Thursday, January 10, 2019

உப்பு வேலி - ராய் மாக்ஸம் (The Great Hedge Of India - Roy Moxham)

உப்பு மிகச் சாதாரணமாக கிடைக்கிறது இப்பொழுது. ஆனால், ஒருகாலத்தில் மிக அதிக வரி விதிக்கப்பட்டு எளியோர் வாங்கமுடியாத விலையில் இருந்த ஒரு பொருள் அது. ஒரு குடும்பத்தின் ஒரு வருடத்துக்கான உப்பின் விலை, ஒருவனுடைய இரண்டு மாத சம்பளமாகும். வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு உப்புக்கு மட்டுமே செலவு செய்யவேண்டிய கொடுமை. 

1750 ஆம் வருடங்களில், கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் ஆட்சியை நடத்திய பிரிட்டிஷ் பிரபுக்கள் உப்பு, பாக்கு போன்றவற்றுக்கு வரியை அதிகப்படுத்தினர். எளிய மக்கள் உப்பை அதிக விலைகொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வரியோடு சேர்ந்த உப்பின் விலை அதிகமாக இருந்ததால், கடத்தல் அதிகரித்து தரம் குறைந்த உப்பு கலப்படம் செய்யப்பட்டு சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகியது. கடத்தலைத் தடுக்க இந்தியாவின் குறுக்காக புதர் மற்றும் மரங்களினால் ஆன வேலி உருவாக்கி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாவடியில் எண்ணற்ற காவல் அதிகாரிகள் பாதுகாப்பில் குறைந்த கூலியில் அமர்த்தப்பட்டனர். 

இந்த புத்தகத்தை எழுதிய ராய் மாக்ஸம் இங்கிலாந்தில் ஒரு பழைய புத்தகத்தில் இந்த வேலியைப் பற்றிய குறிப்பைப் படிக்கிறார். இதற்கு முன்னரே இந்தியாவுக்கு பல முறை வந்திருக்கிறார். எனவே, இந்தியாவைப் பற்றி எந்த ஒரு குறிப்பு அல்லது புத்தகம் கிடைத்தாலும் அதைப் படிக்கிறார். அப்படித்தான் உப்பு வேலி பற்றிய குறிப்பைப் படிக்கிறார். உப்புக்காக ஒரு வேலி என்பது அவரைத் தூண்டுகிறது. பல நூறு மைல்களுக்கு நீண்டிருந்த வேலி இப்பொழுது கண்டிப்பாக சில இடங்களிலாவது இருக்கவேண்டும் என நினைத்து இந்தியா வருகிறார். ஆனால் அவ்வளவு எளிதாக அவரால் அதைக் கண்டறிய முடிவதில்லை. அப்படி ஒரு வேலி இருந்தது என்பதற்கான எந்த தடயமும், எந்த பதிலும் அவருக்கு கிடைப்பதில்லை. திரும்பவும் இங்கிலாந்துக்குச் சென்று , பழைய ஆவணக் காப்பகங்களில் தேடுகிறார். ஒரு சில வரைபடங்கள் அதில் சிக்கினாலும் தெளிவாக எதுவும் இல்லை. ஒரு வரைபடத்தை முன்மாதிரியாக கொண்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்து தன் தேடலைத் தொடங்குகிறார். 


அந்த வரைபடத்தை வைத்து தேட ஆரம்பிக்கிறார். ஆனால் அது இயலாமல் போகவே திரும்பச் செல்கிறார். மூன்றாவது முறையாக, 1998ல் திரும்பவும் வருகிறார். இந்த முறை வேலியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இத்தோடு கைவிட்டுவிடுவதென நினைக்கிறார். ராய் உப்பு வேலியைப் பற்றிய எந்த ஆவணம் என்றாலும் அதைக் குறிப்பெடுத்து வைக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் ஆவணக் காப்பகங்களை பயன்படுத்துகிறார். ஆங்கிலேய அதிகாரிகள் எழுதி வைத்திருந்த குறிப்புகள், அறிக்கைகள் என எல்லாவற்றையும் படித்து இந்தப் புத்தகத்திலும் கொடுத்துள்ளார். ஒரு பெரிய நிறுவனம் செய்ய வேண்டியதை, தனி ஒரு மனிதனாக வேலியைத் தேடி மூன்று வருடங்கள் இந்தியாவுக்கு வருகிறார்.

