ********************************* அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! (இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )

கற்கள்

இவன் வயிற்றில் இருந்தபோது ஒருநாள்  நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல் சடசடவென கல்மாரி விழுந்தது...  நடந்து பழகியவன் ஒருநாள் கல் தடுக்கி விழுந்த காயத்திற்கு நான்தான் மருந்து போட்டு விட்டேன்... கல்லைத் தூக்கி வீசியதில் பக்கத்துக்கு வீட்டு பையனின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில் பையனின் அம்மாவுடன் ஜென்மப் பகை வந்தது... தள்ளாத வயதில் முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டுப் போனவன் அவன் அவனே ஒரு பாறாங் கல்லோ என்று இப்பொழுது நினைக்கிறேன்....

வேகம்

Image
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள் ஒவ்வொரு நாளும் பயணம் ஓய்வில்லாத பயணம் சாலைகள் எப்போதும் முன்னால் விரிந்து கிடக்கிறது ஒரு போதும் மறந்து விடலாகாது நமக்குப் பின்னாலும் ஒரு நீண்ட பாதை உண்டென்பதை...

எனது டைரியிலிருந்து - 6

Image
விற்ற காசு தோப்பும் துரவும் வீடும் கிணறும் விற்று வாங்கிய தொகையை எண்ணிக்  கொண்டிருக்கையில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் அப்பாவின் முகம். - ந. கண்ணன் (ஆனந்த விகடன்) =================================================== தோல்வி கடைசி சவம் விழுந்ததும் கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுள் பெயர். - எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்) =================================================== நடைபாதை ஓவியன் கோவர்த்தன மலையை குடையென ஆக்கி மக்களைக் காக்கும் கண்ணனை வயிற்றுப் பசியுடன் வரைந்து முடித்து நிமிர்ந்து பார்க்க வந்தது மழை. குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார். - எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்) =================================================== அகத்தகத்தினிலே காதலர் தினம், அன்னையர் தினம் என வரிசையாய் எல்லா தினங்களின் போதும் நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் என எல்லாவற்றையும் அடிக்கடி நினைத்துப் பார்த்து உயிர்த்திருக்கிறேன் பலமுறை. வழக்கமானதொரு மாலைப்பொழுதில் என் தலை கோதி, உச்சி முகர்ந்து '......ப் போல இருக்கிறாய்' என்று அனிச்சையாய் யாரோ ஒ...

ஏமாற்று வியாபாரிகள்

Image
காய்கறி அங்காடியில் பேரம் முடிந்து விற்றவனும், வாங்கியவனும் விலை அதிகம் எனவும் குறைவு எனவும் சிறு முணுமுணுப்புடன் விலகினர்... இரண்டு சொத்தைக் காய்களைத் தள்ளிவிட்டதில் விற்றவனும் கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும் உள்ளூர மகிழ்ந்த கணத்தில்... கடவுள் தன் கையிலிருந்த தராசையும் எடைக் கற்களையும் வீசியெறிந்து விட்டு நித்திரையைத் தொடர்ந்தார். படம்: இணையத்தில் இருந்து - நன்றி இது ஒரு மீள்பதிவு

சிநேகம்

Image
எப்பொழுதும் தேங்காய்த் தொட்டி தேடி அலையும் கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர் பைத்தியக்காரி. பூ வரைந்த பாவாடையும் பாவாடை வரை நீண்ட மேல் துணியும் ஒரு கையில் அடுக்கி வைத்த தேங்காய்த் தொட்டிகளும் மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக வீதியில் நடந்து கொண்டிருப்பாள். தொட்டியும், கூழாங் கல்லும் எங்கே கிடந்தாலும் ஓடிப் போய் அள்ளிக் கொள்ளுவாள் யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும் கல்லடியும் கிடைக்கும். மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை தான் கண்டெடுக்கும் ஒவ்வொரு தொட்டியிலும், கல்லிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி. (மீள்பதிவு)  

பல்லி வீடு

சுற்றிக் கொண்டே இருக்கின்றன பல்லிகள் வீட்டுக்குள் சிலர் பயப்பட சிலரோ கண்டும் காணாமலும் இருக்கிறார்கள் பேசும் பொழுதோ குளிக்கும் பொழுதோ உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன எங்காவது ஓரிடத்தில் இருந்து.. ஒரு போதும் நம் ரகசியங்களை அது சொல்லிவிடப் போவதில்லை.. இரையை முழுதாக விழுங்குவது போல் ரகசியங்களை விழுங்கியிருக்க கூடும் அல்லது தகுந்த நேரம் பார்த்து காத்திருக்கவும் கூடும் !

