Monday, March 16, 2026

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து  கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ  அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு'  என்கிறார். 


சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய நிலங்களை கொடுக்கிறார். அவரை அம்மாவன்(மாமா) என்றே அழைக்கிறார்.  பின்னர் ஒருநாள் ராமன் தம்பி மற்றும் பப்பு தம்பி ஆகியோர் மன்னரைக் கொல்லப் பார்க்க அவர்களைக் கொன்று மேலும் அணுக்கமானவராகிறார் பவுரீன்பிள்ளை. அதன் நினைவாக அவருக்கு மன்னர் வெள்ளி கைப்பிடியுள்ள வாளையும், தங்கச் சரிகை உள்ள பட்டுத் துணியும் அன்பளிப்பாக கொடுக்கிறார். 

அந்த ஊரில் யார் வீட்டிலும் இல்லாத பொருட்கள் சவ்தா மன்சிலில் உண்டு. சந்தன மரத்தால் செய்யப்பட்ட அலமாரி, அழகான சாய்வு நாற்காலி, மர வேலைப்பாடுகள், செம்பால் செய்யப்பட்ட முகப்புகள் என ஓர் அரச மாளிகைக்கு உண்டான அத்தனை வசதியும் உண்டு. சொன்னதை செய்து முடிக்க வேலையாட்களும் உண்டு. தலைமுறை தலைமுறையாக வந்த அந்த சொத்தை இப்பொழுது நிர்வகிப்பவர் முஸ்தபாகண்ணு. கடந்து வந்த தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை விற்று வந்ததில் இப்பொழுது இருப்பது இந்த வீடும் சில பொருட்களும். பழைய மாளிகையாக இருந்த இந்த வீட்டை இடித்து முஸ்தபாகண்ணின் வாப்பா நூர்முகம்மது புதிதாக கட்டி  தனது அம்மாவின் பெயரை இந்த இல்லத்துக்கு வைக்கிறார். அப்பொழுதே சில நிலங்கள் கிரையம் கொடுத்தே இந்த வீடு எழுகிறது. 

பெரிய குடும்பத்தின் வாரிசு என்ற திமிர் முஸ்தபாகண்ணுக்கு எப்போதும் உண்டு. அது தானாக ஏற்பட்டதில்லை. தனது இளமையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை முஸ்தபாகண்ணு  கெடுத்துவிட, அவரின் தந்தையிடம் வந்து அப்பெண்ணின் தகப்பன் வந்து முறையிட 'வசதி உள்ள மாப்பிள்ளை கிடைத்தான் என்று உன் பெண்தான் என் பையனைக் கெடுத்துவிட்டாள்' என்று சொல்லி, ஊரில் பெரிய நாட்டாமையுமான இவரே அந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க தீர்ப்பு சொல்கிறார். அப்போதிருந்தே அவருக்கு பயம் விட்டுப் போகிறது. பார்க்கின்ற பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கிறார். அவர்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு அடையவும் செய்கிறார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை கொல்லவும் அல்லது அவர்களே தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக இருக்கிறார். அவர்களின் இறப்பை மூடி மறைக்க சிலர் முஸ்தபாகண்ணுக்கு  உதவ, அவர்களுக்கு வேண்டுமளவு காசை வாரி இறைக்கிறார். 


சுருக்கமாகச் சொன்னால் இருக்கும் சொத்திலிருந்து வருமானம் பெருக்குவதைக் கவனிக்காமல், அதையே விற்று செலவு செய்கிறார் முஸ்தபாகண்ணு. யாரும் அவரைக் கேள்வி கேட்க முடிவதில்லை. அந்த வீட்டில் அவருடைய தங்கை ஆயிஷாவும் உண்டு. ஆய்ஷாவுக்கு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைப்பேற்றுக்கு வந்தவள், எனக்கு தங்கத்தில் ஒட்டியாணம் செய்து போட்டால் மட்டுமே புகுந்த வீட்டுக்கு போவேன், பவரீன்பிள்ளையின் பேத்தியான நான் ஒட்டியாணம் போடாவிட்டால் ஊர் என்ன சொல்லும் என்று கூறி அங்கேயே தங்கி விடுகிறாள். முஸ்தபாகண்ணுவும், இப்போது கையில் காசு இல்லை, ஒட்டியாணம் செய்து போடுவது வரை நீ இங்கேயே இருந்துகொள் எனச் சொல்லிவிட வருடங்கள் ஓடிவிடுகின்றன. ஆயிஷாவின் மகள் நசீமாவை கல்யாணம் செய்து அவள் தனியாக வசிக்கிறாள். 

