Wednesday, March 25, 2020

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்

ஒரே ஒருவரின் மாத சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, ஒரு தொழில் ஆரம்பித்து பின்னர் செல்வச் செழிப்பில் வாழும்போது அந்த மகிழ்ச்சி கிடைக்காத ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் அவ்வளவு எளிதாக இந்த சிறு நாவலைச் சொல்லமுடியாது. கதையில் வரும் கதை மாந்தர்களும் சாதாரணமாக சித்தரிக்கப்படவில்லை. 

அப்பா, அம்மா, மகன், மகள் மற்றும் சித்தப்பா என சிறிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவரான அப்பாவின் வருமானத்தை நம்பியே எல்லோரும் இருக்கிறார்கள். ஒருநாள் அப்பாவின் வேலை இல்லாமல் போக, சித்தப்பா தொழில் தொடங்கலாம் என்கிறார். அப்பாவின் பணியிலிருந்து வந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒரு மசாலா கம்பனி ஆரம்பிக்கிறார்கள். அப்பாவும், சித்தப்பாவும் தொழிலில் பங்குதாரர்கள். 




தொழில் நன்றாக செல்ல பணவரவும் வருகிறது. புது வீடு, பொருட்கள் என வேண்டியதை வாங்குகிறார்கள். சித்தப்பா மட்டுமே தொழிலை கவனித்து கொள்கிறார். கதையின் நாயகனான மகனும், பெண் பிள்ளையான மைதிலியும் இப்பொழுது பெரிய பிள்ளைகள். சித்தப்பா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி குடும்பத்தினர் யாரும் அவரைத் தொந்தரவும் செய்வதில்லை. அவருக்கென தனி குடும்பம் அமைந்துவிட்டால் பின்னர் அவர் நம்மைக் கவனிக்க மாட்டார் என்கிற பயம் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. 

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்தல் எனச் சொன்னாலும், சில சமயங்களில் நியதிகளுக்கு உட்பட்டு கட்டாயமாக குடும்பத்தில் வாழ நேரிடலாம். வேறு வழியில்லாமல் இங்கே, இப்படி இருக்கிறோம் நினைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ நேரிடலாம். நாயகனின் அக்காவான மைதிலி, திருமணம் செய்து, கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறாள். தன்னைத் தலைமேல் வைத்துத் தாங்க தனது குடும்பம் இருக்கிறது என மைதிலி நினைக்கிறாள். அவ்வாறே அவளை நடத்துகிறார்கள். 

நாயகனுக்கு தனியாக எந்த வேலையும் கம்பெனியில் இல்லை. மாதமானால் ஒரு தொகை அவனின் வங்கி கணக்குக்கு வந்துவிடும். மசாலா கம்பெனிக்கு அவன் செல்லாமலே சம்பளம் அனுப்பப்படுகிறது. சித்தப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். அனிதா என்னும் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். முதலில் அனிதாவுக்கு ஒன்றும் தெரியாமலிருக்க, போகப்போக அந்த வீட்டின் நிலைமை புரிகிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து வந்து குடும்பம் நடத்தினால்தான் அது நேர்மை, கவுரவம். இப்படி இன்னொருவர் தயவில் என்னால் வாழ முடியாது என்கிறாள். அவனும் சரி, நான் கம்பனிக்குப் போகிறேன் என்று சொல்ல நினைக்கிறான். ஆனால், அங்கே தனக்கு என்ன வேலை இருக்கும், சரி இது நம்ம கம்பெனி தானே, நமக்கும் பங்கு உண்டே என்றெல்லாம் சொல்லிப்பார்க்கிறான். ஆனால் அனிதா சமாதானம் ஆவதில்லை. 

சித்தப்பா திருமணம் செய்யாமல் இருப்பது, அனிதாவுக்கு வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பதை கேள்வி கேட்கிறாள். சித்தப்பாவைத் தேடி ஒருநாள் ஒரு பெண் வீட்டுக்கு வருகிறாள். அவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள். ஆனால் யாரும் அவளை உள்ளே விடுவதில்லை. 'வெங்கா.. நான் டுவ்வி வந்திருக்கேன்' என்று அவள் கூப்பிடும்போது கூட அவர் வெளியே வருவதில்லை.  அவருக்கு நன்கு பிடித்த மசூர் பருப்பு குழம்பை மட்டும் அவரிடம் தந்துவிடுங்கள் எனக் கெஞ்ச, அம்மா அதை வாங்கி வெளியே வீசிவிடுகிறாள். அந்தப்பெண் அழுதுகொண்டே போய்விடுகிறாள். அனிதாவுக்கு இது எதுவும் பிடிப்பதில்லை.  இரண்டு வாரம் கழித்து திரும்புவதாக சொல்லிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் அனிதா. 

கதையின் நாயகன் அடிக்கடி செல்வது ஒரு காப்பி அருந்தும் இடத்திற்கு. ஒரு நாளின் பெரும்பான்மையான இடங்களை அங்கேயே கழிக்கிறான். அங்கே வின்செண்ட் என்னும் சர்வர் பணிபுரிகிறார். நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு ஏதேனும் ஒருசில வார்த்தைகளில் அவன் தீர்வு தருகிறான். அவன் முழுதையும் சொல்லாமலே வின்சென்ட் எப்படி தீர்வு தருகிறான் என்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறான். 

கதைக்கு முடிவு என ஒன்றும் இல்லை. ஆனால், அனிதா ஊருக்கு சென்றிருக்கும்பொழுது, அப்பா, அம்மா, மைதிலி, சித்தப்பா மற்றும் அவன் ஆகியோர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு ஒருவகையில் எப்படி கொலை செய்வது, அதை எப்படி மறைப்பது, ஊரில் உள்ள ரவுடிகள் இதை எப்படிச் செய்கிறார்கள் எனப் பேசுகிறார்கள். அப்பா, இதை பற்றி பேச வேண்டாம் என எழுந்து செல்கிறார். 

அனிதா இரண்டு நாட்கள் முன்னரே வந்திருக்க வேண்டும். ஒரு தகவலும் அவளைப்பற்றி இல்லை. அவன் காபி கவுஸில் உட்கார்ந்து யோசிக்கிறான், அவள் ஏன் இன்னும் வந்து சேரவில்லையென்று. 

ஓரிடத்தில் சர்வர் வின்சென்ட் சொல்வான் 'ஒரு கதைக்கு பல பரிமாணம் இருக்கும்' என்பான். அதுபோல இந்தக் கதைக்கும் பல கோணங்கள். 

இந்த நாவலின் தலைப்பு, வித்தியாசமான ஒன்று. அதற்கான காரணமும் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. கன்னடத்தில்  இருந்து கே.நல்லதம்பி அவர்கள் இந்நூலை தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.