Monday, June 22, 2020

சிற்பம் தொன்மம் - செந்தீ நடராசன்

சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள். 


கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம்,  இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள். 

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும்.

கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனுமன் என்றால் நாம் எளிதாக கண்டுபிடுத்துவிடுவோம். மற்ற சிற்பங்களை நாம் அடையாளம் காண்பது சிரமமே. அப்படிச் சிலைகளை நோக்கி, இனம் கண்டறிய என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்நூல். 



 
கை அமைதிகள்(வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம்.. போன்றவை), சிற்பம் வைத்திருக்கும்  ஆயுதங்கள், அமர்ந்திருக்கும் வாகனம் அல்லது ஆசன வகை, கிரீட வகைகள் போன்றவை மூலம் இச்சிற்பம் இந்த மூர்த்தி என்பதை அறியலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிற்பங்களைக் கொண்டு செந்தீ அவர்கள் விளக்குகிறார். சிற்ப நூல்களில் அந்த மூர்த்திகளுக்கு உண்டான அளவுகளையும் சொல்கிறார். 

சில சிற்பங்களை விளக்கும்போது, வேறு பகுதிகளில் அந்தச் சிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை பற்றி விளக்கும்பொழுது, உமையொரு பாகனின் தலையலங்காரம் ஜடா மகுடமாகவோ அல்லது பாதி ஜடா மகுடம் மீதி கிரீடம் போல இருக்கும், ஆனால் திருச்செங்கோட்டில் உள்ள சிலை முடியை அள்ளி முடித்து குந்தளமாக கட்டி இருப்பதைச் சொல்கிறார். 

வேதங்களில் குறிப்பிடப்படாமல் பின்னர் தோன்றிய நரசிம்ம அவதாரம், அதன் சிலையமதி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல பெருமாளுக்கு தென்னகத்தில் பூதேவி, ஸ்ரீதேவி என இரு தேவிகள், ஆனால் வடக்கில் செல்லும்போது அங்கே ஒரே துணை என்பதையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆந்திராவில் ராமப்பா கோவிலில் உள்ள நடன மங்கையின் சிலை பற்றிய கட்டுரையில், ராமப்பா என்னும் சிற்பியின் பெயர்கொண்டே அந்தக் கோவில் குறிப்பிடப்படுவதை சொல்கிறார்.


 
வீரபத்திரன், கஜசம்காரமூர்த்தி, கங்காள நாதர், பிச்சாடனார் போன்ற சிற்பங்களையும், வரலாற்றையும், புராணக் கதைகளையும் விளக்குகிறது இந்நூல். பவுத்த, சமண சிற்பங்கள் பற்றியும் சில கட்டுரைகள் உள்ளன. புராணம், கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நூல். நூலைப் படித்த பின்னர், எந்த கோவிலுக்குச் சென்று ஒரு சிற்பத்தைக் கண்டால் நின்று பார்த்து விட்டே செல்வோம். அதுவே இந்நூலின் வெற்றி. 

சிற்பம் தொன்மம் 
செந்தீ நடராசன் 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

படங்கள்: இணையத்தில் இருந்து.


Monday, May 11, 2020

இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன் சென்

க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் புராணக்கதைகளை விவரிப்பதாக உள்ளது. எனவே, இந்து ஞானம் பற்றிய அறிமுகமாக சிறு நூலை வங்காள மொழியில் எழுதுகிறார். அதை ஆங்கிலத்தில் அவரின் பேரன் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

மிகச் சிறிய நூலாக இருந்தாலும், அதற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிச் செல்கிறார் சென். சில இடங்களில் விரிவாக சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு செல்கிறார். ஒரு சிறந்த அறிமுகப் புத்தகம் இந்நூல்.

மூன்று பகுதிகளாக இந்நூல் உள்ளது.  இந்து மத தோற்றம், வேதங்கள், பழக்க வழக்கம், உபநிடதங்கள், ஆறு தரிசனங்கள், வங்காள பால்கள்(baul) மற்றும் சைவ சித்தாந்தம் போன்ற மற்றைய போக்குகள், தற்கால அறிஞர்கள் பங்களிப்பு என்று விளக்குகிறார் சென். இந்நூலின் மூன்றாம் பகுதியில் முக்கியமான உபநிடத வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளது.




