Friday, February 25, 2011

நிறம், அழகு மற்றும் சிவப்பழகு கிரீம்கள்

பெண் தேடும் படலத்தில், நல்ல குடும்பம், படிப்பு என்று தாண்டி 'நல்ல சிவந்த நிறமுள்ள பெண் தேவை' , குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை என்ன கலர்?'. குழந்தையின் எடை, ஆரோக்கியம் பற்றி ஒரு கேள்வியுமில்லை. கல்யாணத்துக்குப் போனால், 'பெண் / மாப்பிள்ளை மேட்ச் சரியில்லை. எங்க இருந்து தான் மாப்பிள்ளை / பொண்ணு பிடிச்சாங்களோ' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

சரி விட்டுத் தள்ளுங்கள், சினிமாவில் கூட அழகான நல்ல கலரான (இல்லை மேக்-அப் போட்டுக்கொண்டு) பெண்களே காணக் கிடைக்கிறார்கள். கிராமப் படம் என்றால் இயக்குனரைப் பொருத்து கலர் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்கப் படுகிறது.

அப்படி என்றால் அழகில்லாதவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கும் வழி உண்டாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில், தொடர்களுக்கு மத்தியில், சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. தனது தோலின் நிறம் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம் போல் சொல்கிறார்கள். அது எப்படி ஒரே வாரத்தில், ஸ்லைட் மாற்றுவது போல மின்னுகிறார்கள் எனத் தெரிவதில்லை. அதன் பின்னர் திரும்பிப் பார்க்காத ஆடவரெல்லாம் முக ஒளி பட்டு கீழே விழுந்து தொலைக்கிறார்கள்.



ஆண்களுக்கும் சிவப்பழகு கிரீம்கள் உண்டு. 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு' என்று பாடல் இருந்தாலும், அதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளுவதில்லை. எப்படி சிவப்பழகு க்ரீம்களை உபயோகப் படுத்திய பெண்ணின் பினனால் ஆடவர் செல்கிறார்களோ, அதுபோலவே அது போன்ற க்ரீம்களை உபயோகப் படுத்தும் ஆடவன் பின்னாலும் பெண்கள் செல்கிறார்கள்.

இன்னும் சில நிபுணர்கள் அவ்வப்பொழுது வந்து, வெள்ளரி, முட்டை என்று சிபாரிசு செய்கிறார்கள். சாப்பிட அல்ல, முகத்தில் தேய்க்க. க்ரீம்களை விட இந்த இயற்கை பொருட்கள் எவ்வளவோ மேல்.

உங்கள் நிறம் எதுவாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியமான உடலே உங்களைப் பற்றிச் சொல்லும். எனவே, வெய்யில் காலம் ஆரம்பமாகி விட்டது. நிறைய தண்ணீர் குடியுங்கள். வெள்ளரி, தர்ப்பூசணி போன்ற நீர்ச் சத்து நிறைந்த வகைகளை நிறையச் சாப்பிடுங்கள். ஜொலிக்கும் அழகு உங்களுக்கே.

படம்: இணையத்தில் இருந்து - நன்றி.


Wednesday, February 23, 2011

தேர்வு




















மூன்றாவது முறையும்
அட்டெம்ப்டில் தோல்வியடைந்த
பக்கத்துக்கு ஊர்ப் பையனின்
தற்கொலைக்குப் பின்,
தேர்வில் அதிக மதிப்பெண் பெற
வேண்டுமெனச் சொல்லிய
அப்பாவும் அம்மாவும்
'உன்னால முடிஞ்சத படி'
'மார்க் வரலேன்னாலும் பரவால்ல'
'பெயில் ஆனாலும் கவலப்படாதே'
எனச்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


படம்: இணையத்தில் இருந்து. நன்றி


Thursday, February 17, 2011

சிறு துளிகள் (17/02/2011)

பிரகதீஸ்வரன்

முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக்கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக் கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான்.

ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதை தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்கறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்'னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா?. இதைதான் மேடையில் நாடகமாகப் போடுறோம்.

