Wednesday, July 9, 2025

என் சரித்திரம் - உ.வே.சா

அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு, நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும். 

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. கணிதமோ, ஆங்கிலமோ அவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தவில்லை. பக்கத்தில் இருக்கும் சில தமிழ் அறிஞர்களிடம் பழம் பாடல்களை பாடம் கேட்கிறார். இவர் கற்றுக்கொள்ளும் வேகத்தை பார்த்து அவர்கள் பெரிய தமிழ் பண்டிதரிடம் சென்று உ.வே.சா கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள். 


அந்த காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில்  மகாவித்துவானாக இருந்த  மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும், பாடல்கள் புனைவதிலும், புராணங்களை இயற்றுவதிலும், இலக்கணம் அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். முதலில் அவர் மறுத்தாலும் சிறு வயது உ.வே.சாவின் ஆர்வத்தைப் பார்த்து தன்னுடன் இருந்து படித்துக்கொள்ள சம்மதிக்கிறார். மிகச்சிறந்தவரான பிள்ளை அவர்களே உ.வே.சா-விற்கு குருவாக அமைகிறார். ஆதீன மடத்துக்கு சென்றால் அங்கே சாப்பாட்டுக்கு  பிரச்சினை இருக்காது, ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்த  ஊரில் நீங்களே ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்ல, அதற்கு சம்மதித்து பாடம் கற்றுக்கொள்கிறார். 

திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு தனது ஆசிரியருடன் செல்லும்பொழுது, அப்பொழுது அங்கே மடாதிபதியாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் உ.வே.சா அவர்களின் தமிழ் அறிவையும், அவர் பாடல்களை இசையோடு பாடுவதிலும் உள்ள தேர்ச்சியை அறிந்து அவரைப் பாராட்டுகிறார். மடத்தில் உள்ளவர்களும் உ.வே.சா அவர்களுடன் நட்புடன் இருக்கிறார்கள். ஆதீனம் உ.வே.சா வின் பெற்றோரை திருவாவடுதுறைக்கே அழைத்து வந்து ஒரு வீடு பார்த்து கொடுத்து என அனைத்து உதவிகளையும் செய்கிறார். குருவுடன் எங்கே சென்றாலும் கூடவே செல்லும் உ.வே.சா வை அனைவரும் விரும்பினாலும், ஒரு சிலர் சிறு வயதில் அவருக்குள்ள தேர்ச்சியையும், குரு அவரிடம் வைத்துள்ள அன்பையும், ஆதீனம் அவர் மேல் வைத்துள்ள மதிப்பையும் அறிந்து சிலரால் சில நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கிறார். 



ஆதரவாக இருந்த குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்த உ.வே.சா கலங்கிப் போகிறார். ஆதீன தலைவர் சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஆறுதல் அளித்து, மடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், நானே உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன் எனவும் சொல்கிறார். அவர் கற்றுக்கொள்ளவும், கற்றதை மடத்தில் உள்ள சிலருக்கு பாடம் சொல்லவும் என அந்த நாட்களை பயன்படுத்துகிறார் உ.வே.சா. ஆதீனத்துக்கு அடிக்கடி வந்து போகும் தியாகராச செட்டியார் என்பவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி அவருடைய இடத்தை உ.வே.சா பெற்று கல்லூரியில் பணிபுரிய வேண்டும் என ஆதீன சந்நிதானத்திடம் சொல்ல, அவரோ நல்ல அறிஞராக உள்ள  உ.வே.சா வை மடத்தில் இருந்து அனுப்ப முடியாது எனச் சொல்கிறார். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள், உ.வே.சா-வுக்கு இந்த பணி கிடைத்தால் அவருக்கு நல்லது, கல்லூரி விடுமுறை நாட்களில் மடத்துக்கு வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். 