உபநிடதங்கள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்னரே பவுத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றி, உபநிடத ஞானத்தைப் பகிர்ந்து கொண்டன என்று சொல்கிறார் சென். இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இங்கே மறைந்து விட்டது என்பதில் உண்மையில்லை. புத்த மதத்தின் கொல்லாமை போன்ற சில தரிசனங்கள் இந்து மதத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். 

வங்காளத்து பால் மரபு மற்றி சொல்லும் சென், அவர்களின் பாடல்களில் உள்ள கருத்துக்களை பகிர்கிறார். ஒரு நாடோடி மரபு போல் பால்கள் செயல்பட்டாலும் இந்து ஞானத்தின் ஒரு மரபாக ஏற்றுக்கொள்கிறார். 'தோட்டத்துக்குள் புகுந்த ஒரு பொற்கொல்லன், அங்கே இருக்கும் தாமரையை தன் உரைகல்லில் உரசியே மதிப்பிடுவான்' எனும் கருத்தாழம் மிக்க பால்களின் பாடல்களை குறிப்பிடுகிறார். கபீர், சூஃபி போன்ற மரபுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆறு தரிசனங்கள் அத்தியாயத்தில் ஒவ்வொன்றைப் பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். ஒன்று பொருளே முதலில் இருந்தது என்கிறது. மற்றொன்று எல்லாமே அணுக்களால் ஆனது என்று சொல்ல, இன்னொரு தரிசனமோ யோகம் செய்து அவனை அறிய வேண்டும் என்கிறது. நியாய தரிசனமோ தர்க்க வாதம் கொண்டு கடவுளை அறிய முற்படுகிறது. வேதங்களின் பாடல்கள் மூலம் இறையை அறிய முயன்றனர். அதிலிருந்து கிளைத்த உபநிடதம், கீதை போன்றவை அதை மறுத்து பிரம்மத்தை முன்வைக்கிறது. அத்வைதம், துவைதம், தனி வழிபாடு என்ற போக்குகள். இப்படி இத்தனை போக்குகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் முரண்பட்டாலும், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இந்த நாட்டில் அவைகள் இயங்கி வந்தன. 'இது உண்மையில் இந்த சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்று. ஒன்றையொன்று சகித்துக்கொள்வதே நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் ஞானத்தின் தாழ்களை திறக்கக்கூடும்' - என்கிறார் சென். 

இந்த நூலின் முக்கியத்துவம் உணர்ந்த ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென சுனில் கிருஷ்ணனிடம்  சொல்லியிருக்கிறார். ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, சமஸ்கிருத பரிச்சயம் உள்ள  ஜடாயு - வேதங்கள், உபநிடத வரிகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 




Thursday, May 7, 2020

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி.

அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார்.

கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.  



திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது. 

கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத்து பேசும் தங்கம்மாள்; அலங்கார விஷயங்களிலோ, பொதுவான தகவல்களையோ அறிந்திராத கார்த்தியாயினி, எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் தங்கம்மாள் என இரண்டு பெண்களும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில், கார்த்தியாயினி எல்லாம் அறிந்த கணவனுக்கே புத்தி சொல்கிறாள், இக்கட்டான நேரங்களில் ஒரு விவேகியாய் அவனுக்கு வழிகாட்டுகிறாள். மாறாக தங்கம்மாவோ, கணவன் என ஒருவனுக்காக, அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆண்டுகள் பல கடந்து ஆசைப்படுகிறாள்.  

சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்த கேசவபிள்ளை, தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அந்தப் பதவிக்காக காத்திருந்த எல்லோரின் தலைக்கு மேல் பறந்து சென்று அவர் அதை அடைகிறார். அரசு இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒரு பட்டப்படிப்பு படித்தவன் குமாஸ்தா வேலை செய்வதா என அவரை ஏளனம் பேசியவர்கள், இன்று வாயடைத்துப் போகிறார்கள். கொஞ்சம் பொறுமை, தெளிவு என மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு அவர் மேலே செல்கிறார். அதற்கு முதல் படியில் ஏற உதவியது தங்கம்மாள், எனவே அவளை எப்போதும் மறக்காமல் இருக்கிறார். 

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியில் இந்தியா சுதந்திரம் பெற போராட்டம் நடக்கிறது. அதனால் இங்கேயும் போராட்டம் நடக்கிறது. கேசவபிள்ளை காங்கிரஸ் போராட்ட வீரர்களை அடக்கி ஒடுக்குகிறார். திருவாங்கூர் தனி நாடாகும் என நினைத்திருக்கும் கேசவபிள்ளை போன்றோருக்கு அது நடக்காமல் இந்தியாவோடு இணைந்து சுதந்திரம் பெறுகிறது. சுதந்திரம் பெற்றாலும் அரசாங்க இயந்திரம் அதேதானே. இப்பொழுது காங்கிரஸ் ஆட்களுக்கு ஆட்சி நடத்த கேசவபிள்ளையின் உதவி தேவைப்படுகிறது. பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி முடிந்து கம்யூனிஸ்ட் ஆட்சி வரும்போதே கேசவபிள்ளை பதவியைவிட்டு விலக நேர்கிறது. 

சுதந்திரம் பெற்றாலும், அந்தச் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். தியாகிகளுக்கு கொடுக்கக் கூடிய நிலம் கூட மற்றவர்களால் பறிக்கப் பட்டு, அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பின்னர் தளர்ந்து போய், மடிந்து சாகிறார்கள். இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதை தகழி நாவலில் சொல்லிச் செல்கிறார். தியாகம் செய்தவன் வீதியிலும், தியாகம் செய்தது போல நடித்தவர்கள் மின்விசிறிக்கு கீழே அமர்ந்துகொண்டு அடுத்தவர்களை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது.

கேசவனின் பெண்பிள்ளை கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவருக்கு தங்கம்மாளிடம் தொடர்பு ஏற்படுகிறது. ஆசிரமம், சாமியார் என சுற்றிக்கொண்டிருந்த தங்கம்மாள் இப்பொழுது கேசவபிள்ளை தன்னுடன் இருந்தால் போதும் எனச் சொல்கிறாள். கொஞ்ச நாட்களில் அவளிடம் இருந்து விடுபட்டு வருகிறார். தங்கம்மாள் இந்த 45 வயதில் கர்ப்பமாக இருக்கிறாள். கம்யூனிஸ்ட் ஆட்சி வருவதால் தான் வேலையை விட்டு விலக நேரிடும் என நினைக்கிறார் கேசவப்பிள்ளை. மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும், அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என மனைவி சொல்ல; என்று அவருக்கு இப்பொழுது நிறைய பிரச்சனைகள். 

லஞ்சம் ஊழல் என ஒவ்வொரு அரசாங்க காரியத்துக்கும் பணம் கொடுத்தே வெற்றி பெற முடிகிறது. கஞ்சி குடித்தாவது உயிர் வாழ்வோம் என்று சொல்லும் கார்த்தியாயினி கூட ஓரிடத்தில் ஏலக்காய் தோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். இந்த அரசாங்க வேலையால், கேசவபிள்ளை தாய், தந்தையை இழக்கிறார். சொந்த ஊரில் யாரும் அவருடன் பழகுவதில்லை. ஏன் நண்பர்கள் என்று கூட யாருமில்லை. அவர் பெற்ற செல்வம் அதிகம். அவர் மேலே இருக்கும் படிகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் கீழே உள்ளவர்களை மறந்து விடுகிறார். ஒரு காலத்தில் கேசவபிள்ளை எந்த வேலையும் இல்லாமல், காசு இல்லாமல் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம், ஒரு கிழவியின் கடையில் காசு கொடுக்காமல்  சாப்பிட முடிகிறது. நிறைய ஆண்டுகள் கழிந்து அவருக்கு அந்த கிழவியின் முகம் நினைவுக்கு வருகிறது. 

