தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள்.
இப்படிக்கு இளங்கோ
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
Monday, April 6, 2026
நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி
முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திரும்பி பேசிக் கொள்வோம். பாட்டி தாத்தா போன்றோர் கதை சொல்கிறேன் என்று எங்கள் சின்ன வயதில் நடந்ததை திரும்ப திரும்பச் சொல்வார்கள். ஒருவேளை அதனால்தான் என்னுடைய நினைவில் அந்த பழைய காலம் அப்படியே இருக்கிறது' எனச் சொல்கிறார்.
கொங்குப் பகுதியான வெள்ளகோவிலுக்கு அருகி ல் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற குடும்பம் முத்தம்மாள் அவர்களின் குடும்பம். முத்தம்மாள் அவர்களின் தாய் கொஞ்சம் படித்தவர். பழனியம்மாள் மணமாகி, கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்தவர். என்ன பிரச்சினை என்றாலும் தாலியை கழற்றி வீசலாமா , எல்லாம் படித்தவள் என்கிற திமிர் என்று ஊர் பேசுகிறது. அவருடைய தந்தையும் ஒரு சிறு பிரச்சினையில் கொஞ்ச காலம் சிறை செல்ல நேர்கிறது. இதை எல்லாம் பார்த்த பழனியம்மாளின் தந்தை, இனிமேல் இந்த ஊரில் இருக்க கூடாது என எண்ணி காட்டை விற்றுவிட்டு மலேயாவுக்கு தனது மகள், மனைவியுடன் செல்கிறார். ஏற்கனவே பழனிச்சாமி அவர்களுக்கு பழனியம்மாள் குடும்பத்துடன் பழக்கம் இருந்திருக்கிறது. அங்கே அவர்களை சந்திப்பவர், இரண்டாம் தாரமாக பழனியம்மாளை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார் பழனிச்சாமி. அவர்களுக்கு சம்மதம் என்றாலும் பழனியம்மாளின் அம்மா தாலி கட்டக் கூடாது என பழைய சம்பிரதாயம் பேசுகிறார். இரண்டு மனைவியருடனும் எந்த பிரச்சினையும் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார். குழந்தைகள் பிறந்ததும், அவர்களை எப்பாடு பட்டாவது நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என பழனியாம்மாள் நினைக்கிறார்.
முத்தம்மாள் அவர்கள் தான் சார்ந்த சாதியின் உழைப்பு, அவர்களின் சிக்கனம் என நிறையச் சொன்னாலும், அவர்களின் பங்காளிச் சண்டைகள், பழைய பழக்க வழக்கங்கள் என அவர்களின் தவறுகளையும் சொல்லத் தவறுவதில்லை. எல்லாவற்றையும் ஒரு சிறு நகைச்சுவையுடன் சொல்ல முடிவது அவரின் பலமும் கூட. வயதாகிய பின்னரும், பேரன் பேத்திகள் எடுத்த பிறகு ஒரு சண்டையில் கணவர் படுக்கை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பேரன்கள் கவலைப்பட இவரோ தன் பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன பாட்டி இப்படி பயமில்லாமல் இருக்கே, தாத்தா ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் கேட்க 'உள்ளே தூக்கு போட்டுக்கொள்ள எந்த வசதியும் இல்லை அதனால்தான்' என்று நகைச்சுவையாக சொல்கிறார்.
எதற்கும் பயப்படாமல் பெண்களை சுதந்திரமாக வளர்த்த தனது தந்தையின் மேல் அவருக்கு இருந்த பிரியம் சொற்களில் தெரிகிறது. கடலில் நீந்துவது, படகு ஓட்டுவது, மீன் பிடிப்பது என ஒவ்வொன்றையும் தன் பெண்களுக்கு சொல்லித் தருகிறார். தாய் பழனியம்மா அவற்றை எதிர்த்து பேசினாலும் அதனை அவர் கண்டுகொள்வதில்லை. தந்தை இறப்பின் போது நடந்த சடங்குகளில் பிரச்சினை ஏற்படும்போது அமைதியாகவே இருக்கிறார்கள். பின்னர் தமது பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்கிறார் பழனியம்மாள். தனது கணவர் இறந்த பின்னர் பிள்ளைகளை தனியாகவே போராடி கரைசேர்க்கிறார். ஆனால் எப்பொழுதும் கல்வியே பிள்ளைகளுக்குத் துணை என்பதை அவர் மறப்பதில்லை.
