Wednesday, December 28, 2011

அசடன் (இடியட்) நாவல்

பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இடியட் நாவலை, எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள் மொழிபெயர்த்து, மதுரை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. முன் வெளியீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்த எனக்கு உடுமலை.காம் வழியாக இந்தப் புத்தகம் போன வாரம் என் கைக்கு கிடைத்தது.


எம்.ஏ. சுசீலா அவர்களின் முந்தைய மொழிபெயர்ப்பான, குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றிய எனது பதிவை இந்தத் தளத்தில் எழுதி இருந்தேன். அந்தப் பதிவை, அசடன் நாவலின் பின் பகுதியில் அச்சிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனது எழுத்தை அச்சில் பார்ப்பது இதுவே முதல் முறை, அதுவும் எனக்குத் தெரியாமலே. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

புத்தகம் என் கைக்கு கிடைக்கும் முன்னர், புத்தகத்தில் எனது பதிவு வெளியான செய்தியைத் தெரிவித்து, வாழ்த்திய சஹிதா அக்காவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். சுசீலா அம்மாவுக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.

அசடன் நாவலைப் படிக்கத் தொடங்கி, நூறு பக்கங்களை கடந்து விட்டேன். முழுவதும் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அசடன் நாவலைப் பற்றிய ஜெயமோகன் அவர்களின் கட்டுரைகள்.
அசடனும் ஞானியும்
அசடன்

அசடன் நாவலைப் பற்றிய குறிப்புகள்:
இடியட்(அசடன்)நாவலின் படைப்பாளி பற்றி...
அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1
அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1


புத்தகம் வாங்க:

=============================
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
=============================
உடுமலை.காம் வழியாக: அசடன்
=============================


Tuesday, December 20, 2011

பூமணி - விருது விழா


இந்த வருடத்தின் 'விஷ்ணுபுரம்' விருது எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு, சென்ற ஞாயிறு அன்று கோவையில் வழங்கப்பட்டது.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி இருக்குலாம்' என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் 'அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்'. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள்.

நிகழ்ச்சியை 'காக்கைச் சிறகினிலே' பாடலோடு ஒரு சிறு பெண் ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் நான் ரசிக்கும் பாட்டு, அழகாக பாடி விழாவைத் தொடங்கி வைத்த அப்பெண்ணுக்கு எனது வாழத்துக்கள்.




கோவை ஞானி அவர்கள் விழாத் தலைமை உரையாற்றினார். பூமணிக்கும், அவருக்கும் உள்ள நட்பையும், பூமணி அவர்கள் எழுதி வெளியாகப் போகும், 'அஞ்ஞாடி' நாவலைப் பற்றி குறிப்பிட்டார்.

இயக்குனர் இமையம் பாரதிராஜாவை பேச அழைத்த செல்வேந்திரன், பூமணி அவர்களின் நாவல் வெளியான வருடங்களில், பாரதிராஜா அவர்களின் படங்கள் வெளிவந்ததை சுட்டிக் காட்டி, இதற்கு மேல் வேறன்ன வேண்டும் அவரை இந்த விழாவிற்கு நாங்கள் அழைக்க, என்று கூறி இயக்குனரை பேச அழைத்தார்.

பாரதிராஜா அவர்கள் பேசும்பொழுது, "இலக்கிய விழாவில் என்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை" என்று கூறியவர், 'எத்தனையோ விருதுகள் நான் வாங்கி இருந்தாலும், இந்த சபையில், எழுத்தாளர்கள் கூடி இருக்கும் ஒரு இடத்தில், பூமணிக்கு நான் விருது வழங்கியதை மிகப் பெரும் பேறாக எண்ணுகிறேன்' என்றார்.


எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், கரிசல் மண்ணையும், அங்கு இருக்கும் மக்களைப் பற்றியும் அழகாகப் பேசினார். 'கொஞ்சம் கரிசல் மண்ணை கையில் எடுத்து, குப்பைகளை ஊதித் தள்ளிவிட்டு, கையில் மீதி இருக்கும் மண்ணை 'நெய் கரிசல்' என்று வாயில் போட்டுக் கொள்வார்கள். பூமணியின் ஒரு கதையில் வருவது போல புளிச்ச தண்ணிக்கு கூட வழி இல்லாத ஒரு ஊரில், அந்த மக்கள் இன்னும் ஊரையும், நிலத்தையும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். கி.ரா அவர்களின் ஒரு கதையில் வருவது போல, ஒரு பெரியவர் சாகக் கிடக்கும்பொழுது, உயிர் பிரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கரிசல் மண்ணை, வாயில் கரைத்து ஊற்றியதும் அவரின் உயிர் பிரிகிறது அந்தக் கதையில். வேம்பும், கருவேலமும் தான் எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு மரங்கள். இரண்டுமே வறட்சியைத் தாங்கி வளர்பவை. பனை மரம் கூட எங்காவது ஒன்றுதான் தென்படும். ' என்றார்.


ஜெயமோகன், 'எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் பசுமை. தலையை மேலே தூக்கிப் பார்த்தால் பச்சைப் பசேல் என்றுதான் தெரியும். முதன் முறையாக, பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு கிளம்பி கரிசல் மண்ணுக்கு வந்த பொழுதுதான், வானம் இவ்வளவு பெரியது என்று புரிந்தது. எங்கும் பசுமை இல்லாமல், பார்வையின் முடிவில் வானமும், மண்ணும் சேரும் ஒரு அழகை நான் அங்குதான் கண்டேன். அந்தக் கணத்தில் நான் அழுது விட்டேன்' என்று குறிப்பிட்டவர், 'கலை என்றால், எழுத்து, இலக்கியம், சினிமா, ஓவியம் என அனைத்தும்தான்' என்றார்.