திவான்களின் ஆட்சியில் இருந்து, சுதந்திரம் பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்த அன்றைய திருவாங்கூரின் சரித்திரத்தை சொல்லிச் செல்கிறார் தகழி. பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள், பின்னர் ஊழலில் திளைத்து வருமானம் ஈட்டுபவர்கள், அரசாங்க கதவை தட்ட முடியாத ஏழைகள் என அவர் அன்றைய நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி. 

தமிழில்: சி.ஏ. பாலன்  




Monday, April 20, 2020

மாடித் தோட்டம்

இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம்.

எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் கீரையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

பெரும்பாலும் நாம் கடைகளில் தான் கீரை, காய்கறிகள் வாங்குகிறோம். தோட்டம் போட்டாலும் நாம் கடைக்குப் போகத்தான் வேண்டும். ஆனால், இரண்டு கொத்து கருவேப்பிலை வாங்க ஒரு கட்டு கீரை வாங்க என அடிக்கடி போக வேண்டியதில்லை.

இரண்டு கத்தரி காய்த்தாலும் அது நாம் விளைவித்தவை. எந்த மருந்தும் அடிக்காமல் வளர்ந்தது. ஆர்கானிக் என்று அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை உணவுகளை பெறமுடியும். முயன்று பாருங்கள்.

















Wednesday, April 8, 2020

என் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று எண்ணும் பெற்றோரா நீங்கள் ?

எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'கால் முளைத்த கதைகள்'. அப்பொழுது அந்தப் புத்தகம் அவனுக்கு கதை சொல்வதற்காக நான் வாங்கியது. பலமுறை அதில் உள்ள கதைகளை அவனுக்குப் படிததுச் சொல்லியிருக்கிறோம்.


பின்னர் தெனாலி ராமன், பீர்பால், மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் என நகைச்சுவை புத்தகங்களில் அவனுக்கு கதைகள் சொல்லி இருக்கிறோம். பள்ளி செல்லத் தொடங்கிய பின்னர் அமர் சித்திர கதைகள் வாங்கித் தர, சித்திரப் படம் அவனுக்குப் பிடித்து வாசிக்க முயற்சி செய்தான். புத்தக விழாக்களுக்கு அழைத்துச் சென்று அவனையே எடுக்கச் சொல்லி வாங்கி வந்துள்ளோம். சிறார் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, விழியன் போன்றோரின் புத்தகங்கள் தும்பி, றெக்கை போன்ற மாத இதழ்கள் என படிக்க ஆரம்பித்தான். இப்பொழுது ஜெயமோகனின் 'பனி மனிதன்' நாவலை நான்கே நாளில் முடித்துவிடுகிறான்.

இதை இங்கே சொல்லக் காரணம், படிப்படியாக அவர்களை வாசிப்புக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்றுதான். ஒரே நாளில் அவர்களை வாசிக்க வைக்க முடியாது. ஒரு புத்தகம் படிக்கவில்லை என்றால், அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து புத்தகம் வாங்க வேண்டும். படிக்காமல் விட்ட புத்தகத்தை பின்னர் நிச்சயம் படிப்பார்கள்.

தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் பேச்சு மற்றும் பயிற்று மொழி ஆங்கிலத்தில் இருக்கும். தமிழ் மொழியைத் தள்ளியே வைத்திருப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போன முறை பெற்றோர் சந்திப்பில் ஒரு தந்தை, ஆங்கிலத்தில் தன் குழந்தை சிறப்பாக பேச மறுக்கிறாள், நீங்கள் இன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் சொன்னார். அந்தக் குழந்தை படிப்பது மூன்றாம் வகுப்பு :(. இப்படி பெற்றோர் இருப்பதால் , பள்ளி நிர்வாகத்தால் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சரி தமிழ் படிக்க வைக்க என்ன செய்யலாம்?