முஸ்தபாகண்ணுவின் மனைவியான மரியம் கணவனை எதிர்க்க துணியாமல் இருக்கிறாள். அப்படியே இரண்டொரு வார்த்தை கேட்டு விட்டாலும் மேலே சொருகி இருக்கும் அதபு பிரம்பு என அழைக்கப்படும் குச்சியை எடுத்து அவளை அடித்து தள்ளுகிறார். அதற்கு பயந்தே அவள் அடங்கிப் போகிறாள். அந்த பிரம்பும் பவுரீன்பிள்ளை காலத்தில் இருந்தே இருக்கிறது. தன்னுடைய சொல் பேச்சு கேட்காதவர்களை அவரின் வாரிசுகள் இந்த பிரம்பைக் கொண்டே அடித்து துவம்சம் செய்துள்ளனர். அதிலும் அதிகம் அடிவாங்கியது பெண்களே. இந்த பிரம்பின் கடைசிக் காலத்தில் வந்து மாட்டிக்கொண்டவள் மரியம். நல்ல உணவு இல்லாமையாலும் வறுமையும் வீசும் இந்த வயதான காலத்தில் அவளுக்கு காச நோயும், ஓயாத இருமலும் வந்து விடுகிறது. தனது மனைவியால் இனி எதற்கும் உபயோகம் இல்லை,  உன்னுடைய பிறந்த வீட்டுக்கு செல் என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும் தனது கணவன் முஸ்தபாகண்ணுவிடம் அவள் 'அந்த பிரம்பால் என்னை ரெண்டு அடி அடித்து கொன்றுவிடுங்கள்' என்று கதறுகிறாள். மரியம் இறந்துவிட்டால் அடுத்த கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார் முஸ்தபாகண்ணு. 

இவர்களின் ஒரே மகன் ஷாகுல். தந்தையின் செலவுகளையும், அவரின் பெண்கள் சகவாசத்தையும் அறிந்த அவன் 'சவ்தா மன்சில்' மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்று உணர்கிறான். அம்மா மரியம் மேல் பாசம் இருந்தாலும் திருந்தாத தந்தையை நினைத்து மும்பைக்கு வேலை தேடிச் செல்கிறான். அங்கே இருந்து ஒருமுறை பணமும் அனுப்பி விடுகிறான். அதன் பின்னர் எந்த தொடர்பும் இருப்பதில்லை. கடைசியில் மரியம் இயலாமல் இருக்கும்போதே வந்து போகிறான் ஷாகுல். எந்த வேலையும் செய்யாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேயிருந்தால் வருமானத்துக்கு என்ன வழி என்று ஒருமுறை தனது தந்தையிடம் அவன் கேட்க, அதற்கு முஸ்தபா கண்ணு 'நான் இந்த வீட்டின் காரணவர், பவரீன்பிள்ளையின் பரம்பரை நான் என்ன வேலை செய்யவேணும் என்று நீ சொல்லக்கூடாது' எனச் சொல்ல வெறுத்துப்போகிறான் ஷாகுல். தன்னுடைய அம்மாவையும், தன்னுடைய முன்னோர் அவர்களுடைய வீட்டுப் பெண்களையும்  அடிக்க பயன்படுத்திய அதபு பிரம்பை உடைக்க முயல்கிறான் ஷாகுல், ஆனால் அது இரும்புத் தடி போல அப்படியே இருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் விற்கப்படுகின்றன. அதனை வெளியே விற்பதற்கு இஸ்ராயீல் என்னும் வேலைக்காரன் அவருக்கு உதவுகிறான்.  வெள்ளி கைப்பிடியுள்ள வாள், பட்டு துணி போன்ற குடும்பத்தின் விலை மதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் மூன்றாம் பேர் அறியாமல் இரவில் கை மாற்றப்படுகிறது. பகலில் செய்தால் குடும்பக் காரணவனுக்கு இழுக்கு என நினைக்கிறார்  முஸ்தபாகண்ணு. பெருமை வாய்ந்த சந்தன மர அலமாரி ஒன்றை விற்கும்போது, ஆயிஷா அதனை தன் மகள் நசீமாவுக்கு கொடுக்க கேட்கிறாள். முஸ்தபாகண்ணு அதை நான்தான் முடிவு செய்வேன் என்று விற்றுவிடுகிறார். விட்டால் இந்த இடமும் போய்விடும் என்று நினைத்த நஸீமா கோர்ட்டில் வழக்காடி பாதி சொத்தை பெற்றுவிடுகிறாள். கடைசியில் சாய்வு நாற்காலியும் விற்கப்படுகிறது.