பூமணி அவர்கள் மிகவும் தளர்வாக இருந்ததால், அவர் எழுதி வைத்திருந்த உரையை வாசகர் படித்தார். அந்த உரை ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

எல்லோருமே பேசும்பொழுது, கரிசல் மண்ணின் பெருமையையும், அந்த ஊர்களைச் சுற்றியுள்ள எழுத்தாளர்களையும் பற்றி தவறாமல் குறிப்பிட்டார்கள். நிச்சயம் ஒருநாள் கோவில்பட்டிக்கு செல்ல வேண்டும், அந்தக் கரிசல் மண்ணை நானும் முகர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கரிசல் மண்ணின் மீதும், கரிசல் இலக்கியத்தின் மீதும் ஒரு தீராக் காதலை ஏற்படுத்திய இந்த விழாக் குழுவினருக்கு எனது நன்றிகள்.

Thursday, November 3, 2011

நூலகம் தேவையா?


நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?.

நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை.

போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும்.

எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்?

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்


Tuesday, November 1, 2011

அரசுப் பள்ளிகளில் ஓர் ஆச்சரியப் பள்ளி

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, ராமம்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. பிராங்க்ளின் என்பவர் பற்றி புதிய தலைமுறை வார இதழ், ஈரோடு கதிர் அவர்களின் வலைத் தளம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு என பல முறை அந்தப் பள்ளியை பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நேரில் செல்ல முடியவில்லை.



போன சனிக்கிழமை அன்று, சாமக்கோடாங்கி பிரகாஷ் தான் அங்கு செல்லவிருப்பதால், 'வருகிறீர்களா' என்று கேட்டார். என்னால் அன்றும் செல்ல இயலவில்லை. நண்பன் கமலக்கண்ணன் செல்வதாக கூறினான். நண்பர்கள் அங்கு சென்று வந்ததை பிரகாஷ் தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு அரசாங்கம் செய்ய முடியாத ஒரு செயலை, அந்த ஊர் மக்களும் அந்த ஆசிரியரும் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை
இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு
நல்லார் ஒருவர்

பள்ளியின் வலைத்தளம்
இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி




Tuesday, October 18, 2011

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும்
இந்நாட்டு மன்னர்களாய்
வீதிக்கு கவுன்சிலர்
வார்டுக்கு மெம்பெர்
நகரத்துக்கு தலைவர்
மாநகரத்துக்கு மேயர்
தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க
ஓட்டுப் போட்டவன்
ஓட்டுப் போட்ட தினம் மட்டும்
மன்னன்.


Thursday, October 13, 2011

காப்பாத்திக்கோ















கோவிலில்
'பையனக் காப்பாத்து'
'குழந்தைகளக் காப்பாத்து'
என்று பாட்டி வேண்டிக்
கொண்டிருக்க,
குழந்தையோ
கடவுளைப் பார்த்து
'உன்னையக் காப்பாத்திக்கோ'
எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


















(மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)



Tuesday, October 4, 2011

நட்பின் இலக்கணம்

நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


==============

அன்னச் சேவ லன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக்
கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும்
மையன் மாலையாங் கையறு பிணையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே.
-- பிசிராந்தையார்

பொருள்:
========
அன்னச் சேவலே, அன்னச் சேவலே
போரில் வென்று, யானை மீதேறி
ஊர்க்கோலம் வரும்
மன்னனின் முகம்போல
மலைமடிப்பில் முழுமதி ஒளிரும்
இந்த அழகிய இரவில்
நான் மட்டும் துயருற்று இருக்கிறேன்.
நீ குமரிக் கடலில் இருந்து
அயிரை பிடித்து உண்டு
வடக்குமலைக்குச் செல்லும் போது வழியில்
சோழ நன்னாடு வருகையில்
கோழியோனின் உயர்ந்த மாடத்தில்
உன் பேடையுடன் இறங்கி
வாசலில் புகாது அவன் அவைக்குச் சென்று
என் பெரு நற்கிள்ளி கேட்க,
பெரும்பிசிர் ஊரைச் சேர்ந்த
ஆந்தையாரின் அடியவன் என்பாய் என்றால்
உன் அழகிய பேடை அணிய தன் அன்பு கலந்த
அணிகலன்களை அள்ளிப் பரிசளிப்பான்.

============

சங்கக் கவிதையுலகில் நட்பின் இலக்கணமாக இந்தக் கதை மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது. அன்பின் பெரு வல்லமையைப் பற்றி சொல்லும் இந்தக் கவிதை, எனக்கு அடைக்குந் தாழ்களையே மேலும் துல்லியப் படுத்துகிறது. பறவை மண்ணிலிருந்து விடுபட்டது. மண்ணின் எண்ணற்ற சுவர்கள், எல்லைகள், அடையாளங்கள் அதற்கு இல்லை. பிசிராந்தையார் உண்மையில் சொல்ல முயன்றது - மண்ணில் மானுடத்தைத் தளையிடும் எல்லைகளைப் பற்றி அல்லவா?.
- ஜெயமோகன்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

Tuesday, September 27, 2011

பட்டு, மயில் மற்றும் ஏற்காடு

பட்டாம் பூச்சி தவிர அனைத்து படங்களும் ஏற்காட்டில் எடுத்தவை. பட்டாம் பூச்சியை படம் பிடித்தது வீட்டில். (படங்களை கிளிக் செய்து பார்க்கவும்)














Wednesday, September 21, 2011

எனது டைரியிலிருந்து - 4

ஈரம் படிந்த வீடு
==============

எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்!
ஒரு சொல், ஒரு ஜாடை
ஒரு முகக்குறி காட்டியிருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு..

தொப்பூழ் கொடி சுவாசம்
தந்த தாயே நீ
மாரடைத்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா

தகர மயானம் முன் குவிந்த
விராட்டிப் படுக்கையில் நீ

இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த
உன் வலது கரத்தில்
குறடு நுழைத்து வெட்டியா வளையலோ
அடுத்தவனுக்கு.