* சின்ன வயதில் குழந்தைகள் புத்தகத்தை கிழித்து விடுவார்கள் என்று நாம் புத்தகம் வாங்கித் தராமல் இருக்கிறோம். கிழித்தாலும் பரவாயில்லை, அவர்களைப் படிக்க வைக்க முயல வேண்டும். கெட்டியான பக்கங்கள் உள்ள வண்ண பட கதைகள் கொண்ட சிறு புத்தகங்கள் உண்டு. அவற்றை வாங்கித் தரலாம்.

* அவர்களைப் படி படி என்று சொல்லிவிட்டு நாம் தொலைக்காட்சி மற்றும் போனில் மூழ்க கூடாது. அவர்களுடன் சேர்ந்து நாமும் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாளிதழ் படிக்கலாம்.

* அவர்கள் படிக்கவில்லை என புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த கூடாது. இந்த புத்தகம் இல்லை என்றால் அடுத்த புத்தகங்களை விரும்பக் கூடும்.

* ஒரே மாதிரியான புத்தகங்களை வாங்காமல், நகைச்சுவை(தெனாலி போல்), வரலாறு, அமர் சித்திரக் கதைகள் என முயற்சி செய்யலாம்.

* புத்தக விழாக்களுக்கு சென்று அவர்களைத் தேர்வு செய்ய சொல்லலாம். கண்டிப்பாக படிப்பார்கள்.

* சில புதிய வார்த்தைகள் கதைகளில் வரும். அவர்கள் அதற்கு அர்த்தம் கேட்கும்போது சொல்லிக்கொடுக்க வேண்டும். இது கூட தெரியாதா என அவர்களைத் திட்ட கூடாது.

இப்படியெல்லாம் அவர்கள் படிப்பதால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.

* தமிழ் என்னும் மிகச் சிறப்பான மொழியில் அவர்கள் படிக்கிறார்கள். தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் தாய் மொழியில் படிக்க வேண்டும்.

* அவர்களின் மொழி வளம் பெருகும். நிலா/சந்திரன்/மதி/திங்கள் - ஆகிய வார்த்தைகள் குறிப்பது ஒன்றையே என்பது நிறைய படிக்க தெளிந்து வரும்.

* பாடப் புத்தகம் தாண்டிய அறிவைப் பெறுவார்கள்.

* இலக்கியம் தீர்வுகளை தராது, ஆனால் இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும். சிக்கலான சமயங்களில் முடிவுகள் எடுக்க பிற்காலத்தில் உதவும்.

* கதைப் புத்தகங்கள் படித்தால், பாடப் புத்தகத்தில் ஆர்வம் இருக்காது எனச் சிலர் நினைக்கலாம். உண்மையில் பாடப் புத்தகம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது வாசிப்பு பழக்கம்.

இந்த தனிமை நாட்களில் வெளியே சென்று புத்தகம் வாங்கவோ, ஆன்லைனில் வாங்கவோ முடியாது. குறைந்தபட்சம் அவர்களிடம் பள்ளி தமிழ் பாடப் புத்தகம் இருந்தால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதை வாசிக்க சொல்லி பிழைகளைத் திருத்துங்கள். தமிழில் படிப்பது எளிது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.


Friday, April 3, 2020

மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்

சுதந்திரத்துக்கு பாடுபட்டு தன் வாழ்க்கையை மறந்த ஒரு வீரனின் கதை. பிரெஞ்சு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருபகுதி மய்யழி. கேரளாவின் மய்யழி ஆற்றங்கரையில் அமைந்தது அவ்வூர். பிரெஞ்சு தேசத்தினர் வந்து அங்கு தங்கியிருந்து ஆண்ட கதையை சொல்லத்தொடங்கும் நாவல், நாடு சுதந்திரம் பெறுவதில் முடிகிறது. வெள்ளைக்காரர்கள் என்றால் நல்லவர்கள் என்று நம்பும் ஊர் மக்கள், அவர்கள் அடித்து பிடுங்கினாலும் தலை வணங்கும் மக்கள், சாராயப் போதையில் மிதக்கும் மக்கள் என நிரம்பிய ஊர் மய்யழி. உண்மையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் மய்யழியையே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மய்யழி மக்களுடன் நண்பர்களாக பழகி, ஒருவருக்கொருவர் உறவினர் போல மாறிவிடுகிறார்கள். 