அங்கங்கே உதிர்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தில் இருந்து முஸ்தபாகண்ணு அடுத்த திருமணம் செய்ய தனது பழைய வேட்டி, கோட்டு, தலையில் சுற்றிய துண்டுடன், இப்பொழுது வீட்டில் மீதமிருக்கும் அதபு பிரம்பை துணையாக ஊன்றி ரைஹானத் வீட்டுக்கு செல்கிறார். போகும்பொழுது துணைக்கு இஸ்ராயீல் வந்து சேர்ந்து கொள்கிறான். வழியில் ஒரு வீட்டில் தன்னுடைய சாய்வு நாற்காலியைப் பார்க்கிறார்.  அதனை வாங்கியவர்,  முஸ்தபாகண்ணுவின் வீட்டு தொழுவத்தில் ஒரு காலத்தில் வேலை செய்தவன். அவனுக்கா அதை விற்றாய் என இஸ்ராயீலிடம் முஸ்தபாகண்ணு  கோபமாக கேட்க அவனோ 'யார்கிட்ட காய்(காசு) இருக்கோ அவங்களுக்குத் தானே கொடுக்க முடியும். இப்போ உங்க சட்டைல இருக்கற காசு அவனுடையது' என்கிறான்.   

ரைஹானத்தின் அம்மாவான ராவியத்தும் ஒரு காலத்தில் முஸ்தபாகண்ணுவுக்கு பழக்கமாக இருந்தவள் தான். அவரைப் பார்த்ததும் முதலாளி சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே என்கிறாள். உன் மகளுக்கு மாப்பிளை பார்க்கிறேன் என்று சொன்னாய் அல்லவா அதனால்தான் வந்தேன் என்கிறார். மாப்பிள்ளை யாரு என ராவியத் கேட்க, நான்தான் மாப்பிள்ளை என்கிறார் முஸ்தபாகண்ணு. 'நீங்க போயிடுங்க முதலாளி. கிழவனான உங்களுக்கா என் பொண்ணை கொடுப்பேன்' எனச் சொல்ல,'நான் பவுரீன்பிள்ளையின் பேரன். சவ்தா மன்சிலின் காரணவர் ' என்கிறார் முஸ்தபாகண்ணு.  'ஆ.. வலிய காரணவன் ' என்று எச்சிலைக் கூட்டி முற்றத்தில் காரித்துப்புகிறாள் ராவியத். அதில் ஒரு துளி அவரின் காலில் படுகிறது. 

தன்னுடைய வீட்டில் வேலை செய்தவளும் தனக்கு அடிமை போல இருந்தவளுமான ராவியத் அவரை இப்படிச் சொல்லியதில் அவருக்கு ஒரு நடுக்கம் ஏற்பட்டு கீழே விழப்போகிறார். இஸ்ராயீல் அவரைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு கடற்கரை மணலில் படுக்க வைக்கிறான். ஒரு காலத்தில் அதிகாரமும், காமமும் கொண்டு அரசரைப் போல ஆட்சி செய்த முஸ்தபாகண்ணுவுக்கு  இன்று யாரும் துணையில்லை. சொல்லப்போனால் மனிதரையும், உழைப்பையும், செல்வத்தையும்  மதிக்காத அவருக்கு யாரும் துணை வரப்போவதில்லை. இப்பொழுது அந்த அதபு பிரம்பு கடற்கரை ஓரம் மணலில் கிடக்கிறது. 