- 'பூபாளம்' பிரகதீஸ்வரன் , சென்ற வார ஆனந்த விகடனில். (நன்றி: ஆனந்த விகடன்)

அதிகாரம், பதவி

ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, ஒரு பிரச்சினைக்காக அவர்களின் பதவி மற்றும் அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வளவோ செய்யலாம். மத்தியில் வேறு கூட்டணி ஆட்சியோ, அல்லது அந்த உறுப்பினர் எதிர் கட்சியாக இருந்தால் அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் செய்வார்கள். ஆனால், இங்கே அவர்களே ஆட்சி செய்து கொண்டு, அவர்களே உண்ணாவிரதம் இருந்துகொண்டு, அவர்களே போராட்டக் கைதும் ஆகிக் கொண்டு.... இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்

தமிழ் வளர்ச்சி

போன வாரத்தில் ஒருநாள் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அரசு ஊழியர்களிடம் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் யார் எனக் கேட்டிருக்கிறார் ஒரு அதிகாரி. ஒருவரும் சொல்லாமல் இருக்க, அவரே 'இந்த துறை ஏற்படுத்த பட்ட பொழுது தமிழ்குடிமகன் அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் தற்பொழுது நமது முதல்வரே இந்த துறைக்கும் அமைச்சர்' என்று கூறியிருக்கிறார். தமிழ் வளர்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், தமிழ் இனத்துக்கென்று ஒரு அமைச்சரேனும் இருக்கிறாரா? .

கல்யாண நாள்

காதலர் தினம் வேண்டும், கூடாது என்று நிறையக் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது காதலர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். காதல் என்பது ஏதோ வேற்று நாட்டிலிருந்து வந்தது போல பாவிக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து காதல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கே காதலர்கள் என நான் சொல்வது, இனம், தகுதி, அழகு ஆகியவற்றைப் பார்க்காமல் காதலிக்கும் காதலர்கள் பற்றி. இப்படிக் காதலிக்கும் காதலர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். மேம்போக்காக காதலித்து கொஞ்ச காலத்தில் பிரிந்து விடும் 'அவசர மனிதர்களை' விட்டுத் தள்ளுங்கள், உண்மையான காதலர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிற்க. 'நானெல்லாம் காதலிக்கவில்லை, எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.. எனக்கெல்லாம் எதுக்கு காதலர் தினம்' என அலுத்துக் கொள்பவரா நீங்கள்?. உங்களுக்காகவே "கல்யாண நாள்" என்று ஒரு நாள் இருக்கிறதாம். இந்த நாளைப் பற்றி பகரிந்து கொண்ட பதிவர் திருமதி.சித்ரா அவர்களுக்கு எனது நன்றிகள். அந்த பதிவு கல்யாணம்தான் கட்டிக்கிட்டு. அடுத்த வருடத்திலிருந்து கொண்டாடிடுவோமா?, இதுக்கும் யாராவது 'இது அந்நிய நாட்டின் இறக்குமதி', 'கலாச்சாரம், பண்பாடு' என்று திட்டுவார்களோ, இல்லை 'கல்யாணம் ஆன பெரியவர்கள்' என்ற மரியாதையில் விட்டு விடுவார்களோ?. பார்க்கலாம்.


Tuesday, February 15, 2011

ஒரு படம்

ஒரு படம் ஓராயிரம் செய்தி சொல்லும் என்பார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் இப்போதைய நிலை இது.




எல்லோரும் நகரங்களை நோக்கிப் பயணிக்க, கடைசிக் காலத்தில் ஒற்றையாய் இருந்த கிழவியும் போய்சேர, மிச்சம் மீதி இருந்த ஓடுகளையும் சட்டங்களையும் விலை பேசி விட்டுப் பிரித்து விட்டனர். இன்னும் சில வருடங்களில் மொத்தமாக சாய்ந்து விடும் அல்லது இப்பொழுது சாய்ந்திருக்க கூடும்.

அதன் பின்னர் அங்கே மழைக்காலத்தில் புற்களும் செடிகளும் வளரக் கூடும். புதராகவும் மாறலாம். பதேர் பாஞ்சாலி இறுதிக் காட்சியில் வருவதைப் போல அங்கே பாம்புகளும் வசிக்க கூடும்.

Thursday, February 10, 2011

சுவரேறிக் குதிப்பது திருடன் மட்டுமில்லை

இரவு 9.40 - க்கு கோடம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், நிலை கொள்ளாத அவசரத்தில், நீண்டு கிடக்கும் கருந் தண்டவாளங்களில் எலெக்ட்ரிக் ரயிலின் முக வெளிச்சம் வருகிறதா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். எப்போதும் இப்படி இருப்பதில்லை. எப்படியும் கால் மணி அல்லது இருபது நிமிடத்தில் ஏதாவதொரு வண்டி வந்து விடும். இன்று என்ன பிரச்சினையோ அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை. கலைந்து கிடக்கும் பயணிகள் கூட்டம் கூடி விட்டது. தொடர்ந்து செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை கணவனோ அல்லது மனைவியோ, குழந்தைகளோ, அப்பா அம்மாவோ 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என நச்சரித்துக் கொண்டிருக்கலாம்.