மய்யழியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் தந்தைக்கு மகன் தாசன். தாசன் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நிமிரமுடியும் என்ற நிலை. நன்றாக படிப்பதால் அவன் பள்ளி ஆசிரியர் அவனுக்கு நிறைய சொல்லித்தருகிறார். ஆசிரியருக்கு இந்த மய்யழி சீக்கிரம் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலை காரணம் அவர் இயற்கை எய்த நேர்கிறது. தனது மாணவன் யாரேனும் இந்த விடுதலை வேள்வியை தொடர்ந்து நடத்துவான் என்று சொல்லிக்கொண்டே அவர் கண்மூடுகிறார். அவர் சொன்னது போலவே தாசன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்கிறான்.




அவனுக்கும் ஆசிரியரின் அக்கா மகளான சந்திரிகாவுக்கும் காதல். சின்ன வயதில் இருந்தே இருவரும் பழக்கம். தாசன் படித்து முடித்த பின்னர் மய்யழியின் ஊர் மூப்பன் துரை அவனை அழைத்து தனது அரசில் பெரிய வேலையோ அல்லது மேற்படிப்பு படிக்க பிரஞ்சு செல்ல வேண்டினாலும் உதவக் காத்திருப்பதாகச் சொல்கிறார். அவன் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் செய்யும் புரட்சியால் தாசனின் தந்தை சிறை செல்ல நேர்கிறது. தாசன் மய்யழியை விட்டு வெளியேறி ஒதுக்குபுறமாக தங்குகிறான். 

சந்திரிகாவுடன் உள்ள பழக்கம் அப்படியே தொடர்கிறது. தாசனின் தந்தை சிறையிலிருந்து திரும்பிய பின்னர், தாசன் சிறை செல்ல நேர்கிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, மய்யழி சுதந்திரம் அடைகிறது. வெள்ளைக்கார மக்கள் அவர்கள் நாட்டுக்கு செல்கிறார்கள். தாசன் சிறையில் இருந்து விடுதலை பெறுகிறான். அவனின் நண்பர்கள் இப்பொழுது இருக்கும் அரசில், ஏதாவது வேலையில் சேரச் சொல்ல அவன் மறுத்து விடுகிறான். தந்தையின் கோபத்தால் அவனின் வீட்டுக்கும் தாசன் செல்வதில்லை. தாசனுக்கு ஏதாவது வேலை இருந்தால் சந்திரிகாவை கட்டி வைப்போம், இப்படி எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒருவனுக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பதென அவளின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்கிறார். இறுதியில் அது அவளின் இறப்பில் முடிகிறது. 

தாசனின் பாட்டியாக வரும் குறம்பியம்மா, நாவல் முழுதும் வருகிறார். ஊரின் மிக வயது முதிர்ந்த பாட்டி. வெள்ளைக்காரர்கள் மேல் மிகவும் மதிப்பும் வைத்திருக்கும் குறம்பி அவர்களுடன் நன்றாகவே பழகுகிறார். தன் பேரன் தாசன் கோட் சூட் அணிந்து வருவான் என்றே காத்துக்கொண்டிருக்கிறார். சுதந்திரம் பெற்றால், வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள் என்பதை பாட்டியால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் திரும்பவும் எப்பொழுது வருவார்கள் என்று கேட்டு நச்சரிக்கிறார். குறம்பியிடம் எப்பொழுதும் மூக்குப் பொடி வாங்கிப் போடும் வெள்ளைக்காரத் துரை கூட உண்டு. எல்லா வெள்ளையின மக்களும் தங்கள் அதிகாரத்தை காட்டாமல், சிலர் மக்களுடன் இயல்பாக பழகுகிறார்கள். 