ஒரு விவசாய நாட்டில் பஞ்சம் என்பது நிகழ முடியாதது. இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு பக்கம் பஞ்சம் என்றாலும் இன்னொரு பக்கம் விளைச்சல் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சம் இருந்தது, மக்கள் இறந்தனர், ஏன் அதற்கு என்ன காரணம் என்பது நம் வரலாற்றில் இருப்பதில்லை. அப்படி ஏழை மக்கள் இறந்து போனதற்கு, அதிக வரியினால் உப்பு பெற முடியாமல் இருந்ததே என நிறுவுகிறார் ராய். உப்பு குறைபாடு என்பது, வெப்ப நாட்டில் மிகுந்த உடல் உபாதைகளை உருவாக்க கூடியது எனச் சொல்கிறார். காலரா போன்ற கொள்ளை நோய்கள் அதிகமான மக்களை இறப்புக்குத் தள்ளியதற்கும் காரணம் உப்பு குறைபாடே எனச் சொல்கிறார்.

இந்திய வரலாறு என்பது எங்கேயும் ஆவணமாக இருப்பதில்லை. நம் கல்வி நிலையங்களும், பேராசிரியர்களும், பல்கலைக் கழகங்களும் புத்தகத்தில் படித்து இன்னொரு புத்தகத்தையே உருவாக்குகின்றனர். இந்த உப்புவேலியை ஒரு அயல் நாட்டவர் வந்து தேடுகிறார். நமக்கு அதைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. அவர் தேடும்பொழுது செயற்கைக்கோள் மூலமாக படம் பிடித்து தரும் ஒரு அரசு நிறுவனத்தை அணுகுகிறார். அவ்வாறு படம் கிடைத்தால், மரங்கள் செறிவாக இருக்கும் பகுதியை அறிந்துகொள்ளலாம் என முயல்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்க, ராய் அதை மறுத்து தானே சுற்றி தேட ஆரம்பிக்கிறார். உண்மையில் அந்த அரசு நிறுவனம் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமல்லவா?. ஆனால் அப்படிச் செய்யமாட்டார்கள்.


இந்தப் புத்தகத்தில் ராய், மகாத்மா காந்தி ஏன் உப்பு சத்தியாகிரகம் செய்ய தண்டி யாத்திரை செய்தார் என தரவுகளோடு விளக்குகிறார். நில வரி மற்றும் வணிக வரிக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என தனது கட்சி குழுவினர் தெரிவித்தாலும், ஏழை மக்களைப் பாதிக்கும் உப்பு வரியே முதன்மையாக நீக்க வேண்டும் என போராட ஆரம்பிக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால், உப்பு வரியை பிரிட்டிஷார் நீக்கம் செய்யாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டும் வரியை நீக்குகின்றனர். காந்தி கதர் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என அடுத்தடுத்து நகர்கிறார். இந்திய வரலாற்றில் பிரிட்டிஷாருக்கு பெரும் வருவாயையும், ஏழை மக்கள் மாண்டு போவதற்கும் காரணமாக இருந்த உப்பு வரி இந்தியா விடுதலை பெறுவதற்கு ஆறு மாதம் முன்னர்தான் நீக்கப்பட்டது. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்க முக்கியமான ஆளுமையாக இருந்தவர் ஹியூம் (Allan Octavian Hume). ராய் புதர் வேலியை கண்ட இட்டவா மாவட்டத்தில் ஹியூம் ஆங்கிலேயப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர் அவர் சுங்கத் துறையிலும் பணிபுரிகிறார். அவருக்கு கீழ்தான் இந்த சுங்க வேலியும் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய நாட்குறிப்புகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வேலி பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பணி ஓய்வுக்குப் பின்னர், தேசிய காங்கிரஸ் அமைக்கிறார். காங்கிரஸ் ஆரம்பித்த பின்னர் 25 வருடங்கள் கழித்தே காந்தி உள்ளே வருகிறார். உப்பு யாத்திரை தொடங்குகிறார். 