தியாகராச செட்டியார் சென்ற பின்னர் ஆதீனம், உ.வே.சா-வை கல்லூரியில் பணிக்கு அனுப்ப சம்மதிக்கிறார். நமக்கு பின்னர் இந்த ஆதீன மடத்துக்கு பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்மை போலவே இந்த பிள்ளையிடம் ஆதரவாக இருப்பார்கள் எனச்  சொல்ல முடியாது, உ.வே.சா கல்லூரி பணியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு நன்மையே கிடைக்கும் எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார். கல்லூரிப் பணியில் சேர்வதற்கு முன்னர் அங்குள்ளவர்கள் அவருடைய தகுதியையும், தமிழ் புத்தகங்களில் உள்ள தேர்ச்சியையும், அவர் பாடம் நடத்தும் விதத்தையும் வியந்து பாராட்டுகிறார்கள். கல்லூரிப் பணி அவர் விரும்பும் வண்ணமே இருக்க, விடுமுறை நாட்களில் மடத்துக்கு சென்று ஆதீனத்திடம் பாடம் கேட்டும் வருகிறார். ஒருநாள் ஆதீனம் கும்பகோணத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை சென்று சந்திக்கச்  சொல்கிறார். 

கும்பகோணம் முன்சீப் அதிகாரியாக இருக்கும்  சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரே அவர். அவரைச் சந்திக்க உ.வே.சா செல்கிறார். தமிழில் ஆர்வமுள்ள இராமசுவாமி முதலியார், உ.வே.சா விடம் என்ன படித்துள்ளீர்கள் என வினவுகிறார். அவரிடம் தான் கற்ற அந்தாதி, கலம்பகம், புராணம், செய்யுள்கள் என அனைத்தையும் சொல்கிறார். அவரோ இன்னும் என்ன, என்ன எனக் கேட்கிறார். அவரும் தனக்குத் தெரிந்த அனைத்து நூல்களையும் சொல்கிறார். இராமசுவாமி முதலியாருக்கோ அவர் சொல்வதில் ஒரு ஆர்வமும் ஏற்படவில்லை. பின்னர் தனது குருவிடமும், ஆதீனத்திடமும் கற்ற அனைத்து நூல்களையும் பட்டியல் போடுகிறார். அப்பொழுதும் அவர் மசியவில்லை. இவ்வளவு நூல்களைச் சொல்லியும், நீங்கள் ஏன் ஒரு வியப்பும் அடையவில்லை என அவரிடமே கேட்க, ராமசுவாமி அவர்கள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை நீங்கள் படித்து இருக்கிறீர்களா என்று கேட்க, உவேசா-வோ 'எனது குருவே இந்த நூல்களை எல்லாம் படித்ததில்லை, நான் எப்படி' என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, அந்த நூல்கள் என்னிடம் இல்லை, கிடைத்தால் படித்துக்கொள்வேன் எனச் சொல்கிறார். 

இராமசுவாமி அவர்கள் கொடுத்த சுவடியில் இருந்து சிந்தாமணியின் சிறப்பையும் நூல் நயத்தையும் அறிந்து கொள்கிறார். ஆனால் பிழைகள் மலிந்து இருக்கின்றன. நல்ல படியை எடுத்து சீவக சிந்தாமணியை பதிப்பிக்க வேண்டும் என நினைத்து அந்தச் செயலில் இறங்குகிறார். ஒரு சிலர் இது ஆகக்கூடிய வேலை இல்லை, பலரும் அதை பதிப்பிக்க நினைத்து முடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டனர் எனச் சொல்கிறார்கள். தான் நிச்சயம் சிந்தாமணியை பதிப்பிப்பேன் அதுவும் பிழைகள் இல்லாத நல்ல பதிப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, பல ஊர்களில் தேடுகிறார். சமண மதத்தை சேர்ந்தவர்களிடம் பழகி அவர்களிடம் இருக்கும் சுவடிகளை வாங்கி ஒப்பீடு செய்கிறார்.  பத்துக்கும் மேற்பட்ட சிந்தாமணி நூல்களை வைத்து ஒப்பீடு செய்து மிகச் சிறந்த முறையில் சிந்தாமணியை நூல் வடிவில் கொண்டு வருகிறார். 

