Thursday, September 30, 2021

பாத்துமாவின் ஆடு - பஷீர்

இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. 

இவர் "எங்க உப்பப்பாவுக்கொரு ஆன இருந்தது" என்கிறார்.

"அத தின்னுட்டீங்களா"

"இல்லை, அது அங்கங்கே சுற்றி அலைகிறது"

"பிடிக்க முடியுமா"

பஷீர் சொல்கிறார்: "தெரியவில்லை".

இன்னொரு பைத்தியம் "பட்டாளத்தில் இருந்த நான் நான்கு வருடம் முன் செத்துப் போய்விட்டேன். திரும்பவும் இந்த பூமிக்கு வந்துள்ளேன்" என்கிறது.

'இந்நாவல் ஒரு தமாஷ் கதை. ஆனால் எழுதும்பொழுது மனதுக்குள் வெந்து சாம்பலாகி கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை.' என்கிறார் பஷீர். 

நாவல் எழுதி முடித்து முன்னுரை எழுதுவதைத் தள்ளிப்போட்டு ஐந்து வருடங்கள் கழித்து நாவல் வெளியாகிறது. பத்து பக்கங்களுக்கும் மேல் நீண்ட முன்னுரை. 


******

pathumavin aadu basheer

நாவலில் பாத்திமாவின் ஆடு கதையைச் சொல்பவர் எழுத்தாளர். திருமணம் ஆகாதவர். குடும்பத்தின் மூத்தவர். எழுத்தாளராக இருப்பதால் அங்கங்கே சுற்றிக்கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கொள்ளலாம் என திரும்பி வருகிறார். முன்பு அவருடைய சொந்த ஊரில் குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டுக்கு எதிரே உள்ள சின்ன வீட்டில் இருந்தார். குடும்பத்தின் சண்டை சச்சரவுகள் இன்றி தனியாக அங்கே இருந்தார். எழுத்தாளரான இவர், ஊரில் இல்லாததால் அவரின் தம்பி அவ்வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். எனவே வேறு வழியின்றி அவர் குடும்பத்துடன் தங்க நேர்கிறது. 

அப்துல், ஹனீபா, அபூ என மூன்று இளைய சகோதரர்களும், பாத்துமா, ஆனும்மா என இரண்டு சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். இதில் பாத்துமா மட்டும் கொஞ்சம் தள்ளி வசிக்க, மற்ற எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அபூ தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அவர்களின் குழந்தைகள் வீடு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். குறும்புகள் செய்கிறார்கள். எல்லோருக்கும் பெரியவர் என்பதால் கூடப் பிறந்தவர்களுக்கு 'பெரிய காக்கா', அதாவது பெரிய அண்ணா. குழந்தைகளுக்கு 'மூத்தாப்பா'.

பாத்துமா ஒரு ஆட்டை வளர்த்து வருகிறாள். தினமும் காலையில் பாத்துமா தன் அம்மா வீட்டுக்கு வருவாள். அவளோடு சேர்ந்து பாத்துமாவின் ஆடும் வருகிறது. வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வலம் வருகிறது. எழுத்தாளரான பெரிய காக்காவின் புத்தகங்களைத் தின்கிறது. அவர் மேசையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை தின்கிறது. இத்தனை நாட்களாக ஊரில் இல்லாததால் அவருக்கு இந்த ஆட்டைப் பற்றி தெரியவில்லை. அவர் தன் சகோதரியிடம்  ஆட்டை கட்டிப்போடச் சொல்கிறார். அதற்கு பாத்துமா சொல்கிறாள்; 'கட்டிப்போட்டா அதுக்கு பிடிக்காது பெரிய காக்கா'.

பெரிய காக்காவிடம் எல்லோரும் தனக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அவரின் உம்மா கூட அவ்வப்பொழுது பணம் கேட்கிறார். நேற்று குடுத்தேனே என்று கேட்டால் இன்னொரு மகனிடம் கொடுத்து விட்டதாக சொல்கிறார் அம்மா. 'உனக்கு என்ன ஒண்டிக்கட்டை. முக்கால் ஜாண் வயிறு.. உனக்கு எதற்கு பணம்' என்கிறாள் உம்மா. 

ஒரு சகோதரி கம்மல் கேட்க, இன்னோர் சகோதரி வீட்டுப் பாத்திரங்கள் கேட்கிறார். யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என அவர்களே சொல்லிச் செல்கிறார்கள். ஆனாலும் ஒருத்தர் பொருள் கேட்டது மற்றவருக்கும் தெரிய வருகிறது. எழுத்தாளருக்கு மணியார்டர் வரும் முன்னரே, அந்தப் பணத்துக்கு வீட்டில் உள்ளோர் திட்டம் போடுகிறார்கள்.