குறம்பி பாட்டி தாசனின் சின்ன வயதில் நிறையக் கதைகள் சொல்கிறார். அதில் ஒரு கதை, கடற்கரையில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் ஒரு மலை போன்ற வெள்ளியங்கல்லில் தான் நாம் எல்லாம் தும்பிகளாகத் திரிந்தோம். பின்னர் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து, வயது மூத்து இறந்தாலும் அங்கே தான் செல்வோம் என்று கதை சொல்ல, தாசனுக்கு அது மனதில் பதிந்து விடுகிறது. அங்கே சந்திரிகாவும் தும்பியாக பறந்து கொண்டிருப்பாள் என்று நம்புகிறான். இப்பொழுது மய்யழியில் அவனைத் தவிர அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறான் தாசன். கூடிய சீக்கிரமே அவனும் அங்கே வெள்ளியங்கல்லின் மீது தும்பியாக பறந்து கொண்டிருந்தான். 

நாவலில் சில உரையாடல்களும், முக்கியமான வார்த்தைகளும் பிரஞ்சு மொழியிலேயே இருக்கிறது. இவ்வாறு இருப்பது நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை தருகிறது. வலிந்து திணித்த வார்த்தைகளும், உரையாடல்களும் இல்லாமல் கதை தன் போக்கில் நகர்கிறது. கதை மாந்தர்கள் அனைவரின் சித்தரிப்பும் மய்யழி ஊரை நம் முன்னே வந்து காட்டுகிறது. மலையாள மூலத்தில் இருந்து இளையபாரதி அவர்கள் தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 



Wednesday, March 25, 2020

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்

ஒரே ஒருவரின் மாத சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, ஒரு தொழில் ஆரம்பித்து பின்னர் செல்வச் செழிப்பில் வாழும்போது அந்த மகிழ்ச்சி கிடைக்காத ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் அவ்வளவு எளிதாக இந்த சிறு நாவலைச் சொல்லமுடியாது. கதையில் வரும் கதை மாந்தர்களும் சாதாரணமாக சித்தரிக்கப்படவில்லை. 

அப்பா, அம்மா, மகன், மகள் மற்றும் சித்தப்பா என சிறிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவரான அப்பாவின் வருமானத்தை நம்பியே எல்லோரும் இருக்கிறார்கள். ஒருநாள் அப்பாவின் வேலை இல்லாமல் போக, சித்தப்பா தொழில் தொடங்கலாம் என்கிறார். அப்பாவின் பணியிலிருந்து வந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒரு மசாலா கம்பனி ஆரம்பிக்கிறார்கள். அப்பாவும், சித்தப்பாவும் தொழிலில் பங்குதாரர்கள். 




தொழில் நன்றாக செல்ல பணவரவும் வருகிறது. புது வீடு, பொருட்கள் என வேண்டியதை வாங்குகிறார்கள். சித்தப்பா மட்டுமே தொழிலை கவனித்து கொள்கிறார். கதையின் நாயகனான மகனும், பெண் பிள்ளையான மைதிலியும் இப்பொழுது பெரிய பிள்ளைகள். சித்தப்பா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி குடும்பத்தினர் யாரும் அவரைத் தொந்தரவும் செய்வதில்லை. அவருக்கென தனி குடும்பம் அமைந்துவிட்டால் பின்னர் அவர் நம்மைக் கவனிக்க மாட்டார் என்கிற பயம் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. 

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்தல் எனச் சொன்னாலும், சில சமயங்களில் நியதிகளுக்கு உட்பட்டு கட்டாயமாக குடும்பத்தில் வாழ நேரிடலாம். வேறு வழியில்லாமல் இங்கே, இப்படி இருக்கிறோம் நினைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ நேரிடலாம். நாயகனின் அக்காவான மைதிலி, திருமணம் செய்து, கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறாள். தன்னைத் தலைமேல் வைத்துத் தாங்க தனது குடும்பம் இருக்கிறது என மைதிலி நினைக்கிறாள். அவ்வாறே அவளை நடத்துகிறார்கள். 