ஆக்ரா, ஜான்சி போன்ற இடங்களில் வேலி சென்றதற்கான எந்த அடையாளங்களும் இப்போதில்லை. அந்த வேலி இருந்த இடங்களில் அதனை ஒட்டிய விவசாய நிலங்களுடன் உழுது சேர்க்கப்பட்டிருந்தன அல்லது அதன் மேல் சாலை போடப்பட்டிருந்தது. மண்ணைக் கொட்டி உயரமான இடத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் அமைக்க வசதியாக இருந்திருக்கிறது. சளைக்காமல் தேடுகிறார் ராய். அதைக் கண்டுபிடிக்கும் நாளும் வருகிறது. இட்டவா என்னும் மாவட்டத்தில் சம்பல் மற்றும் யமுனை நதிகளுக்கு இடையில் உள்ள கிராமத்தில் (பலிகர் கிராமம்), ஒரு முதியவர் இன்னும் மீதியுள்ள வேலியைக் காண்பிக்கிறார். சம்பல் கொள்ளைக்காரர்களுக்கு பேர் போன இடம். எதற்காக மூன்று வருடங்கள் தேடினாரோ, இன்று அதைக் கண்டடைந்துள்ளார் ராய்.   

ராய் இப்படிச் சொல்கிறார்; "கடந்த மூன்று வருடங்களில் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் சிறிது தெரிந்துகொண்டேன். ஆங்கிலேயரின் இந்தியா குறித்து அதிகம் தெரிந்துகொண்டேன். முதலில் நான் ஒரு ஆங்கில மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன். அது உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகம் என்று கண்டடைந்து அதிர்ச்சியுற்றேன். "

உப்பு வேலி 
ராய் மாக்ஸம் (Roy Moxham)
தமிழில்: சிறில் அலெக்ஸ் 
பதிப்பு: எழுத்து 
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியைக் கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளனின் தேடல். 



Friday, January 4, 2019

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாத்ரிக்குட்டி என்னும் பெண்ணால் கேரள மாநிலத்தில் புயல் வீசியது. சடங்குகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு எதிராக இருந்த காலகட்டம். பெண்கள் மார்பின் மேல் போடும் சீலைத்துணிக்கும் வரி விதித்த கொடுமை நடந்த காலம். 

அந்தக் காலத்தின் சாட்சியாய் வரலாற்றில் வாழ்ந்து வருகிறாள் தாத்ரி. தாத்ரிக்குட்டியை சிலர் கலகக்காரியாகவும், சிலர் கீழ்ப்பிறவியாகவும் எண்ணினர். அவ்வாறு அவர்கள் நினைக்க என்ன காரணம்?. 

கேரளாவின் நம்பூதிரி குடும்பங்களில், குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே சொத்துக்கு அதிபதி. போலவே மூசாம்பூரி என்றழைக்கப்படும் மூத்த மகன் மட்டுமே, மற்ற நம்பூதிரிக் குடும்பங்களில் உள்ள பெண்ணை மணக்க முடியும். மற்ற ஆண்பிள்ளைகள் வேறு சாதிப் பெண்களைத்தான் மணக்க வேண்டும். இதனால், நம்பூதிரி குடும்பங்களில் கல்யாணமாகாத பெண்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர். ஒரு மூத்த நம்பூதிரிக்கு பல பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். போலவே, சிறு வயது பெண்ணானாலும், வயதான நம்பூதிரிக்கு வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