அவரின் முயற்சியை அனைவரும் பாராட்ட, ஒரு சிலரோ சைவ சமய ஆதீனத்துடன் தொடர்புடைய உவேசா சிந்தாமணியை பதிப்பாக்கம் செய்ததை விரும்பவில்லை. பொய்களை கலந்து செய்த மணி சீவக சிந்தாமணி எனப் பேசிக்கொண்டு, அதை ஆதீனத்துடனும் சொல்லி விடுகிறார்கள். ஆதீனமோ உவேசா-விடம் அவர்களை நினைத்து பயப்பட வேண்டாம், உங்கள் தமிழ்ப்பணி தொடர வேண்டும் எனச் சொல்கிறார். 'பொய்யே கட்டிய மணியாக' இருந்தாலும் சிந்தாமணியில் நமக்குத் தேவை அதில் உள்ள தமிழ்ச்சுவையும், செய்யுள் அமைப்பும் தான் என இந்த நூலில் எழுதுகிறார் உவேசா. 

பின்னர் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழைய இலக்கியங்களைத் தேடி அலைகிறார். யாராவது எங்கோ ஓலைச் சுவடிகள் இருக்கின்றன எனச் சொன்னால் அங்கே செல்கிறார். சில பயணங்களில் நல்ல பதிப்புகள் கிடைக்கின்றன. பல நேரங்களில் அவருக்கு தோல்வியே ஏற்படுகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தனது தேடுதலைத் தொடர்கிறார்.

என் சரித்திரம் - என்ற இந்த நூலை, ஆனந்த விகடனில் தொடராக எழுதி இருக்கிறார். 1940-ல் ஆரம்பித்த இந்த தொடரை முடிக்கும் முன்பே 1942-ல் இயற்கை எய்திவிட்டார் நம் தமிழ்த் தாத்தா உவேசா. அவர் தொடர்ந்து இத்தொடரை எழுதி நிறைவு பெற்று இருந்தால் இன்னும் நமக்கு நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கும். தன்னுடைய வயதான காலத்தில் இந்த நூலை எழுதி இருந்தாலும், அபாரமான நினைவாற்றல் கொண்டவரான அவர் ஒவ்வொரு நிகழ்வையும் இப்பொழுது நடந்தது போலவே சொல்லிச் செல்கிறார். சிறு வயது முதல் தனக்கு கல்வி போதிக்க தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயரையும், தனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்கிறார். 

எந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் காலால் நடந்தே ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பழம்  இலக்கியங்களைத் தேடி இருக்கிறார். தமிழின் மேல் தணியாத ஆர்வம் கொண்டு தேடியதால் அவர் என்றென்றும் நமக்கு தமிழ்த் தாத்தா. 




Monday, May 5, 2025

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. 


ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின் கதைப்போக்கும், கதா பாத்திரங்களும் புரிய ஆரம்பித்த பின்னர் அந்தக் குறிப்பும் தேவையில்லாமல் போனது. உலகின் மிகச் சிறந்த நாவல் எனப் பலரும் போற்றிய இந்த ஆக்கத்தை நானும் படித்து முடித்தேன். இதை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மிக கடினமான இப்பணியை முடித்து நம் கையில் தவழ வைத்துள்ளார். 

எண்ணற்ற கதை மாந்தர்களும், நீண்ட விவரிப்புகளும் கொண்ட இந்நாவல் விளக்கும் போர் பற்றிய சித்தரிப்புகள் நாம் நினைத்து பார்த்திராதவை. போர் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. மேலே இருப்பவர்கள் கொடுத்தாலும் கீழே வந்து சேரும்போது அது ஒன்றுமில்லாமல் போகிறது. சில தளபதிகள் தீர்வுகள் ஏற்பட முனைந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். காயம் பட்ட போர் வீரர்களுக்கான மருத்துவமனையில், நிறைய வீரர்கள் கை, கால்களை இழந்து, ரத்தத்துடன் மருத்துவம் பார்க்க காத்திருக்க, காயம்பட்ட ஒரு பிரபு வந்ததும் அவரைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். சிலர் போரை பயன்படுத்தி புது செல்வந்தர் ஆகவும், புதிய பதவிகளைப் பிடித்து மன்னரிடம் செல்வாக்கு பெறவும் முயற்சி செய்கிறார்கள்.