நாயகனுக்கு தனியாக எந்த வேலையும் கம்பெனியில் இல்லை. மாதமானால் ஒரு தொகை அவனின் வங்கி கணக்குக்கு வந்துவிடும். மசாலா கம்பெனிக்கு அவன் செல்லாமலே சம்பளம் அனுப்பப்படுகிறது. சித்தப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். அனிதா என்னும் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். முதலில் அனிதாவுக்கு ஒன்றும் தெரியாமலிருக்க, போகப்போக அந்த வீட்டின் நிலைமை புரிகிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து வந்து குடும்பம் நடத்தினால்தான் அது நேர்மை, கவுரவம். இப்படி இன்னொருவர் தயவில் என்னால் வாழ முடியாது என்கிறாள். அவனும் சரி, நான் கம்பனிக்குப் போகிறேன் என்று சொல்ல நினைக்கிறான். ஆனால், அங்கே தனக்கு என்ன வேலை இருக்கும், சரி இது நம்ம கம்பெனி தானே, நமக்கும் பங்கு உண்டே என்றெல்லாம் சொல்லிப்பார்க்கிறான். ஆனால் அனிதா சமாதானம் ஆவதில்லை. 

சித்தப்பா திருமணம் செய்யாமல் இருப்பது, அனிதாவுக்கு வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பதை கேள்வி கேட்கிறாள். சித்தப்பாவைத் தேடி ஒருநாள் ஒரு பெண் வீட்டுக்கு வருகிறாள். அவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள். ஆனால் யாரும் அவளை உள்ளே விடுவதில்லை. 'வெங்கா.. நான் டுவ்வி வந்திருக்கேன்' என்று அவள் கூப்பிடும்போது கூட அவர் வெளியே வருவதில்லை.  அவருக்கு நன்கு பிடித்த மசூர் பருப்பு குழம்பை மட்டும் அவரிடம் தந்துவிடுங்கள் எனக் கெஞ்ச, அம்மா அதை வாங்கி வெளியே வீசிவிடுகிறாள். அந்தப்பெண் அழுதுகொண்டே போய்விடுகிறாள். அனிதாவுக்கு இது எதுவும் பிடிப்பதில்லை.  இரண்டு வாரம் கழித்து திரும்புவதாக சொல்லிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் அனிதா. 

கதையின் நாயகன் அடிக்கடி செல்வது ஒரு காப்பி அருந்தும் இடத்திற்கு. ஒரு நாளின் பெரும்பான்மையான இடங்களை அங்கேயே கழிக்கிறான். அங்கே வின்செண்ட் என்னும் சர்வர் பணிபுரிகிறார். நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு ஏதேனும் ஒருசில வார்த்தைகளில் அவன் தீர்வு தருகிறான். அவன் முழுதையும் சொல்லாமலே வின்சென்ட் எப்படி தீர்வு தருகிறான் என்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறான். 

கதைக்கு முடிவு என ஒன்றும் இல்லை. ஆனால், அனிதா ஊருக்கு சென்றிருக்கும்பொழுது, அப்பா, அம்மா, மைதிலி, சித்தப்பா மற்றும் அவன் ஆகியோர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு ஒருவகையில் எப்படி கொலை செய்வது, அதை எப்படி மறைப்பது, ஊரில் உள்ள ரவுடிகள் இதை எப்படிச் செய்கிறார்கள் எனப் பேசுகிறார்கள். அப்பா, இதை பற்றி பேச வேண்டாம் என எழுந்து செல்கிறார். 

அனிதா இரண்டு நாட்கள் முன்னரே வந்திருக்க வேண்டும். ஒரு தகவலும் அவளைப்பற்றி இல்லை. அவன் காபி கவுஸில் உட்கார்ந்து யோசிக்கிறான், அவள் ஏன் இன்னும் வந்து சேரவில்லையென்று. 

ஓரிடத்தில் சர்வர் வின்சென்ட் சொல்வான் 'ஒரு கதைக்கு பல பரிமாணம் இருக்கும்' என்பான். அதுபோல இந்தக் கதைக்கும் பல கோணங்கள். 

இந்த நாவலின் தலைப்பு, வித்தியாசமான ஒன்று. அதற்கான காரணமும் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. கன்னடத்தில்  இருந்து கே.நல்லதம்பி அவர்கள் இந்நூலை தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.