கல்யாணம் செய்து கொண்டு நம்பூதிரி கணவன் வீட்டுக்கு வரும் பெண் வேறு ஆண் மக்களுடன் பழக கூடாது. அப்படித் தொடர்பு வைத்திருப்பதாக அறிந்தால், ஸ்மார்த்தர்கள் எனப்படும் சபை அவளை விசாரிக்கும். தனியறையில் அடைத்து வைத்து விசாரணை செய்வார்கள். விசாரணை செய்வதை 'ஸ்மார்த்த விசாரம்' என அழைத்தார்கள். இதற்கு அப்பொழுது ஆண்ட மகாராஜாக்களின் அனுமதியும் உண்டு. விசாரணை முடிவில், பெண் மேல் தவறிருப்பதாக நிரூபித்தால் பெண்ணை வீட்டை விட்டு ஒதுக்கி, பிண்டம்(இறந்தவளாக நினைத்து செய்வது) வைத்து விடுவார்கள். அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவனை(வைத்திருந்தவர்களை), குலத்தை விட்டு நீக்கி(பிரஷ்டு) ஊரை விட்டு அனுப்பிவிடுவார்கள். 

இந்த 'ஸ்மார்த்த விசாரம்' அமைப்பைத்தான் தாத்ரிக்குட்டி ஆயுதமாக பயன்படுத்தினாள். பெண்களைத் தண்டிக்க ஏற்படுத்திய இந்த அமைப்பின் விதிகளைத் திருப்பி, அவ்விதிகளை உருவாக்கிய ஆண்களின் மீதே ஏவினாள். அவர்களைப் பழிவாங்கவும் செய்தாள். விதிகளை மீறமுடியாமல் அவர்கள் பலிகடா ஆனார்கள். தாத்ரிக்கு முன்பும், பல நம்பூதிரிப் பெண்கள் விசாரத்துக்கு உட்பட்டிருந்த போதிலும், அவற்றில் ஆண்கள் தண்டனைக்கு ஆட்பட்டது குறைவு. தாத்ரி விசாரத்திலே, 64 ஆண்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். 

*****

பெண்கள் கல்விபெறாத அந்தக் காலத்தில் தாத்ரிக்குட்டி கற்றவளாக இருந்தாள். அவளைக் கல்யாணம் செய்தது குரியேடத்து நம்பூதிரி. மூத்த நம்பூதிரி திருமணம் செய்ய முடியாமல் நோயாளியாக இருந்தால், சில விதிகளின் படி இரண்டாம் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள முடியும். அவ்வாறு இரண்டாம் நம்பூதிரியை மணந்து குரியேடத்து இல்லத்துக்கு வந்தவள் தாத்ரி. முதலிரவில் தன் கணவனுக்காக காத்திருந்தவளிடம், அவளை அடைய வருகிறார் அவளின் அப்பா வயதுள்ள மூத்த நம்பூதிரி. அப்பொழுதே அவள் நொறுங்கிப்போகிறாள். ஆண்களைப் பழிவாங்க வேண்டும் என அவள் அப்பொழுதே நினைத்திருக்கலாம். 




நம்பூதிரிப் பெண்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் உண்டு. அவர்கள் தாசிகள் என அழைக்கப்பட்டனர். வெளியே போனால், தாசிகள் சூழக் குடை பிடித்துக்கொண்டு, முகத்தை முக்காடிட்டுத்தான் செல்ல முடியும். நம்பூதிரிப் பெண்களை விசாரிக்க வேண்டுமானால், யாராவது ஒருத்தர் புகார் சொல்ல வேண்டும். அப்படிப் புகார் சொல்கிறார், குரியேடத்து மனைக்கு அடுத்த வீடான கண்டஞ்சாத நம்பூதிரி. தாத்ரியே அவரிடம், புகார் சொல்லச் சொன்னதாக சொல்கிறார்கள். புகார் கொடுத்த பின்னர் பணிப்பெண்களான தாசிகளிடம் விசாரணை (தாசி விசாரம்) நடைபெறுகிறது. அதில் உண்மை இருந்ததால், தாத்ரியை அறைக்குள் அடைக்கிறார்கள். அவள் இனிமேல் 'சாதனம்' என்று அழைக்கப்படுவாள். அவளிடம் விசாரித்து தப்பு செய்த ஆண்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை சபை கேட்கும். அனைத்தும் சரியாக இருந்தால் அந்த ஆண்மகன் பிரஷ்டு செய்யப்படுவார். 