ரஷ்யாவில் உயர் குடி மக்கள் கூடும் விருந்துகளின் வழியாக கதை மாந்தர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அந்த விருந்துகளே ஒருவரின் செல்வத்தை வெளிப்படுத்துவதாகவும், பெரிய குடும்பங்களின் கதைகளை பேசுவதாகவும், திருமண வயது வந்தோரின் திருமணத்தை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அரசில் அங்கம் வகிப்பவர்கள் கலந்து கொள்வதால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்த பின்னர் இறந்து விடுகிறாள். அவரின் தங்கை மேரி அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறாள்.  இருவரின் தந்தையும்  வயதானவருமான பால்கோன்ஸ்கி தற்கால நிகழ்வுகளை விரும்புவதில்லை. அவரின் மனம் போன போக்கில் கோபப்படுகிறார். கொஞ்சம் அழகு குறைந்திருக்கும் தன் மகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆண்ட்ரு தன்னால் முடிந்த அளவு அப்போதிருந்த அடிமைக் கூலி மக்களை சீர்திருத்த, அவர்களை முன்னேற்ற  சில முயற்சிகளை எடுக்கிறார்.

ஆண்ட்ருவின் நண்பர் பீயர் செல்வம் மிக்கவர். மேம்போக்காக ஆண்ட்ருவைப் போன்றே கூலி மக்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பி பணம் செலவிடுகிறார். ஆனால் அது ஒரு கனவு போலவும் அமைந்து விடுகிறது. இடையில் இருப்பவர்கள் அவரை ஏமாற்ற பார்க்கிறார்கள். மிக அழகானவளான ஹெலன் குராகின் என்பவள் பீயரின் செல்வத்துக்காக அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பின்னர் அவரை மதிப்பது கூட இல்லை. காதலும் இல்லை. பீயர் பிரீமேசன் என்னும் அமைப்பில் ஆர்வம் கொள்கிறார். அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 

ராஸ்டோவ் குடும்பம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரா, நிக்கோலஸ், நட்டாஷா, பெட்டியா என நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.  செல்வந்தர்களான இக்குடும்பம் மற்றவர்களுக்கும், விருந்துகளுக்கும்  தாரளமாக செலவு செய்கிறது, திருமதி ராஸ்டோவுக்கு செலவு பண்ண மட்டுமே தெரிகிறது, கணக்கு வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களின் ஆதரவில் வளர்ந்து பின்னர் பெரிய பதவிக்கு வந்த போரிஸ் என்பவன் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

மருமகள் முறை கொண்ட சோனியா என்னும் பெண்ணும் இவர்களுடன் வசித்து வருகிறாள். சோனியா நிக்கோலஸ் மீது காதல் கொள்கிறாள். எந்த நிலையிலும் அவள் நிக்கோலஸ் மீது தன் காதலை திணிப்பதில்லை. முதலில் சோனியா மீது ஈர்ப்பு கொண்ட நிக்கோலஸ், பின்னர் தன் குடும்ப சூழலை நினைத்து பெரிய இடத்துப் பெண்ணை மணந்தால் தமது குடும்பத்தின் நிலை உயரும் என நினைத்து, மேரி பால்கோன்ஸ்கியை மணந்து கொள்கிறான். 




சோனியாவுக்கு நேர் எதிராக நட்டாஷா இருக்கிறாள். அவளின் சிறுவயதும், கள்ளமில்லாத பண்பும் அனைவரையும் ஈர்க்கிறது. சிலரைக் காதலிக்கவும், அதிலிருந்து விலகவும் அவளால் முடிகிறது.  அவளை பொறுத்தவரை அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது இளமை காரணமாக ஒரு வண்ணத்து பூச்சி போல பறக்கிறாள். ஆண்ட்ருவை நிச்சயம் செய்த பின்னர், இன்னொருவனுடன் ஏற்பட்ட தற்காலிக ஈர்ப்பால் அவளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. திருமணமும் நின்று போகிறது. பின்னர் போரில் காயம்பட்ட ஆண்ட்ருவை அவள் சந்திக்கும்போது பழைய காதல் இருவருக்கும் பூக்கிறது. ஆனால் ஆண்ட்ருவின் உடல் நிலை மோசமாகி கொண்டே வர, அவர் இறக்கும் வரை ஆண்ட்ருவை தன்னுடனே வைத்து பார்த்துக்கொள்கிறாள் நட்டாஷா. 