மகளே உனக்கு என்னம்மா
வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிக்கம்பியில் காயும் உன்
நைந்த உள் பாவாடை காட்டி
அழுகிறேன் பெருங்குரலில்..

- பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)


Tuesday, September 6, 2011

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர்.

ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார்.

=======================

'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்'

'சாப்பிட்டீங்களா'

'எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது. அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்'

=======================

நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்கலாம் போலத் தோன்றுகிறது.

நன்றி: புதிய தலைமுறை



Wednesday, August 17, 2011

சிக்னல்















சிக்னல்


சிக்னலில்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

கைக்குட்டை, சாக்ஸ், பூ
மற்றும் இன்னபிற விற்கும்
சிறுவர்களின் கல்வியும்
அவர்களின் பால்ய சந்தோசங்களும்
அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து.
நகராமல் அப்படியே இருக்கிறது.

***************

ஆம்புலன்ஸ்

மனிதம் மறந்து
விட்டதன் அடையாளமாய்
அவசர வண்டிக்கு
வழிவிடச் சொல்லி
காவலர் ஓடிவருகிறார்.

***************

சுதந்திரம்

ஊரெல்லாம் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள்
அன்றும் வாட்ச்மேன் தாத்தா
கொடியேற்றி காலையில் கொடுத்த
சாக்லேட்டோடு
வேலைக்கு வந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, August 12, 2011

தொலைக்காட்சி உலகம்

இருபத்தி நாலு மணி நேர செய்திகள்
இருபத்தி நாலு மணி நேர விளையாட்டு
இருபத்தி நாலு மணி நேர திரைப்படங்கள்
இருபத்தி நாலு மணி நேர பாடல்கள் என
இருபத்தி நாலு மணி நேரத்தில்
ஒரு நிமிடமும் வீணாவதில்லை..

விடுமுறை தினங்களும், பண்டிகைகளும்
நடிகர் பேட்டிகள், விளம்பரங்கள்
முதல் முறையாக ஒளிபரப்பாகும் வரலாற்றுப் படங்கள்
என சுமூகமாகவே கழிகின்றது..

மீதி நாட்களுக்கு, இருக்கவே இருக்கிறது..
எப்போது முடியும் எனத் தெரியாத
நெடுந் தொடர் கதைகள்..

சமையலுக்கு, அழகுக்கு,
நோய்களுக்கு, மனை வாங்குவதற்கு,
ராசிக் கற்கள், ஜோதிடம் என எல்லாவற்றையும்
சொல்லித் தருகிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

பெரும் நேரத்தை விழுங்கும்
இதன் இயக்கத்தை நிறுத்தினால்
நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
நம் வீட்டுக்குள்.


Wednesday, August 10, 2011

பாலிதீன் பைகளில் டீ !

இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டு வேலைகள் இருப்பதால், வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள். பதினோரு மணிக்கு டீ வாங்க காசு கேட்டார்கள். வேலைக்கு வந்தது மூன்று பேர். ஒருவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்குப் போனார். வரும்போது, பாலிதீன் பையில் வாங்கிய டீயோடு, கூடவே மூன்று பிளாஸ்டிக் கப்புகளும் வாங்கி வந்திருந்தார்.

இப்படி டீ வாங்கி குடிக்காதீர்கள் என்று சொன்னேன். காதிலேயே போட்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவன் போய் சொல்ல வந்துட்டான் என நினைத்திருக்கலாம்.

எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள். இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா?. இப்படி குடிப்பவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்பவர்களே.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டாலும், மறைத்து வைத்து பயன்படுத்தும், நமக்கு அதன் தீமைகள் எப்போது தெரியப் போகின்றன?.

வீதிக்கு நாலு டீக் கடைகள் இருக்கும் நம் ஊர்களில் எப்படி இதை சமாளிப்பது?. என்னதான் தடை போட்டாலும், மக்களாகத் திருந்தாமல் பாலிதீன் என்னும் நஞ்சை அழிக்க முடியுமா?

இந்த உலகை காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் நாம்...?

பழைய பதிவொன்று: பாலிதீன் என்னும் பிசாசு..




Tuesday, August 9, 2011

குறும்படம்: துருவ நட்சத்திரம்

நேற்று இந்த 'துருவ நட்சத்திரம்' குறும்படம் கண்ணில் பட்டது.
பிடித்ததால் உங்களுக்காக இங்கே;






Wednesday, August 3, 2011

சிநேகம்














எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.

பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.

தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.

மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Monday, August 1, 2011

புதிய இடம்: வால்பாறை

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள்.

மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;














Thursday, July 28, 2011

எல்லோருக்கும் மழை














எல்லோருக்கும்
பெய்கிறது மழை

'காலையில் இருந்து இப்படித்தான்
கொட்டிட்டு கெடக்குது
ஒரு வேல செய்ய முடியல'

'எப்பதான்
நின்னு தொலையுமோ'

'இன்னைக்கு ஒண்ணும்
பண்ண முடியாது'

'மழ நின்னாதான்
பொழப்பு ஓடும்'

என்பவர்களுக்கும் சேர்ந்தே
பெய்து கொண்டிருக்கிறது மழை.


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..



உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி





பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ





Friday, July 8, 2011

புகை புகையாக

தூயோன் புத்தகத்தில், கோபிகிருஷ்ணன்...


முயற்சி.. திருவினை


பதினேழு ஆண்டுகள்
முழு மூச்சாக
ஊதித் தள்ளியதில்
உனக்கு நுரையீரல்களில்
அரிப்பு நோய் கண்டிருக்கிறது என்று
வருத்தத்துடன் அவர் சொன்னபோது
இவ்வளவு நாள் பட்ட கஷ்டம்
வீண்போகவில்லை என்றானதில்
ஒரு ஆத்மீக ஆனந்தம்.