அங்கேயே பிறந்து வளர்ந்த, ஸ்காட்டிஷ் தந்தைக்கு பிறந்தவரான ஸ்பென்ஸ் கிராண்டை திருமணம் செய்து கொள்கிறார் முத்தம்மாள். அவர் அம்மா தமிழ் என்பதால் தமிழ் நன்றாக பேசுகிறார். திருமணத்துக்கு பின்னர் முத்தம்மாள் ஆசிரியராக வேலைக்குச் செல்கிறார். அவருக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்து தங்குகிறார்கள். அங்கேயே மணம் முடித்து, மணவிலக்கு என பிள்ளைகளின் வாழ்க்கைகள் பற்றி யும் முத்தம்மாள் எதையும் மறைக்காமல் எழுதுகிறார்.
'நான் இங்கு என் குடும்ப ரகசியங்களையம் நடந்த உண்மைகளையும் எழுதுவது சில நேரத்தில் மனக்கஷ்டமாகக் கூட இருக்கும். இங்கு நான் யாரையும் புண்படுத்தவோ ஏளனம் செய்யவோ மனதாலும் நினைக்கவில்லை. அப்பாரய்யன் ஒரு கொலையாளி. அம்மாவின் தகப்பனார் சிறைவாசம் அனுபவித்த கைதி. அம்மா, அய்யன் தாலி கட்டாத சட்டபூர்வமற்ற மனைவி. பெரியம்மா தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்த ஏமாளி. அய்யன் முன்கோபக்காரர், பழிவாங்கும் உணர்ச்சியுடையவர். இப்படி அவர்களின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படியிருப்பினும் நான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய வாரிசு. அவர்கள் வகுத்த வழிதான் எங்கள் வழி.' - என்று புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார்.
இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது இது ஒரு குடும்பத்தின் வரலாறும், கதையும் மட்டும் அல்ல என்பது புரியும். சென்ற காலகட்டத்தின் நினைவுகளால் நெய்யப்பட்ட அழகானதொரு பொக்கிஷம்.
நாடு விட்டு நாடு
முத்தம்மாள் பழனிச்சாமி
பதிப்பு: தமிழினி
Wednesday, March 25, 2026
கடல் - ஜெயமோகன்
அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும் செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது.
சாம்
செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. சாமுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வடுபோல தங்கி விட, வளர்ந்த பின்னர் துறவறம் செல்ல முடிவு செய்து வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். தனது தந்தை இறக்கும் தருணத்திலேயே வீட்டுக்கு வந்து போகிறார். "சாம், என்னுடைய மிக உயர்ந்த பொக்கிஷம் நீ. இந்த உலகத்தில் உள்ள எல்லாம் உனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். நீ படுத்த அந்த தொட்டிலில் இன்னொரு குழந்தையை படுக்க வைத்ததால்தான் எனக்கு கோபம் வந்தது." என்று சொல்லி விட்டு இறந்து போகிறார் அவரது தந்தை.
பெர்க்மான்ஸ்
சாமுக்கு நேர் எதிராக இருப்பவர் பெர்க்ஸ். வறுமையின் காரணமாக பாதிரியார் பணிக்கு வந்தவர். பைபிளை திரும்ப திரும்ப படித்து நினைவில் வைத்திருக்கும் பெர்க்ஸ், கடவுளுக்கு பயப்படாதவராக இருக்கிறார். ஒருவகையில் சாமுக்கு மூத்த சகோதரனும் கூட. சாமின் தந்தையால் அவரது திருமணத்துக்கு முன்னர் ஓர் ஏழைப் பெண்ணுக்கு பிறந்து, பின்னர் பணம் கொடுத்து அப்பெண்ணை ஊரை விட்டு குழந்தையுடன் அனுப்பி விடுகின்றனர். அந்தக் குழந்தைதான் பெர்க்ஸ். அந்தப் பெண் இன்னொருவரை மணந்து பின்னர் பிறந்த குழந்தைகள் என குடும்பம் வறுமையில் வாட, பாதிரியார் பணிக்கு வேலைக்கு வருகிறார். அந்த சர்ச்சுக்கு தங்க வரும் சாம், பெர்க்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை தெரியப்படுத்த அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.