====

சாய்வு நாற்காலி

தோப்பில் முஹம்மது மீரான் 

காலச்சுவடு பதிப்பகம் 

சாகித்ய அகாதெமி விருது - 1997


Tuesday, December 23, 2025

மிளகு - நாவல் - இரா.முருகன்

போர்ச்சுகல் அரசால் மிளகு ராணி என்று போற்றப்பட்ட அரசி  சென்னபைராதேவி , 54 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார். மிளகுக்கும் நறுமணப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற கொங்கன் பிரதேசமான கெருசோப்பா, ஹொன்னாவர் பகுதியை ஆண்டவர் ராணி சென்னா. கேரளாவின் கோழிக்கோடு தொடங்கி கோகர்ணம் மற்றும் கோவா வரை கடலை ஒட்டிய மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வளமான மண்ணில் மிளகு தாராளமாக விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்பொழுது அந்த பகுதிகளுக்கு சென்றாலும் பசுமை நிறைந்த மிளகு தோட்டங்கள் காணக் கிடைக்கின்றன. நவீன காலத்தில் மனிதன் அழித்தது போக மீதி இருப்பதை நாம் பார்க்கும்போது , அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றும். 


தரமும், மணமும் நிறைந்த மிளகு போன்ற பொருட்களுக்கு வேண்டியே அந்தப் பகுதிகள் மீது தொடர்ந்து மற்ற நாடுகளின் தாக்குதல் இருந்திருக்கிறது. அதைத் தடுக்க விஜயநகரப் பேரரசுடன் இணைந்து ஆட்சி செய்கிறார் சென்னபைராதேவி. சமண மதத்தைத் தாய் மதமாக கொண்டவர் சென்னா. திருமணம் செய்துகொள்ளாத ராணி சென்னா, தன்னுடைய சொந்தத்தில் நேமிநாதன் என்பவனை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். அவனுக்குத் திருமணமாகி ரஞ்சனா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு.  இளவரசனாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ராணியைத் தாண்டி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை. ராணியை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர எதிரிகளுடன் சேர்ந்து சில திட்டங்கள் தீட்டுகிறான். 


பக்கத்துக்கு நாடுகளை அரசு ஆண்டு வருபவர்களான உள்ளால் பகுதியின் ராணி அப்பக்கா, கோழிக்கோடு அரசர் சாமுதிரி என எல்லோருமே சென்னபைராதேவி மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். போர்ச்சுகல் நாட்டின் அரசுப் பிரதிநிதி பெத்ரோ என்பவர் அவர்களிடம் மிளகு வர்த்தகம் தனியாக செய்ய  பேசிப்பார்க்கிறார். ஆனால் சென்னாவைக் கேட்காமல் ஒரு மிளகையும் எங்களால் விற்பனைக்கு கொடுக்க முடியாது எனச் சொல்லி விடுகிறார்கள். 

போர்ச்சுகல் நாட்டின் ராணுவத்தில் இருந்த தனது கணவனின் இறப்புக்கு காரணமான ராணி சென்னாவை பழி வாங்க ஹொன்னாவர் பகுதிக்கு வருகிறாள் ரோகிணி. இந்தோ - போர்த்துக்கல் தம்பதிக்கு பிறந்த ரோகிணி, திருமணத்திற்கு பின்னர் போர்ச்சுகல் நாட்டில் வசித்து வந்தாள்.  சமையல் செய்வதிலும், இனிப்புகள் செய்வதிலும் ஆர்வமுடைய ரோகிணி ஹொன்னாவரில் ஒரு இனிப்புக்கடையை ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கடையை நடத்துவதைக் காட்டிலும், ராணியை பழிவாங்க வேண்டியதே முதன்மை காரணம் என்பதால் ராணியின் வளர்ப்பு மகன் நேமிநாதனை தன் வலையில் விழவைக்கிறாள். நேமிநாதனை விட மூத்தவளாக இருந்தாலும், அவளின் காமத்தில் மூழ்கி அவள் சொல்வதைக் கேட்கிறான் நேமிநாதன்