தாத்ரியின் விசாரம் நாற்பது நாட்களுக்கு நீள்கிறது. தாத்ரி கொலை செய்யப்படக்கூடும் என்றெண்ணி ஒரே இடத்தில் நடக்காமல் மூன்று இடங்களில் விசாரம் நடக்கிறது. மிகச் சரியாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை அடையாளம் காட்டுகிறாள். அவ்வாறு அறுபத்திநான்கு ஆண்களைச் சொன்னதும், அறுபத்தியைந்து ஆளைச் சொல்லாமல் ஒரு மோதிரம் மட்டும் காட்டுகிறாள். அந்த மோதிரத்தைப் பார்த்ததும் கொச்சி ராஜா உட்பட ஸ்மார்த்தர்கள் அனைவரும் ஆடிப்போகிறார்கள். தாத்ரி அதோடு முடித்துக்கொள்கிறாள். 

64 ஆண்களில், தாத்ரியின் தந்தை சகோதரர் கணவன்மார் உட்பட, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் பலரும் இருக்கிறார்கள். நல்லவர்கள், பெரிய மதிப்பு மிக்கவர்கள், பணக்காரர், ஏழை என தாத்ரி யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை. அதனால்தான் அவளைச் இச்சமூகம் இழிந்தவளாக தன் வரலாற்றில் இழிவுபடுத்துகிறது. 64 பேரில் இருவர் முன்னமே இறந்து போயிருந்ததால், மீதி உள்ளவர்கள் பிரஷ்டு விதிக்கப்படுகிறார்கள். தாத்ரிக்கு ஒரு ஆற்றின் கரையில் கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுக்கப்படுகிறாள். 

****

அதற்குப்பின்னர் தாத்ரிக்குட்டி ஒருவரை மணந்ததாகவும், அவளுக்குப் பிள்ளைகள் பிறந்ததாகவும் செவிவழி செய்திகள் உலவுகின்றன. 

தாத்ரி, அவளது விசாரத்துக்குப் பின்னர் சில சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறாள். நம்பூதிரிப் பெண்களுக்கான சங்கம் ஒன்று நிறுவப்பட்டு, அதில் அவர்களின் நலனை முன்னிறுத்துகிறார்கள். நம்பூதிரி குடும்பச் சொத்துக்களின் மீதும் சில கட்டுப்பாடுகளை நீக்குகிறார்கள். 

****

பிரஷ்டு செய்யப்பட்டவர்களில், ஒரே ஒருவரே தன் மேலிருந்த பழியை நீக்க முனைகிறார். அவர் கதகளி கலைஞரான சங்கரப்பணிக்கர். பிரஷ்டு செய்யப்பட்டதால், அப்போதைய ரசிகர்களான நம்பூதிரிகள், மகாராஜாக்கள் சூழ்ந்த அவையில் அவர் ஆட முடியாது. எனவே, ஏழை மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில மாற்றங்களை தன் ஆட்டத்தில் செய்கிறார். தாத்ரி கலகத்தால் விளைந்த நன்மை என இதைச் சொல்கிறார்கள்.  பல வருடங்களுக்குப் பின்னர் பெரும்பெயர் பெற்ற அவர், ராஜாவின் முன்பும், பிரஷ்டை நீக்கி அரசவையில் ஆடுகிறார். 

****

தாத்ரிக்குட்டியின் குரல், சென்ற நூற்றாண்டில் தன்னை அடக்கி வைத்து ஆண்ட ஆண்களுக்கு எதிரான ஒரு தனித்த கலகக்காரியின் குரல். 

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதியதை யூமா வாசுகி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.