தாமஸ்
இவர்கள் இருவருக்கும் இடையில் அலைபாயும் ஆன்மாவாக இருப்பவன் தாமஸ். சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்தவன் ஒரு ரௌடி போல வளர்கிறான். கால் நடக்க இயலாத ஒரு பெண்ணுக்கு தகாத உறவின் மூலம் பிறந்தவன் அவன். தனது உடலை விற்றே அவனை வளர்க்க திண்டாடும் அவள் ஒருகட்டத்தில் அவனைக் கைவிட்டு இறந்து போகிறாள். அவனுக்கு தன்னுடைய தந்தை யார் எனத் தெரிந்தாலும் அந்த மனிதன் இவனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே ஊரில் சுற்றித் திரிந்து வளர்கிறான். அவனை அந்த ஊருக்கு வரும் சாம் கண்டு அவனை அன்பின், நன்மையின் வழிக்கு இழுத்து வருகிறார்.
---
தனது குடும்பத்துக்கு ஒரே வருமானமாக இருந்த சர்ச் வேலையில் இருந்து தான் துரத்தப்பட காரணமாக இருந்த சாமின் மேல் கோபத்தில் இருக்கும் பெர்க்ஸ், தனது காதலி மூலம் பொய் சாட்சி சொல்ல வைத்து சாமை சிறைக்கு அனுப்பி விடுகிறார். பெர்க்ஸ் இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரன். கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான் பெர்க்ஸ். சாம் சிறை சென்ற பின்னர் தாமசுக்கு பெர்க்சின் அறிமுகம் கிடைக்கிறது. கடலோடுவதில் பலசாலியான தாமஸ் பெர்க்ஸ் செய்யும் குற்றங்களுக்கு துணையாக நிற்கிறான். இப்போது அவன் தீமையின் பாதையில்.
தாமசுக்கு பியாட்ரிஸ் என்னும் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளை விரும்பவும் செய்கிறான். அவளோ வளர்ந்தவள், அறிவு நிறைந்தவள் ஆனால் சிறு குழந்தை போல இருக்கிறாள். ஒரு தேவதையைப் போல தீமை என்றால் என்னவென்றே அறியாதவளாக இருக்கிறாள். ஒரு காப்பகத்தில் வளரும் அவளுக்கு தந்தை பெர்க்ஸ் எனத் தெரிய வருகிறது. அவன் தனது காதலைச் சொன்னதும் முதலில் மறுக்கும் அவள், அவனை நேசிக்கிறாள். அவளின் தூய அன்பைக் கண்டு மலைத்து நிற்கிறான் தாமஸ்.
நல்லதா, தீயதா என்ற இரு வழிகளில் தாமஸ் மாறி மாறிப் போனாலும் இறுதியில் நல்வழிக்கே திரும்புகிறான். இடையில் சாமும், பெர்க்ஸ்சும் தம்மால் இயன்றவரை அவனை திசை திருப்பி தங்கள் வழியே சிறந்தது என அவனுக்கு போதிக்கிறார்கள். சாத்தானும் இயேசுவும் போல.
----
கடல் நாவலில் கடவுள், சாத்தான், பைபிள் என நிறைய உரையாடல்கள் உண்டு. சில இடங்களில் ஆத்ம தரிசனம் போல சில வரிகள் உள்ளன. நாளைக்கு என சேர்த்து வைக்கத் தோணாமல் கடலோடி வாழும் மீனவர்களின் குணம், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் முதலாளிகள், கடத்தல் பிரச்சினைகள் என இந்நாவல் நிறைய தளங்களில் நம்மைக் கொண்டு செல்கிறது.
Subscribe to:
Comments (Atom)