என்னைப் போல இவர்களும் லேட்டாகப் போனால் அவர்களது வீட்டின் கேட் திறந்திருக்குமா?. ஆனால், எங்கள் வீட்டு உரிமையாளர் கண்டிப்பாக நடையைச் சாத்தியிருப்பார். இந்த மாநகரத்துக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே நண்பர்கள் குமார், ரமேஷ் இருந்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், மூன்றாவதாக நானும் சேர்ந்து கொண்டேன்.



நான் அங்கே பெட்டி, படுக்கையுடன் போனதும், எனது அலுவலக முகவரி, வீட்டு முகவரி, போடோவுடன் கூடிய அடையாளச் சான்று என நண்பன் வாங்கி வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டான். எதற்கு என்று கேட்டதற்கு, 'போலீஸ் வந்து கேட்டா, குடுக்கறதுக்கு அப்படின்னு சொன்னாரு' என்றான் நண்பன். அப்புறம் ஒவ்வொரு கன்டிசனாய் சொன்னார்கள். 'நைட் பத்து மணிக்குள்ள வந்துடனும், பத்தே காலுக்கு கேட் பூட்டிருவாங்க.. காலைல எட்டு மணிக்குள்ள குளிச்சிடனும், அதுக்கு மேல தண்ணி வராது.. வாரத்துல ஒரு தடவதான் தொவைக்கணும்.. ப்ரெண்ட்ஸ் யாரும் வந்து நைட் தங்க கூடாது..'. கேட்டதும் தலை கிர்ரென்றது.

இந்த ஒரு மாதமாக எப்படியும் அடித்து பிடித்து பத்து மணிக்குள் எப்படியும் கேட் முன்னாடி ஆஜர் ஆகிட்டேன். இன்னைக்குன்னு பார்த்து ப்ராஜெக்ட் ஹெட் எட்டு மணி ஆகியும் விடவில்லை. கிளம்புவதற்கு ஒன்பது மணி ஆனதென்றாலும், குரோம்பேட்டை போக எப்படியும் மீறிப் போனால் பத்து மணிக்குள்ளாக போய்விடலாம் என நினைத்து வந்தால், வண்டி இன்னும் வந்து சேரவில்லை. 9.40 ஆகியும் இன்னும் கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தது வண்டி. வண்டியில் உள்ள கூட்டத்தை பார்த்தால், ஒவ்வொரு ஸ்டேசன்லயும் நிறுத்தி எடுக்க எப்படியும் மூணு நிமிசத்துக்கு மேல ஆகும். இன்னைக்கு எப்படியும் லேட் தான் என முடிவு பண்ணிக் கொண்டு குமாருக்கு கூப்பிட்டால், "நான் இன்னும் ஆபீஸ்ல தாண்டா இருக்கேன், ரூமுக்கு காலைலதான் வருவேன். நீ ரமேஷுக்கு கூப்பிட்டு சொல்லிடு. அவன் வீட்டு ஓனர் கிட்ட கேட் சாவி வாங்கி வெச்சிடுவான்" என்றான். ரமேஷுக்கு கூப்பிட்டால், செல் சுவிட்ச் ஆப் என்றது. திரும்ப குமாருக்கு கூப்பிட்டேன். "டேய்.. பேசாம கேட் ஏறிக் குதிச்சிடு.. நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அப்படிதான் குதிச்சேன்.." என்றான். "சரி.. போன வை" என்று கட் பண்ணினேன்.

கிண்டி தாண்டியதும் கூட்டம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. படுபய, என்னமோ ஹார்லிக்ச அப்படியே சாப்பிடுவேன்னு சொல்லுற மாதிரி கேட்ட தாண்டிடு அப்படிங்கிறான். அவ்ளோ பெரிய கேட்ட எப்படி எட்டிக் குதிக்கிறது. அப்படியே குதிச்சு யாரவது பார்த்துட்டா, அடுத்த நாள் ஜெயில்ல தான் கம்பி எண்ணனும். சரி யாரும் பார்க்கலைன்னு வெச்சுகிட்டா கூட, அந்த நாய் வேற இருக்குது. எப்பவும் வரும் போதும், போகும்போதும் வள்ன்னு கத்தும். என்னதான் சங்கிலில கட்டி வெச்சிருந்தாலும், அது போடுற சத்தத்துல யாராவது வந்துட்டா?. இங்க வேலைக்கு வந்து இந்த கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்கனும் போல இருக்குதுன்னு நெனச்சிட்டு இருக்கும்போதே, பல்லாவரம் தாண்டிருச்சு. அடுத்து குரோம்பேட்டைதான்.