**************************************

திருப்தி

புகை புகையாகப்
புகைத்ததில்
ஒரு நுரையீரலை இனி
ஒன்றும் செய்வதற்கில்லை என்று
அவர் சொன்னபோது
ஒரு வேஷ்டி இருக்கும்போது
இன்னொன்றுக்கு ஆசைப்படுவது
ஆடம்பரம் என்று சொன்ன
மகாத்மாவின் நினைவு வந்து
ஆனந்திக்கச் செய்தது.



Tuesday, July 5, 2011

நாலணா

கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு.

"காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது.



சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா?

நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ஒரு பென்னி, இரண்டு பென்ஸ் என காசுகளும், ஒரு பொருளை 67, 49, 99 காசுகள் என வாங்க முடியும். மீதி சில்லறைக் காசுகளை எண்ணிக் கொடுப்பார்கள்.

ஒரு நாணயம் ஒழிக்கப் படுகிறது என்றால், என்ன பொருள்.. இனிமேல் அந்தக் காசுக்கு எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியாது. அது செல்லாக் காசு. உயர்ந்து வரும் விலை வாசியைக் குறைக்க எந்த வழியும் தெரியவில்லை.

கவிஞர் சொல்வது போல, இன்னும் கொஞ்ச நாளில் ஐம்பது காசு நாணயங்களும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

நூறு காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது அழிந்து, நூறு ஒரு ரூபாய் சேர்ந்து நூறு ரூபாய் எனப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். பேருந்து டிக்கெட்டுகளில் இனி "காசுகள்" என்ற வார்த்தைகள் இருக்காது.

பொருளாதார வேகத்துக்கு, நம்மை இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம் நாட்டின் அறிஞர்கள். அவர்களுக்கு விலைவாசியைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

சத்தமாக சொல்லிக் கொள்ளலாம், எம் நாட்டில் சில்லறைகள் இல்லை என்று. மெதுவாக சொல்லுங்கள், இன்னும் எங்கள் நாட்டில் சோற்றுக்கும் வழியின்றி, உடைக்கும் வழியின்றி, உறங்க இடமின்றி தெருவோரங்களில் லட்ச லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி

Friday, July 1, 2011

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம்.

கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில்.

"மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர்.

"இல்லீங்க.. ஒவ்வொரு தடவ வரும்போதும் ஏதாவது கொடுப்பாங்க"

"கடைக்கு வர்றவங்களுக்கு சில்லற தர்ரதுக்கே சில்லற இல்ல.. இதுல நீங்க வேற"

"இருக்கறத குடுங்க" ராமர் விடவில்லை.

"மொதாலாளி தான் இல்லன்னு சொல்லுரமுள்ள.. இன்னொரு நா வாங்க" - தோசை மாஸ்டரும் சேர்ந்து கொண்டார்.

"அஞ்சு, பத்தாவது குடுங்க" லட்சுமணன் தன் பங்குக்கு பேசினார்.

"காலம் கார்த்தால வந்து வாதிக்கரிங்களே.." முனகிக்கொண்டே கல்லாப் பெட்டியில் ரூபாய் நோட்டுக்களைத் தேடிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.

ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் நீட்டிய புத்தகத்தில் கடைப் பெயரையும், ஊரையும் எழுதி பத்து ரூபாய் என்று எழுதிக் கொடுத்தார் கல்லாக்காரர்.

வெளியே வந்த ராமரைப் பார்த்து, இதுவரைக்கும் வாயே திறக்காத அனுமார் "இங்கயே சாப்பிட்டு போயிரலாண்டா.. பசிக்குதுடா" என்றார். "காலாலே இருந்து இன்னும் முப்பது ரூபா கூட தேரல.. அப்புறம் பார்க்கலாம் வா" என்று முன்னாடி போய்க்கொண்டிருந்தார் லட்சுமணன்.

அவ்வளவு பெரிய மலையைத் தூக்கிய அனுமார், கடல் தாண்டி சென்ற அனுமார், அவர்கள் இருவரின் பின்னால் பசியுடன் போய்க் கொண்டிருந்தார்.

Saturday, June 25, 2011

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4

இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள்.

இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர்.

இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள்

செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம்.
செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது.

இதில் எது உண்மை.. ??
எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது.


ஈரோடு மாவட்ட ஆட்சியர்

நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முட்டி மோதி, இரவு முழுவதும் காத்திருந்து அப்ளிகேசன் வாங்கி, எல்.கே.ஜி படிப்புக்கு முப்பது நாப்பது ஆயிரம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை, அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அரசுப் பணிகளில் பணியாற்றும் பலரும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொண்டிருக்க, தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஈரோடு கலெக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அரசுப் பள்ளிகளின் தரமும் நாம் அறிந்ததே. கலெக்டரின் குழந்தை தங்கள் பள்ளியில் படிக்கிறது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இனி தரமாகப் பாடம் நடத்துவார்கள். கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள் என எளிதாக கிடைக்கும். சத்துணவு தரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போலதான் இயங்கும். என்ன செய்வது, நமக்கு என்ன ஒவ்வொரு ஊருக்கும் இந்த மாதிரி ஒரு கலெக்டரா இருக்கிறார்?.


Friday, June 10, 2011

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம்
எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்)

துல்லிய நீர்ப்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்..
பார்ப்பதற்கு பரவசம்தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குரூரம்.

============================================

துபாய்
இ. இசாக் (ஆனந்த விகடன்)

கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்.
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன் நெடுநேரமாக.
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்கையில்
'யாரும்மா.. இவங்க?' என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்.

============================================

வதை
ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்)

திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்..
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டில்
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது.

============================================

கவனம்
சே. சதாசிவம் (ஆனந்த விகடன்)

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமாண மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி.

============================================




Wednesday, June 8, 2011

என் கேமராவின் சிறைக்குள்..

நாங்க எப்பவுமே அழகுதான்( இடம்: மேட்டுப்பாளையம்)


எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் (இடம்: மேட்டுப்பாளையம்)


நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் (இடம்: ஏற்காடு)


நாங்களும் பசுமைக்கு காரணம்( இடம்: ஏற்காடு)



எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்)


வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா)


நாங்க எப்பவும் இப்படித்தான், சிரிச்சுக்கிட்டே இருப்போம்.


படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.

Monday, May 30, 2011

ஜோசியம்


"எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா
நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க"
எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர். அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும்.

சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். கணீரென்ற குரல், வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது. கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார். நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான். பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும். மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார். அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள். ஒரு சிலர், பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள். உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி, அவரை வர சொல்லுவார்கள். நானும் போவேன்.

"அப்பா, ஜோசியம் பார்க்கனும்னாங்க... உங்கள ஊட்டுக்கு வரசொன்னாங்க... "

"சரி.. சரி.. வர்றேன் போ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொல்லு... " என்பார்.

கொஞ்ச நேரத்தில், கையில் ஒரு காக்கி பையுடன் வந்து சேர்வார். கெட்டியான பை, உள்ளே காகிதங்கள், பென்சில், பேனா, பஞ்சாங்கம் என்று திணித்து வைத்திருப்பார். அவர் வந்தவுடன் பாய் போடப்பட்டு, அவரும் உக்கார, அவரை சுற்றி எல்லாரும் உட்காருவோம். பார்க்க வேண்டிய ஜாதகத்தை கொடுத்தவுடன் தனியே ஒரு பேப்பரில், கட்டம் போட்டு, கூட்டல் கழித்தல் என சில நிமிடங்கள் கரையும்.



அதற்குள் காப்பி கொண்டுவந்து வைத்தால், குடித்து கொண்டே மெல்ல கனைப்பார். அப்படியே பாட ஆரம்பிப்பார். சில சமயங்களில் அவருடைய பாடல்கள் புரியும், சிலது புரியாது. ஆனால் பாட்டை முடித்து விட்டு, விளக்கமாக ஜோசியம் சொல்லுவார்.

தொழில் எப்படி நடக்கும், கல்யாணம் நடக்குமா, பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று அவரிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுவார். கேள்விகள் தீர்ந்த பின், ஒரு கனத்த அமைதி நிலவும். பஞ்சாங்கம், பேனா என எல்லாவற்றையும் எடுத்து அவருடைய பையில் போட்டுகொள்வார். ஒரு தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் வைத்தால், வெத்தலையோடு சேர்ந்து பணத்தை எடுத்து மடியில் கட்டிக் கொள்வார்.

எங்கப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்பதால், ஜோசியம் சொல்லிவிட்டு "என்ன.. நான் சொல்லுறது சரிதானே.. " என்று அப்பாவை பார்ப்பார். அப்பாவும், சிரித்துகொண்டே "நீங்க சொன்னா.. சரிதான்" என்பார். அப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்றாலும் அவர் அதை தொழிலாக செய்யவில்லை. அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பார்த்துக் கொடுப்பது, நல்ல நாள் குறித்து கொடுப்பார். ஒருசிலர், ஜாதகத்தை கொண்டு வந்து அப்பாவிடம் பொருத்தம் பார்க்க சொல்லுவார்கள். மணி கணக்கில் அவர்களுடன் உட்கார்ந்து, ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டு கடைசியில், "எதுக்கும்.. இன்னொரு ஜோசியரை பார்த்து கேட்டுக்கங்க.." என்பார். வந்தவர்களும் சரி என்பார்கள்.

எனவே, எங்கள் வீட்டில் எப்பொழுதும் பஞ்சாங்கம் இருக்கும். அதுவும் இருபது, முப்பது வருடத்திய பழைய பஞ்சங்கங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அட்டாரியில் இருக்கும்.

சில சமயங்களில் ஜோசியரை கூட்டி செல்பவர்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்காது. இல்லை, அவருக்கு வேண்டியது பழைய பஞ்சாங்கமாக இருக்கும். உடனே, ஒரு காகிதத்தில் வருடத்தின் பெயரை குறிப்பிட்டு எங்கள் வீட்டுக்கு ஆளை அனுப்புவார். எங்கள் வீட்டு அட்டாரியில் இருந்து அந்த வருடத்தியதை தேடி எடுத்து குடுப்போம்.

ஒரு நாள் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது, ஜோசியரை வண்டியில் உட்கார வைத்து கூட்டிச் சென்றார்கள்.

"ம்ம்.. இன்னைக்கு ஜோசியர் காட்டுல மழைதான்"

"ஆமா.. வாங்குற பணத்தை என்ன பண்ணுவாரு .. அவரே ஒன்டிகட்டைதான்.." என்றது பக்கத்து வீடு.

"வாரமான கறி, தெனமும் சுருட்டுன்னு மனுஷன் இஷ்டத்துக்கு செலவு செய்யுறார்... மீதி பணத்தையெல்லாம் பொட்டில போட்டு வெச்சுகுவரோ என்னமோ... "

தள்ளாத வயதிலும், தனியாகவே சமைத்து கொண்டு வாழ்ந்து வந்தவர், உடம்பு முடியாமல் படுத்து அடுத்த இரண்டு வாரத்திலேயே போய் சேர்ந்து விட்டார். ஊருக்கெல்லாம் நல்ல நாள் பார்த்து சொன்னவர் எந்த நேரத்தில் இறந்திருப்பார் என்று தெரியவில்லை. மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.

" தகர பொட்டில.. அரிசி பானையில.. எங்கே பார்த்தாலும் பணம் இருந்துச்சாமா.. " என்று ஊரே பேசி கொண்டது. எப்போதும் அவருடைய வீட்டை விட்டு தள்ளி உள்ள ஒரு திறந்தவெளி திண்ணையில் தான் அவர் ஜோசியம் சொல்லுவார். இப்பொழுது அந்த திண்ணை யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது. இன்னொரு ஜோசியர் அந்த திண்ணைக்கு வந்து ஜோசியம் பார்க்க சாத்தியமேயில்லை .

