ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன்
இந்தச் சிறுகதை தொகுப்பைப் பற்றி அஜிதன் இப்படிச் சொல்கிறார்: "இருண்மையின் ஆன்மிகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு தளங்களில் காட்டிச்செல்பவை." இந்த எல்லாக் கதைகளிலும் அஜிதன் சொன்னது போல ஒரு தரிசனம் என்பது போல முடிகிறது. அது இழப்பு என ஒரு சிலருக்கு தோன்றினாலும், இன்னொருவருக்கு அதுவே வெற்றியாகவும் சென்றடையக் கூடிய ஒரு இடத்தைக் கண்டறிந்ததின் மகிழ்ச்சியையும் நாம் இந்த கதைகளில் காண முடியும். மாரிட்ஜான் உடல் ஜோக்ஜகார்த்தா நகரத்தின் அருகில் இருக்கும் மெராப்பி எரிமலை இருக்கிறது. இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்து கிளம்பி சாம்பலை அள்ளி வீசக்கூடியது. இந்த சாம்பல் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்பட்டு நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடியது. இந்த எரிமலைக்கு அருகில் மாரிட்ஜான் என்னும் மக்களின் தலைவர் வசித்து வருகிறார். வயதான அவர், முன்பும் ஒருமுறை எரிமலை வெடித்தபோது சிறிய காயங்களுடன் தப்பிவிட்டவர். இந்த முறை எரிமலை வெடிக்க துவங்குவதை அறிந்து அரசாங்கம் எல்லோரையும் பத்திரமாக மலையை விட்ட...