பெரிய காக்கா தன் இன்னொரு சகோதரனிடம் குடும்பச் செலவுக்கு பணம் கேட்டால், எப்பொழுதும் ' நான் பட்டாளத்துக்கே போறேன்.' என்று சொல்கிறான். சின்ன வயதில் அவர்கள் செய்த சேட்டைகளையும், பொய்களையும் நினைவு கூர்கிறார். 

வீட்டில் குழந்தைகள் கூட அவரிடமே காசு கேட்கிறார்கள். ஒருநாள் கால் சட்டை பையில் ஆப்பத்தை போட்டு வைத்து தின்கிறான் சிறுவன். பாத்துமாவின் ஆடு அதை இழுத்து பாக்கெட்டோடு தின்று விடுகிறது. அதில் அடுத்த நாள் பென்சில் வாங்க வைத்திருந்த காசும் உண்டு. ஆடு அதையும் முழுங்கி விடுகிறது.  பின்னர் பெரிய காக்காவே அவனுக்கு காசு தருகிறார்.

வீட்டில் இரண்டு ஆடுகள் இருப்பதை கொஞ்ச நாட்கள் கழித்தே பெரிய காக்கா உணர்கிறார். ஒன்று பாத்துமாவின் சினையாக இருக்கும் ஆடு, இனொன்று வீட்டில் ஆனும்மா வளர்க்கும் ஆடு. பாத்துமா தான் அந்த ஆட்டை தன் சகோதரியான ஆனும்மாவுக்கு தந்தாள். ஒரு வாக்குவாதத்தில், 'இந்த உலகத்தில் தங்கச்சிக்கு யாரு ஆடு குடுத்திருக்கா. நான் குடுத்தேனே, நீ இப்படி பேசலாமா?' என பாத்துமா கேட்க, 'அவங்கவங்க யானையே தரங்களாம். இது சின்ன ஆடுதானே' என்கிறாள் ஆனும்மா.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய உணவு வேளையில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரிசி சோற்றை தந்துவிட்டு மரவள்ளிக் கிழங்கு மாவால் செய்த புட்டை உண்கிறார்கள். இதைக் கண்ட பெரிய காக்கா, ஒருநாள் இந்த வறுமையை போக்க வேண்டும் என நினைக்கிறார். 

பாத்துமா பெரிய காக்காவை சாப்பிட வீட்டுக்கு அழைக்கிறாள். மற்ற சகோதரர்களை விட்டுவிடுகிறாள். அவர்களை எல்லாம் அழைத்து விருந்து வைக்க அவளுக்கு மனம் உண்டு. ஆனால் வசதி இல்லை. இதை மற்றவர்கள் கேட்க, ஒருநாள் உங்களுக்கும் விருந்து வைப்பேன் என்று அவர்களிடம் சொல்கிறாள். இப்பொழுது சினையாக இருக்கும் ஆடு குட்டி போட்டு பால் கறந்தால், பாலை விற்று வரும் பணத்தில், நிறைய செலவுகளை சேர்த்துக்கொண்டே செல்கிறாள் பாத்துமா. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள். ஆனால் இழுபறி வாழ்க்கை. 

******

'குடும்பம் ஒரு பாற்கடல்' என்று லா.ச.ரா கதையில் வருவது போல இந்தக் கதையிலும் பெரிய குடும்பம். அள்ள அள்ள அமுது வரும், போலவே விசமும் வரும். 

பாத்துமாவின் ஆடு குட்டி போட்ட பின்னர், அதன் பாலை அவளின் உம்மாவும், தங்கையும் திருட்டுத்தனமாக கறந்து உபயோகிக்கிறார்கள். அதை பார்த்த பெரிய காக்கா, பாத்துமாவிடம் சொல்லித்தருகிறார். பாத்துமா, நீங்க கறக்க வேண்டாம், நானே கறந்து தருகிறேன் எனச் சொல்கிறாள். சொன்னவாறே பாலையும் கொடுக்கிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பால் கறப்பதும் தொடர்கிறது. 

பஷீர் சொன்னது போலவே இந்நாவல் ஒரு நகைச்சுவை கதை. 'பாத்துமாவின் ஆடு' வறுமையிலும் வாழ்க்கையை கொண்டாடச் சொல்லும் கதை. 