காலம் அங்கே தனது ஜாதகத்தை காற்றில் எழுதி கொண்டிருந்தது கூட்டல், கழித்தல்களுடன்.

இந்தப் பதிவு ஒரு மீள்பதிவு.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி

Tuesday, May 24, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4














அனைவரின்
காலடித் தடங்களையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதியாக கிடக்கும்
கடற்கரை ஈர மணல் போல்
நீ பேசிய சொற்களை
அசைபோட்டுக் கொண்டே
ஆழ்ந்து கிடக்கிறேன் !


படம்: இணையத்தில் இருந்து. நன்றி


Thursday, May 19, 2011

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை
சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்)

வழக்கம்போல் இம்முறையும்
வானம் பொய்த்திருக்கும்

இருக்கும் தண்ணிக்கு
வெச்சுள்ள கத்தரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்

நிலவள வங்கியின்
நகை ஏல அறிவிப்பு
தபால்கார்டில் வந்து சேரும்

காதுகுத்தும் பிள்ளைக்கு
தோடு போடவேண்டுமென
இளைய தங்கை சொல்லிப்போவாள்

முகங்கண்ட மறுகணமே
அம்மாவென குரலெழுப்பும்
காளைகளை விற்றுவிட்டு
ஊர் திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான் விரும்பும் புருசனுடன்
பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள்

திரும்பி நிற்கும்
உன்னிடத்தே
வலிய வந்து உரையாடி
சௌக்கியமா எனக் கேட்பாள்

நல்ல சௌக்கியம் என்று சொல்.

**********************************************************************

பாலபாரதி
ஆனந்த விகடன்

ஜிலீர்

ஆசிரியராகும் கனவு
உடைந்து நொறுங்கியது
அரசு மது பாட்டில்களை
அடுக்கி வைக்கும்
வேலையில்...

**********************************************************************

மறதி

கற்புக்கரசி
கண்ணகி, சீதை
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது

கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது

**********************************************************************

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைப்பிள்ளையின்
கால் கொலுசைத்
தடவியபடி!

**********************************************************************

அடிதடி விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவமனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழி விடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

**********************************************************************

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான்
பாட்டில்கள்....

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக !

**********************************************************************


Monday, May 9, 2011

ஓர் இளம் விஞ்ஞானி

போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி.

நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


(தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்)

"இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கலாம். புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாகும்.

இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாக கவிழ்த்த வடிவமாகும். இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து NaCO3 ஆக மாறுகிறது. இதனை நாம் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாக பிரித்து -72 C ல் குளிர்ரூட்டும் போது நமக்கு உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை நாம் கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது.

இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதல் குறைகிறது." என்று கூறி முடித்தான். இந்த மாடலுக்கு, ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் விழாவில் "பெஸ்ட் மாடல்" விருது கிடைத்திருப்பதாக கூறினான்.



எங்களுக்கு மிகவும் ஆச்சரியம், இவ்வளவு சிறு வயதில் எப்படியெல்லாம் அறிவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று. தம்பி ஹரிஹரனும் அவ்வபொழுது அவனுக்கு உதவி செய்கிறான் என்றும் கூறினான். இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பாலாஜியின் அப்பாவும், அம்மாவும் கூறும்பொழுது "எங்களுக்கு இவர்கள் சொல்வது, செய்வது ஒன்றும் புரிவதில்லை. அதைப் புரிந்து கொள்ளுமளவு கல்வியும் எங்களுக்கு இல்லை. நிறைய பரிசும், சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறான். இந்த நெசவுத் தொழிலை வைத்துக்கொண்டு இவனுக்கு தேவைப்படும் கருவிகளையோ, அல்லது மற்ற புத்தகங்களையோ எங்கு கிடைக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில், ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் இவனே நெட்டில் தேடி விசயங்களைப் புரிந்து கொள்வான். இப்ப கூடப் பாருங்க, சோலார் கார் மாடல் செய்ய வேண்டும் என்கிறான். அந்தப் பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது, அதற்குத் தேவையான பணம் என நிறைய பிரச்சினைகள்" என்றார்கள்.

"என்ன பாலாஜி, சோலார் மாடல் செய்ய போறாயா?" என்றோம்.

"ஆமாங்க சார்" என்றான்.

"சரி. .அதுக்கு என்ன என்ன வேணும்னு தெரியுமா.. ?" என்று கேட்டதும், பாலாஜியின் அம்மா "அதெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. பாலாஜி அத எடுத்துட்டு வா" என்றதும்.. ஒரு தாளை எங்கள் முன் நீட்டினான்.



12v சோலார் பேனல்
2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல்
12v பாட்டரி
காரின் தளம்
Driller
ஸ்பீடோ மீட்டர்
வோல்டேஜ் மீட்டர்
ஸ்டீரிங் செட்
Headlights, Indicators, Wire, Switches.

இவற்றில் எதுவும் புதிதாக கூட வேண்டாம். ஏற்கனவே உபயோகப் படுத்தியது, Second Hand என்றாலும் எனக்கு அது போதுமென்கிறான் பாலாஜி. மேற்கண்ட உபகரணங்கள் கிடைத்தால் பள்ளி விடுமுறையில் செய்து முடித்துவிடுவேன் என்றும் சொன்னான்.

"சரிப்பா.. நாங்கள், எங்களின் நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறோம்.. விரைவில் திரும்ப வருகிறோம்" என்று விடைகூறிப் புறப்பட்டோம். கிளம்பும்போது.. "பசங்க என்ன என்னமோ செய்யுறாங்க.. எல்லோரும் பாராட்டுறாங்க.. ஆனா, அவங்க வேணும்னு சொல்லுறத வாங்கிக் கொடுக்க கூட எங்களால முடியறதில்ல" என்று வருத்தப்பட்டார்கள் பாலாஜியின் அம்மாவும், அப்பாவும். "கவலைப்படாமல் இருங்கள்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விடை பெற்றோம்.