முதலில் இருந்தே பீயருக்கும், நட்டாஷாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. போர் சமயத்தில் பீயரின் மனைவி ஹெலன் இறந்து போக, போர் முடிந்த பின்னர் பீயர் நட்டாஷாவை மணந்து கொள்கிறார். பிரெஞ்சு படையிடம் பீயர் மாட்டிக்கொண்டு பல நாட்கள் அவர்களுடனேயே பயணிக்கிறார். அப்பொழுது அவர் சந்திக்கும் மக்கள், வீரர்கள் என அவர் மனம் அலைபாய்கிறது. மேலும் போரில் அவர் களம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், பயப்படாமல் போர் முனையில் நின்றுகொண்டு போரை கவனிக்கிறார்

மன்னர் நெப்போலியன் ஏன் ரஷ்யா மேல் போர் தொடுத்தார் என்பதை இந்நாவல் விளக்கி கொண்டே போகிறது. பின்னர் அவர் பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன, பல்லாயிரம் வீரர்களை இழந்து திரும்ப வேண்டிய அவசியம் என்ன என்று விரிவாகவே ஆய்வு செய்கிறது நாவல். மாஸ்கோ நகரத்தை கைப்பற்றிய பிரஞ்சு படைகள் அதன் பின்னர் வலிமை இழந்து போனது எப்படி, ஒரு நாட்டுக்குள் அவ்வளவு தூரம் தனது படையை நடத்திக் கொண்டு வந்த நெப்போலியனை எது அவ்வாறு செய்ய சொன்னது என்றெல்லாம் பல பக்கங்கள். பிரஞ்சு படையிடம் முதலில் பின்வாங்கிய ரஷ்ய படைகள், பின்னர் கொரில்லா முறையில் தாக்கத் தொடங்கியதையும் விவரிக்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்ய தளபதி குட்டுசோவ் நாவலில் முக்கிய இடம் பெறுகிறார். வயதானவரான இவர் 'எதற்கும் கலங்காதவர்' எனப் பெயர் பெற்றவர். போர் முனையில் ஒவ்வொருவர் சொல்லுவதையும் காது கொடுத்து கேட்கும் குட்டுசோவ், எதையும் செயல்படுத்துவதில்லை. அது போலவே மேலிடத்திலிருந்து வரும் சில கருத்துக்களையும் அவர் ஏற்பதில்லை. இங்கே நடப்பது வேறு, அதை அவர்கள் அரண்மனையில் அமர்ந்து புரிந்து கொள்ள முடியாது என்கிறார். 



ஐநூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வந்து போகின்றனர். சில கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அக்கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள். நாவல் முழுவதுமே மகிழ்ச்சி, ஆசைகள், துரோகங்கள், காதல்கள், பிரிவுகள், வீரம், வீழ்ச்சி என பரந்து கிடக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகில் அங்கங்கே இயல்பாகவே இருக்கிறது நாவலில். நாம் பார்த்தவை சிலவே, நாம் பார்க்காதவை பல உள்ளன என்பது போல ஒவ்வொருவரின் பக்கத்திலிருந்தும் அவர்களின் நோக்கம் என்னவென்றும் விரிவாகவே பேசுகிறது நாவல். 

காலங்கள் பல கடந்தும் மனித குலம் போரை இன்னும் கைவிடவில்லை. தல்ஸ்தோய் போர் தவறென்றோ, சரியென்றோ விளக்கவில்லை. நடந்தது என்ன என்பதையே சொல்லிச் செல்கிறார். ஏதோ ஒருவகையில் போர் என்பது எல்லாரையும் ஒரு கண்ணியில் இணைக்கிறது, எல்லோரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் ஆதாயமும் அடைகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த நாவலை நாமும் படித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழில் படிக்க முடிந்ததே. முக்கியமான இந்நாவலை, இவ்வளவு பெரிய ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். 

போரும் அமைதியும் (War And Peace)  
லியோ டால்ஸ்டாய் 
தமிழில்: டி.எஸ். சொக்கலிங்கம் 
மூன்று பாகங்கள் 
சீதை பதிப்பகம், சென்னை