Wednesday, June 9, 2021

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார். 

குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள். 



வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். ஊரில் பாதிப்பேர் சொந்தம் எனச்சொல்லி வருவார்கள். இப்பொழுது யாரும் வருவதில்லை. பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை அல்லவா. 

ஒரே பிள்ளை இவர்களுக்கு. குஞ்ஞுபாத்துமா. உம்மா அடிக்கடி அவளிடம் 'பெண்ணே நீ, ஆனைக்காரரோட பொன்னு மவளோட பொன்னு மவளாக்கும். அது பெரீய கொம்பானே' என்று சொல்கிறாள். வசதியாக இருந்தபோது இந்த வார்த்தைகள் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழந்தும் குஞ்ஞுதாச்சும்மாவுக்கு பழைய பெருமை போவதில்லை. பாத்துமாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவர்களின் இப்போதைய நிலை பார்த்து யாராவது திருமணம் செய்ய முன் வரவேண்டும் என்கிறாள் உம்மா. 

அம்மாவுக்கும் மகளுக்கும் சமையல் தெரியாது. வியாபாரம் செய்து கொண்டு வருவதை வாப்பா தான் சமைக்க வேண்டும். அவர் சிலசமயம் தன் மனைவியிடம் 'பொண்ணா பொறந்தவளுக்கு அடுப்பு பத்த வைக்கவாவது தெரிஞ்சு இருக்கணும்' எனச் சொல்ல, உம்மாவோ 'நான் ஆனை மக்காரோட மவளாக்கும்' என்று சண்டைக்கு நிற்கிறாள். வறுமை இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளுடன் கணவன் மனைவி சண்டை வேறு. குஞ்ஞுபாத்துமா அவர்களை பார்த்து கலங்கி நிற்கிறாள். உம்மாவுக்கு அவளின் குடும்பம், யானை பெருமை என சொல்லிக்காட்ட, வாப்பா விட்டுக்கொடுத்துப் போகிறார்.

குஞ்ஞுதாச்சும்மாவுக்கு இஸ்லாம் முறைகள் மீதான பற்று அதிகம். பெண்கள் பூ வைத்தல், அலங்காரம் செய்தல் தவறு என்கிறாள். தன் மகளையும் அவ்வாறே சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால், தன் வறுமையான சூழலில் ஒவ்வொரு நாள் தொழுகையை கைவிடுகிறார். 'அதெல்லாம் ஒரு பாடு தொழுதாச்சு' என்று சலித்து கொள்கிறாள். 

அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் வீட்டுக்கு, நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் குடிவருகிறது. முஸ்லீமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கிறார்கள். நிஸார் அகமது, ஆயிஷா என இரு பிள்ளைகள். ஆயிஷாவும், குஞ்ஞுபாத்துமாவும் தோழிகளாக பழகுகிறார்கள். பூ வைத்தல், புடவை கட்டுதல், தலை முடி அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை பார்த்த குஞ்ஞுதாச்சும்மா, அவர்கள் முஸ்லிம்களே இல்லை காபிர்கள் என்கிறார். 

நிஸார் அகமதுக்கு பாத்துமாவை பிடித்துப்போக காதலிக்கிறான். பாத்துமாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. அகமது கழிப்பறை கட்டுதல், வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தல், பூச்செடிகள் நடுதல் என ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறான். சுத்தத்தை விரும்புவனாக இருக்கிறான். இரண்டு வீட்டினரும் பேசி திருமணம் முடிவு செய்கிறார்கள். அதிக நபர்களை அழைக்காமல் குறைவாகவே திருமணத்துக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்கிறான் அகமது. மீறிப்போனால் ஒரு பத்திருபது பேர். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். 

திருமணம் அன்றிரவு நடக்கப் போகிறது. பிள்ளைகள் வெளியே சத்தம் போட்டு விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். குஞ்ஞுதாச்சும்மா அவர்களிடம் 'எங்க அப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சத்தம் போட, அதில் ஒரு பையன் 'அது குழியான'  என்கிறான். குழியானை என்பது மண்ணில் வட்டமாக சிறு குழி தோண்டி வாழும் சிறு பூச்சி. தன் பெருமை மிக்க குடும்பத்து யானையை, நான்கு பேரை கொன்ற யானையை, பெரிய கொம்புள்ள யானையை குழியானை என்றதும் உம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆற்றாமை வருகிறது. அவர்களைத் திட்டுகிறாள். சத்தம் கேட்டு அங்க வந்த பாத்துமா என்ன என விசாரிக்க 'உங்க உப்பப்பா ஆன.. குழியானையாம் புள்ளே.. குழியானையாம்' எனச் சொல்கிறாள்.  