நேரம் 10.25 ஆகி இருந்தது. சரி எதுக்கும் ரமேசுக்கு கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்து கூப்பிட்டால் ரிங் போனது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, "ஹலோ" என்றேன் நான். பதிலில்லை. திரும்பவும் "ஹலோ.. ஹலோ.." என்றேன். ம்ஹூம். தொடர்பைத் துண்டித்து, திரும்பவும் கூப்பிட்டால்.. 'நாட் ரீச்சபிள்' என்றது. அதற்குள் குரோம்பேட்டை வந்துவிட, இறங்கி படிகளில் ஏறினேன். 10.30 ஆகிவிட்டது.

திரும்ப அவனுக்கு முயற்சி செய்ய, அவன் "டேய்.. எங்கடா இருக்கே.." என்றான்.

"உன்னோட செல் என்னாச்சு.. சுவிட்ச் ஆப் னு வந்துச்சு.."

"இல்லடா.. பாட்டரி டவுன். அதுனால சார்ஜ் போட்டிருந்தேன். ஆபீஸ்ல இருந்து நானும் லேட்டா தான் வந்தேன். நீ கூப்பிட்டப்போ, உன்னோட வாய்ஸ் சரியா கேக்கல. சிக்னல் வேற கிடைக்கல" என்றான்.

"சரி எங்க இருக்கே?" என்றான்.

"எங்க இருப்பேன், ரூமுக்கு வந்துட்டு இருக்கேன். ஆமா, அந்த ஆள் கேட்ட பூட்டிட்டாரா?"

"அதெல்லாம் கரெக்டா, நீ சொல்லிருந்தா நான் சாவி வாங்கி வெச்சிருப்பேன்"
"போடா.. நீயும் உன்னோட செல்லும்.. இப்போ என்ன பண்ணுறது" என்றேன் நான்.

"சரி வா பார்த்துக்கலாம்.. நான் கீழ எறங்கி வர்றேன்"

"சரிடா" என்று போனை வைத்தேன்.

எப்போதும் பிசியாக இருக்கும் மார்கெட்டில், எல்லாக் கடைகளும் பூட்டி விட்டார்கள். கடைகளின் வாசலில் நாடோடிகள் போர்வையை விரித்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டு மூன்று மாடுகள் காய்கறி கடைகளின் கழிவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. பகல் பூராவும், சுவரொட்டிகளை மேயும் மாடுகளுக்கு கொஞ்சம் பச்சை இரவில்தான் கிடைக்கும் போல. மாரியம்மன் கோவிலுக்கு பெரிய கேட் போட்டு, மூன்று பெரிய பூட்டுகள் மேலிருந்து கீழாக தொங்கிக் கிடந்தன. காக்கும் சாமிக்கும் இவ்வளவு பெரிய கேட் தேவை என்றால், எங்கள் வீட்டு ஓனருக்கு கேட் தேவைதானே?

வீட்டுக்கு பக்கமாக வந்து விட்டேன். நாயின் சத்தம் தெரு முக்கு வரை கேட்டது. ரமேஷ் முழித்துக் கொண்டிருபதற்க்கு அறிகுறியாக, மேல உள்ள எங்கள் ரூமில் வெளிச்சம் இருந்தது. கீழே ஒரு சீரோ வாட்ஸ் பல்ப் மட்டும் தர்மத்துக்கு எரிந்து கொண்டிருந்தது. கேட் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டில் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கேட் பக்கத்தில் வந்தான். கேட்டின் இடைவெளியில், "ஏண்டா.. இவ்ளோ லேட்" என்றான்.

"அந்தக் கதைய அப்புறம் பேசலாம்.. மொதல்ல நான் எப்படி உள்ள வர்றது" என்றேன்.

"ஷூவக் கழட்டி உள்ள போட்டுட்டு..அப்புறம் மேல ஏறு.." என்றான். நாய் குலைத்த சத்தத்தில் இன்னும் ரெண்டும் மூன்று நாய்கள் தொடர ஆரம்பித்தன. நல்ல வேளை, தெருவில் யாரும் இல்லை. குனிந்து ஷூவைக் கழட்டி உள்ளே போட்டேன். சத்தம் கேட்டு நாயின் சத்தம் இன்னும் அதிகமானது. "அதக் கண்டுக்காதே" என்றான் ரமேஷ்.