அரசாங்க மருத்துவரான வைத்தியநாத், அவரின் மனைவி மிங்கு மற்றும் பெத்ரோ மாளிகையில் வேலை செய்யும் கஸாண்ட்ரா என நாவலில் சில பாத்திரங்கள் மறக்க முடியாதவை. நாவலில் 400 வருடங்களுக்கு முற்பட்ட கதையை சொல்லும்போதே கூடவே இப்பொழுது இருக்கும் நான்கைந்து குடும்பங்களைப் பற்றிய கதையும் வருகிறது. அம்பலப்புழையில் உணவகம் நடத்தி வரும் திலீப், அவரின் தந்தையான பரமனுக்கு திதி கொடுக்கிறார். திதி கொடுத்த அன்று 100 வயதுக்கும் மேலான ஒரு பெரியவர் நான்தான் உன் அப்பா என்று திரும்பி வருகிறார். அவர் சொல்லிய நினைவுகள் மூலம் அது தன் அப்பா தான் என்று முடிவு செய்து தன்னுடனே தங்கி கொள்ளச் செய்கிறார். இவருக்கு நினைவுகள் பின் திரும்பி 400 வருடங்களுக்கு முன்பு ரோகிணி கடையில் சமையல் செய்யும் மடையராக சேர்ந்து கொள்கிறார். அவரின் நினைவுகள் பின்னாடி சென்றும் பின்னர் நிகழ்காலத்துக்கு வந்தும் ஊசலாடுகிறது. 

பரமன் பழைய காலத்தில் ரோஹிணியைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுக்கு நேமிநாதனுடன் இருந்த பழக்கத்தால் மஞ்சுநாத் என்ற குழந்தை பிறக்கிறான். அந்தக் குழந்தைக்கு அப்பா என்று காட்டவே பரமனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் ரோகிணி. சென்ற காலத்தில் மஞ்சுநாத்துக்கு தந்தையாகவும், நிகழ் காலமான இப்பொழுது திலீப்புக்கு தந்தையாகவும் இருக்கிறார் பரமன். முன்பும் பின்பும் என நினைவுகளில் மூழ்கியபடியே இருக்கிறார் பரமன். 

திலீப்பின் மகளான கல்பனா, அவர்களின் குடும்ப நண்பரான சாரதா தெரிசா என்பவரின் மகன் மருதுவைக் காதலிக்கிறாள். கல்பனா லண்டன் செல்லும்போது அங்கே தங்கி இருக்கும் பிஷாரடி என்னும் பேராசிரியர், மருதுவின் குடும்பம் என சந்திக்கிறாள். மருது ஆன்லைனில் மிளகு வர்த்தகம் செய்கிறான். எல்லோருடைய தொடர்பிலும் மிளகு ஒரு மறைபொருளாக இருக்கிறது. சாரதா தெரிசா அங்கே கல்யாணம் செய்து கொண்ட முசாபர் என்பவரை விவாகரத்து செய்து விடுகிறாள். விவாகரத்து செய்தாலும் அவரிடம் பேச்சுவார்த்தை உண்டு. மருதுவின் உண்மையான தகப்பன் இந்தியாவில் இருக்கிற சங்கரன் என்பவர். அவருக்கு இங்கே ஒரு பெண் குழந்தையும், வசந்தி என்கிற மனைவியும் உண்டு. ஒரு விமானக் கடத்தலில் மாட்டிக் கொண்ட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சாரதா இந்தியா வருகிறாள். சங்கரனுக்கு அதற்கு பின்னர் உடல் நிலை பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.  கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு செல்ல வேண்டும் எனச் சொல்ல எல்லோரும் அம்பலப்புழையில் சந்திக்கிறார்கள். 