சினிமா, விளையாட்டு, டிவி என பொழுதுபோக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சில மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போட, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

அன்பு நண்பர்களே,
உங்களால் இந்த மாணவனுக்கு உதவ முடிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,
மேற்கண்ட உபகரணங்கள் உங்களிடம் உபயோகப் படுத்தாமல் இருந்தால் உதவுங்கள்,
அறிவியல் துறையில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உங்களின் எண்ணங்களை இம்மாணவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

விழுதுகள்
29 , மறைமலை அடிகள் வீதி,
புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம்.

கமலக் கண்ணன் - 75021 97899
இளங்கோ - 98431 70925


Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.


Monday, May 2, 2011

தண்ணீர் - அசோகமித்திரன்



தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை.

தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; காலிக் குடங்களை வாங்கிக் கொண்டு போய் காசுக்கு பொதுக் குழாயில் நிரப்பிக் கொண்டு வரும் வண்டிக்காரர்கள்; சாக்கடையும், குழாய் மேடையும் ஒன்றாகவே இருக்கும் பொதுக் குழாய்கள்; ஒரு குடம் தண்ணிக்கு அரை மணி நேரம் வரிசையில் நிற்பது; அங்கே வரும் நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்; கெட்ட வார்த்தைகள்; வரிசையில் நிற்கும் வயதானவர்களின் இயலாமை என, இந்த தண்ணீரைச் சுற்றிதான் எவ்வளவு பிரச்சினைகள். கிராமம், நகரம் என்று இல்லை. எல்லா ஊரிலும் தண்ணீர் பிரச்சினை சொல்லி மாளாது.

ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், கடைகளில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர், நாப்பது லிட்டர் என பாட்டில்களில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கிருந்துதான் கிடைக்குமோ?.

நாவலைப் பற்றிச் சொல்ல வந்து, தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாவலில் முழுவதும் வருவதும், தண்ணீர் மற்றும் அதற்கு அலைவது தான். அதாவது நாவலின் கதைப் போக்கு வேறு என்றாலும், 'நீரின்றி அமையாது இந்த உலகு' போல தண்ணீரும் கூடவே வருகிறது.

ஜமுனாவும், சாயாவும் சகோதரிகள். ஜமுனா மூத்தவள், பாஸ்கர் என்பவனுடன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பது தெரியாமல் பழகி, தெரிந்த பின்னரும் அவனை ஒதுக்க முடியாமல், அவன் வரும்போதெல்லாம் வெளியே அவனுடன் செல்கிறாள். அவன் சினிமாவில் அவளுக்கு கதாநாயகி வேடம் வாங்கித் தருவதாகவே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சாயா படித்தவள். அவளுக்கும் கல்யாணம் ஆகி, கணவன் மிலிடரியில் இருக்கிறான். அவன் இந்த வருடம் வருகிறேன் என்று சொல்லியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயா. அவளுக்கு ஒரு பையனும் உண்டு. சாயா வேலைக்குச் செல்வதால், பையனை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறாள். அம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லாமலிருப்பதால், பாட்டியும், மாமாவும் பார்த்துக் கொள்வதால், சாயாவும், ஜமுனாவும் தனியே வசித்து வருகிறார்கள்.

பாஸ்கர் அடிக்கடி ஜமுனாவைப் பார்க்க வருவது, சாயாவுக்குப் பிடிக்காமல் அவள் விடுதிக்குப் போகிறாள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஜமுனாவை, பக்கத்துக்கு வீட்டு டீச்சரம்மா தேற்றுகிறாள்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதியில், ஜமுனா என்ன ஆனாள் ?
சாயா அவளிடம் திரும்ப வந்து விட்டாளா ?
சாயாவின் கணவன் மிலிடரியில் இருந்து திரும்ப வந்தானா?
சாயாவின் பையன் என்ன ஆனான்?
பாஸ்கர் என்ன ஆனான்?

நாவலைப் படித்துப் பாருங்கள்.

நாவலில் ஓரிடத்தில்; "இப்போ பகவானே வந்தாக் கூட கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பார்த்துட்டு வரோம்ன்னுதான் சொல்லுவோம்".

இன்னொரு இடத்தில், ஜமுனாவைத் தேற்றும் டீச்சர், வீதியில் இரண்டு குழந்தைகள் தனது தேவைக்கும், சக்திக்கும் அதிகமான தண்ணீரை கொண்டு செல்வதைப் பற்றி பேசும் காட்சி, தன்னம்பிக்கை வர வைக்கக் கூடிய இடம்.

நடு இரவில் கொட்டும் மழையில், மழைத் தண்ணீர் பிடிக்க எழுப்பும் மனைவி, வீட்டுக்கார அம்மாள், டீச்சரின் மாமியார், கணவன், ஜமுனாவின் அம்மா, பாட்டி என ஒவ்வொரு பாத்திரமும் அதன் கதை சொல்லலும் அருமை.

தண்ணீர் போகும் போக்கிலே தான் நமது வாழ்க்கையும் செல்வது போலத் தோன்றுகிறது.

தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் நூறு.


Thursday, April 28, 2011

உறங்காத தெரு















அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின்
காலைப் பொழுதுகளில்
அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள்
நடை செல்வோரின் செருப்போசைகள்
வேப்ப மரக் காக்கையின் சத்தம்
வீடு திரும்பும் கூர்க்கா
என விடியும்..

அலுவலகம், பள்ளி
என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர்
காய்கறி வண்டி, தபால் எனவும்
மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும்
நீள்கிறது பகல்...

மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில்
நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர்
திரும்ப வரும் கூர்க்கா
சுற்றி வரும் நாய்கள் எனவும்..

தெரு எப்போதும் உறங்குவதேயில்லை.

*************


புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.

Monday, April 25, 2011

சாப்பாடு

இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம்.

சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சேர்த்து நம்மிடம் அவர்கள் விலைப்பட்டியல் நீட்டத் தானே செய்வார்கள்.



எனவே நண்பர்கள் பேசி, இனிமேல் வெளியில் சாப்பிடக் கூடாதென்றும், வீட்டிலியே நாமே சமைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, கடைக்குப் போவது, காய்கறி நறுக்குவது என யார் யார் எந்த வேலை செய்வதென்றும் பிரித்துக் கொண்டோம். அறையுள் உள்ள நால்வரில், எல்லோருமே வேலைக்குப் போவதால் முறை வைத்து சமைப்பது என முடிவானது. ஒரு வாரம் சுமூகமாகப் போனது. உப்போ, காரமோ எதுவும் தெரியாமல் விழுங்கி வைத்தோம். ஆனால் என்ன, இப்போதெல்லாம் வயிறு கடமுடா இல்லை. நாமே சுத்தமாக செய்தது என்று நல்ல விசயங்களும் நடந்தன. இதையெல்லாம் விட, பணம் மிச்சமானது.

அடுத்த வாரத்திலிருந்து, ஒரு நாள் அவன் பாத்திரம் கழுவவில்லை என்பதால், இன்னொருவன் சமைக்கவில்லை என்றும்,.. இன்னொரு நாள் சமைக்க வேண்டியவன் இரவு தாமதமாக வந்ததால் அன்று... என மீண்டும் உணவகங்களை நோக்கி படையெடுத்தோம். ஒரு நாள் சாப்பிடப் போகும்போது, யானையை விட்டு நெற்போர் அடித்த நம் முன்னோரின் வாரிசுகள் நாம் எனச் சொல்ல, நண்பன் என்னை அடிக்க வந்தான். எப்படியோ நமக்கு நாமே திட்டம் கைவிடப்பட்டு, வழமை போல உணவகங்களில் தொடர ஆரம்பித்தோம்.

ஒருநாள், பக்கத்துக்கு அறை நண்பன் அடுத்த வீதியில் ஒரு அய்யர் வீட்டில் சாப்பாடு சுவையாக இருப்பதாகவும், போய் சாப்பிட்டு வாருங்கள் எனச் சொன்னதும் கிளம்பிப் போனோம். அன்று சனிக்கிழமை, அந்த அய்யர் வீட்டில் மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் நண்பன். நாங்கள் அங்கே போனதும் "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் ஒருவர். பார்த்தவுடனே அவர்தான் நண்பன் சொன்னவர் என்று தெரிந்தது. உள்ளே இரண்டு சின்ன உணவக மேசையில் எட்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.




உள்ளே சென்று அமர்ந்ததும் தான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். தனது பருத்த உடம்போடு அங்கேயும் இங்கேயும் என மெதுவாக நடந்து கொண்டிருந்தார். முன்னே சாப்பிட்டவர்களிடம் அய்யர் பணம் வாங்கிக் கொண்டிருந்தார், இந்தப் பெரியவர் வாழை இலையை எங்களுக்காக எடுத்து வந்தார். தலை வாழை இலையைப் பிரிக்க அவர் கஷ்டப்பட, நாங்களே அதை வாங்கி பிரித்து மேசையில் விரித்தோம். பக்கத்தில் தண்ணீர் குடுவையிலிருந்து தண்ணீர் தொளித்துக் காத்திருக்க, பெரியவர் பொரியல் எடுத்துக் கொண்டு வந்து பரிமாற ஆரம்பித்தார் மெதுவாக.

பணத்தை வாங்கி முடித்த அய்யர், திரும்பி வந்து இலையை நோட்டமிட்டார்.

"மாமா.. இங்க பாருங்கோ.. பொரியலை இந்த ஓரம்தான் வைக்கணும்.. அந்தப் பக்கம் வைக்கதிங்கன்னு எத்தன தடவ சொல்லுறது"

பெரியவரிடமிருந்து பதிலில்லை. மற்ற இலைகளுக்கும் பரிமாறி விட்டு அப்பளம் எடுக்கப் போனார். அதற்குள் அய்யரும் பரிமாற வந்து விட்டார். சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இரண்டு பொரியல், அப்பளம், சாம்பார் என வீட்டு சமையல்.

அதற்குள் நண்பன் புளிக்குழம்பு வேணுமென பெரியவரிடம் கேட்கப் போக, பெரியவர் ரச வாளியோடு வந்தார். அய்யர் அதைப் பார்த்து "மாமா.. அவர் கேட்டது புளிக் கொழம்பு.. ரசமில்ல" என்று ரச வாளியை வாங்கிக் கொண்டு, புளிக்குழம்பை எடுத்து வரும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்தார். பெரியவரைத் தான் பேசிக்கொண்டு வந்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. எதுவும் சொல்லாமல் பெரியவர் தள்ளாடிக் கொண்டே வெளியே வாசப்படி அருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஏதோ ஒரு நினைவில் சாப்பிட்ட இலையை எடுக்க மறந்து, கைகழுவப் போக அய்யர் "சார்.. இலையை எடுத்துருங்க". என்றார். நாங்கள் இலையை எடுத்து வெளியே இருந்த கூடையில் போட்டுவிட்டு, கை கழுவி விட்டு வரும்போது பெரியவர் உள்ளே சென்று அடுத்த பந்திக்கான இலையை எடுக்க ஆரம்பித்தார்.

அய்யர் சாப்பிட்டு முடித்த எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டே பெரியவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே இருந்தார். பெரியவர் இன்னும் தள்ளாடி தள்ளாடிக் கொண்டே ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருந்தார். நாங்கள் பணம் கொடுத்துவிட்டு வெளியே கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் கேட்டது அய்யரின் பேச்சு; "மாமா.. பொரியலை அந்தப் பக்கம் வைங்க.. இந்தப் பக்கம் வைக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்லுறது".

பெரியவர் நிச்சயமாக இதற்கும் பதில் சொல்லியிருக்க மாட்டார்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றி.