கேட்டின் மேலே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியைப் பிடித்து காலை கேட்டில் வைத்தேன். கீழே இருக்கும் விளிம்பில் காலை வைக்க வழுக்கிக் கொண்டு போனது. மீண்டும் தம் பிடித்து ஏறினேன். மீண்டும் வழுக்கியது. "என்னடா இது" என்றேன் கொஞ்சம் நடுக்கத்துடன். "உனக்கு ஏறத் தெரியலன்னு சொல்லு" என்றான் அவன். மேலும், ஒரு தடவை முயற்சி செய்ய கால் பெருவிரலில் வலி பரவியது.

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு பக்கத்தில் பார்த்தால், பக்கத்துக்கு வீட்டின் காம்பவுண்டு கண்ணில் பட்டது. அது இடுப்பு உயரம் உள்ள காம்பவுண்டு. எளிதாகத் தாண்டி செல்ல முடியும். அந்த வீட்டின் காம்பவுண்டில் ஒட்டி இருந்த ஒரு வேப்ப மரம் இரண்டு வீட்டின் பொதுக் காம்பவுண்டு சுவற்றின் மேல் கிடந்தது. "டேய்.. அந்தப் பக்கமா வர்றேன்" என்றேன். "பார்த்துடா.." என்றான் அவன்.

காம்பவுண்டை தாவி, மரத்தின் மேல் கால் வைத்து அந்தப் பக்கமாக எட்டிக் குதித்தேன். இன்னும் நாய் உறுமிக் கொண்டு நின்று கொண்டிருந்தது. சங்கிலி மட்டும் இல்லை என்றால், அதோ கதிதான். இன்னும் தெருவில் யாரும் வரவில்லை. அவன் முன்னே போக, பெருமூச்சுடன் மாடிப் படிகளில் ஏறி தாழிட்டேன். உள்ளே போனதும், ரமேஷ் "ஏண்டா லேட்" என திரும்பக் கேட்க, அவனிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணியை அப்படியே குடித்து முடித்து ஹாலுக்கு வந்தேன். அவனிடம் இன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். ஏனோ, சொந்த ஊரில் இருக்கும் வீட்டு நினைவு வந்து போனது.

படம் : http://lifemytake7.wordpress.com/ - தளத்தில் இருந்து, நன்றி.


Tuesday, February 8, 2011

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்:
பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான்.

மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன்.

அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.


இது ஒரு மீள்பதிவு !



Wednesday, February 2, 2011

கதையெனும் நதியில்..

ஒட்டகம்:



காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர்.

இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான்.

அறம்:

ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம். ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை.

பிறந்த நாள்:

ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மறந்து விடும். அவர்களுக்கு அது கூட்டம் கூடும் இன்னும் ஒரு நாளே. அதைப் பற்றிய சுகா அவர்களின் நினைவுகள் தான், சொல்வனத்தில் வெளியாகியுள்ள பிறந்த நாள்.

பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாத இன்னொரு குழந்தையின் மேல் நினைவுகளை அடுக்கி விட்டு நிறைவடைகிறது.

மூங்கில் மூச்சு:

இதுவும் ஆனந்த விகடனில் வெளிவரும், சுகா அவர்களின் தொடர். இந்த வாரம் சென்னை மாநகரில் வீடு தேடுவதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறார் சுகா.

முதலில் அட்வர்டைசிங் கம்பனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் நடிகர் ஆர்யா வீட்டுக்கு வந்ததை வீட்டுக்காரரின் பெண் பார்த்து விடுகிறாள். அப்பாவிடம் அந்தப் பெண் சொல்லி விட, வீட்டுக்காரர் இவரை வரச் சொல்கிறார். இவர் வீட்டுக்காரரிடம் என்ன சமாதானம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு போகிறார். 'சினிமாவில் வேலை செய்வதை மறைத்து ஏன் பொய் சொன்னீர்கள்' என்று ஒரு தலைமை ஆசிரியர் போலக் கேட்டுவிட்டு, இன்னும் ஒரு கேள்வி கேட்கிறார்..."நீங்கள் சினேகாவைப் பார்த்து இருக்கீர்களா".

படம்: இணையத்தில் இருந்து.
நன்றி: சொல்வனம் மற்றும் ஆனந்த விகடன்.