ராணி சென்னாவின் இறுதிக் காலங்கள் சிறப்பாக இல்லை. 54 ஆண்டுகள் ஆண்ட அவருக்கு மக்களின் ஆதரவும் குறைகிறது.  போர் நெருங்குவதால் வியாபாரிகளும், செல்வந்தர்களும் தங்கள் செல்வத்தை வீட்டில் புதைத்து விட்டு மேலே பேய் மிளகை விதைத்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். பேய் மிளகு ஒரே நாளில் ஒரு வீட்டை மூழ்கடிக்க கூடிய தாவரம் என நாவலில் சொல்லப்படுகிறது. வளர்ப்பு மகன் நேமிநாதன் கெலடி அரசர் நாயக்கர் தலைமையில் படை திரட்டிக் கொண்டு மிர்ஜான் கோட்டையை முற்றுகையிடுகிறான். ராணி மக்களிடம் வீட்டுக்கு ஒருவர் வாளேந்தி வாருங்கள் எனச் சொல்கிறாள், ஆனால் ராணியின் பேச்சை யாரும் சட்டை செய்வதில்லை. இரு தரப்பிலும் இழப்புகள் இருக்கின்றன.  

கோட்டையை கைப்பற்ற போகும் முந்தைய தின மாலையில், நேமிநாதன் 'போருக்கு வந்து உதவி செய்ததற்கு நன்றி, நீங்கள் செல்லலாம்' என கெலடி அரசரிடம் சொல்ல இதற்காகவா நாங்கள் வந்தோம் எனக் கூறி அவனைக் கொன்று விடுகிறார்கள். நேமிநாதன் இறப்பின் பின்னர், ராணி சென்னபைராதேவி கைது செய்யப்பட்டு கெலடி அரசரின் மாளிகையில் சிறை வைக்கப்படுகிறாள். முதுமையும், நம்பிக்கை மோசடி செய்தவர்களையும் நினைத்து ராணி சில வருடங்களில் இறந்து போகிறார். தன்னுடைய இளவயதில் காதலித்து மதுரைக்கு சென்று வருகிறேன் என்று சொல்லிச் சென்ற வரதன் என்பவனை திருமணம் செய்திருந்தால், காட்சிகளே மாறிப் போயிருக்கும் என நினைக்கிறாள் ராணி. கெருஸொப்பா மற்றும் ஹொன்னாவர் பகுதிகள் ஆட்சி மாற்றத்தால், மக்கள் இடப்பெயர்வும், புதியவர்களின் கொள்ளையடிக்கும் மனமும் சேர்ந்து  வளமிழந்து போகின்றன. 

ஹொன்னாவர், கெருசோப்பா பகுதிகளுக்கு பேராசிரியர் பிஷாரடி, சங்கரனின் குடும்பம், திலீப், அவரின் தந்தை பரமன் எல்லோரும் செல்கிறார்கள். அங்கே மிச்சமுள்ள மிர்ஜான் கோட்டை மற்றும் சமண ஆலயமான சதுர்முக பஸதி போன்றவற்றை பார்க்கிறார்கள். தாத்தா பரமனுக்கு நினைவுகள் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. போன காலத்தில் மகனாக இருந்த மஞ்சுநாத் கூப்பிடுவது போல அவருக்குத் தோன்றுகிறது.

===

எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் "வாசகன் ஓர் உழைப்பை அளித்து வாசிப்பதே நல்ல இலக்கியம். ஆனால் அந்த உழைப்பும் களிப்பூட்டுவதாக இருக்கவேண்டும். மிளகு அப்படிப்பட்ட நாவல்." என்று சொல்கிறார்.  மேலும், "இந்நாவலின் முதன்மை அழகு இதிலுள்ள  பல வகையான மொழிநடை. மொழிநடைகளாலான ஒரு கலைடாஸ்கோப் இந்நாவல். வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சுமொழிகள், எழுத்துமொழிகள் கலந்து வருகின்றன. "  என்கிறார்.