விசாரிப்பு

இன்றைக்குத்தான் அந்த அலுவலர் வந்தார் கேள்விகள் கேட்டார் அடிப்படைக் கேள்விகள் முடிந்து 'பிரிட்ஜ் இருக்குங்களா?' - இருக்கிறது என்றேன் 'வாஷிங் மெசின்' - இருக்கிறது என்றேன்  'லேண்ட் லைன்' - அதுவும் இருக்கிறது என்றேன் பாரதி பாப்பாவுக்கு தானே சொன்னார்.. 'சாதிகள் இல்லையடி' என்று மற்றவர்கள் கேட்கலாம், தப்பில்லை... 'என்ன சாதி' - அதையும் சொன்னேன் 'சொந்த வீடா' - அதற்கும் பதில் சொன்னேன் 'அவ்வளவுதான்' என விடைபெற்றார் அவர் ஆமாம், இவ்வளவு கேள்விகள் அரசாங்கம் கேட்கிறது... விலைவாசி உயர்வு, விவசாயி தற்கொலை ஊழல், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கல்வி, அடிப்படைத் தேவைகள் இன்னும் பலவும் என எங்களிடம் ஆயிரமாயிரம் கேள்விகள்... பதில் தருவீர்களா? 

மியாவ் மியாவ்

Image
எங்கிருந்தோ வந்த அந்த வெண் மியாவைப் பார்த்ததும் பையனுக்கு கொண்டாட்டம் மியாவைப் பார்த்ததும் அவனுக்கு சோறு உள்ளே சென்றது மியாவுக்கும் போடச் சொல்ல அதுவும் கொஞ்சம் பசியாறியது பின்னர் அடிக்கடி வந்து போனது இன்னும் கொஞ்ச நாள் கழித்து சின்ன மியாவுடன் வந்து வீட்டைச் சுற்றியது காருக்கடியில், மாடிப்படியில் செடிகளுக்கு அடியில் எனச் சுற்றிக்கொண்டே இருக்கிறது சின்ன மியாவ். அம்மா மியாவ் பார்த்தும் பார்க்காமலும் இருக்கிறது இப்போதெல்லாம் அவனுக்கு சோறு ஊட்டினால் மியாவுக்கும் வைக்கச் சொல்கிறான் நமக்கு பால் விலை எப்போதாவது உறுத்த அவனுக்கோ எப்போதும் மியாவின் பசியே தெரிகிறது. படம்: இணையத்தில் இருந்து : நன்றி

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும் எட்டுக்காலியும் நானும் ஒண்ணு இருவரும் பிழைப்பது வாய் வித்தையால். எட்டுக்காலிக்கு எச்சில் எனக்குப் பொய் இருவரும் வலை பின்னுகிறோம் அது எச்சிலைக்கூட்டி நான் உண்மையைக் குறைத்து எட்டுக்காலி வலை ஜீவித சந்தர்ப்பம் எனது வலை சந்தர்ப்ப ஜீவிதம் எட்டுக்காலிக்குத் தெரியும் எச்சிலின் நீளமும் ஆயுளும் எனக்குத் தெரியும் பொய்யின் தடுமாற்றமும் அற்பமும். வாய் வித்தைக்காரர்கள் இருவரும் எனினும் எட்டுக்காலி என்னைவிட பாக்கியசாலி... சொந்த வலையில் ஒருபோதும் சிக்குவதில்லை அது. -- சுகுமாரன் (ஆனந்த விகடன்) குற்ற மனசு ஆறாயிரத்துக்கு விற்றுவிட்ட பிறகும் ராவோடு ராவாக புதிய எஜமானனின் தொழுவத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து மூச்சிரைத்தபடி வீட்டு வாசலில் வந்து நிற்கிற வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது உறுத்தத்தான் செய்கிறது தனிக்குடித்தனம் வந்தவனுக்கு. --- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்) திருத்தப்பட்ட வருத்தம் இறந்தவன் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான் வாழ்ந்ததற்கு ...

சமூக வலை

Image
மனதில் தோன்றுவதையும் எடுத்த புகைப்படங்களையும் சட்டென்று சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் மகனைப்  பார்த்து, "ஏன், எங்களிடம் நீ ஒன்றையும் சொல்வதில்லை" எனக் கேட்கும் தாயிடம்.. "நீயும் பேஸ்புக்ல லாகின் பண்ணும்மா" எனச் சொல்கிறான் மகன். (படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

நிலம்

Image
எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்தாச்சு இந்த முக்கால் ஏக்கர் நெலத்தோட ஒரு வருசம் வெள்ளாமை வருது அடுத்த வருசம் நட்டம் இப்படித்தான் ரொம்ப வருசம் பொழப்பு ஓடுது. ரொம்ப வருசமா ஊட்ல சோறு, துணிமணி எல்லாம் அளவோடுதான். பாட்டன் வெச்சுட்டுப் போன சொத்து ரோட்டுக்குப் பக்கமா இருந்தது நல்லதாப் போச்சு.. பிளாட் போட வித்தாச்சு போன மாசம்.. நெலத்த வித்து வந்த காசு தர்ற வட்டில இப்போ மூணு வேளையும் சுடு சோறுதான் ஊட்ல.!