****


காலம் பழைய பெருமைகளை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு வேண்டுமானால் நம் வீட்டுப்  பெருமை பெரிதாக இருக்கலாம். ஒருகாலத்தில் பெரிய பெருமைகளாக இருந்த எல்லாம் ஒருநாள் மறைந்து விடும். புதிய காலத்துக்கு ஏற்றவாறு நாம் தான் மாற வேண்டும். குஞ்ஞுதாச்சும்மாவுக்கு ஆனைப் பெருமை, வட்டனடிமைக்கு ஊரில் பெரிய தலைவர் எனப் பெருமை. அதெல்லாம் இன்று இல்லை. 

நாவலில் ஓரிடத்தில் 'பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை' என்று வரும். இருக்கும் பணத்தை பெருமைக்காக தொலைத்து விட்டுப் பின்னர் வருந்துவதில் நியாயமில்லை. அதனால்தான் அகமது திருமணத்தைக்கூட எளிதாக நடத்தலாம் என்கிறான். திருமணத்துக்கு ஏக செலவு செய்து கடன் பட்டவர்கள் ஏராளம். 

நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப் 

Wednesday, June 2, 2021

நாலுகெட்டு - எம்.டி. வாசுதேவன் நாயர்

பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது. 

சகோதரன் சகோதரிகளுடன் அந்த வீட்டில் பிறந்தவள் பாருக்குட்டி. எங்கேயும் போகாமல் பொத்தி பொத்தி வளர்ந்த அவள், கோந்துன்னி நாயருடன் காதல் கொள்கிறாள். 'எனக்கு நாலுகெட்டு வீடோ, பெரிய நிலமோ இல்லை. ஆனால் உன்னை காப்பாத்துவேன். உனக்கு நம்பிக்கை இருக்கா?' எனக் கேட்க பாருக்குட்டியும் நம்புகிறேன் எனச் சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறாள். ஒரே ஊர் என்றாலும்  திருமணத்துக்குப் பின்னர் பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லை பாருக்குட்டிக்கு.  வடக்கு வீீட்டில் உள்ளவர்கள், பாருக்குட்டிக்கு புலை(இறந்து விட்டவளாக கருதி செய்யும் சடங்கு) செய்து விடுகிறார்கள். 

சிறு நிலமும், ஒரு வீடும் உள்ள கோந்துன்னியின் மனையில் குடும்பம் நடக்கிறது. பின்னர் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அப்புண்ணி என்று பெயர் வைக்கிறார்கள். அப்புண்ணி கைக்குழந்தையாக இருக்கும்போது கோந்துன்னி நாயர் இறந்துவிடுகிறார். அவரின் கூட்டாளியான செய்தாலி, நாயருக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஊருக்குள் பேச்சிருக்கிறது. ஆனால் செய்தாலியை காவல்துறை எதுவும் செய்வதில்லை.

பாருக்குட்டி தனியாக மகனை வளர்த்து வருகிறாள். இன்னொரு இல்லத்தில் வேலைக்காரியாக சென்று, கொண்டு வரும் சொற்ப பணத்தில் வாழக்கை நகர்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கும் முத்தாச்சி பாட்டி அப்புண்ணிக்கு பழைய கதை எல்லாம் சொல்லுகிறாள். 'கீழ விட்டால் எறும்பு கடிக்கும், மேலே விட்டால் பேன் கடிக்கும்னு வளர்ந்தவ பாருக்குட்டி. இப்போ அவ வேலைக்காரியாக வேலைக்கு போறா. இதுவும் ஒரு யோகம்தான். உனக்கு நெறைய சொந்தம் உண்டு'  என்று சொல்கிறாள் முத்தாச்சி பாட்டி.

ஒருநாள் வடக்கு நாலுக்கட்டு வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறாள் பாட்டி. அன்று அங்கே நாக பூஜை நடக்கிறது. இரவு முழுவதும் பூஜை நடந்ததால் அப்புண்ணி அங்கேயே தூங்கி விடுகிறான். காலையில் அவன் அங்கே இருப்பதை அறிந்த பாருக்குட்டியின் அம்மாவான அம்மும்மா பாட்டி அவனை கொஞ்சுகிறாள். அங்கே இருப்பவர்களுக்கு, பெரிய மாமா வந்தால் திட்டுவார் என பாட்டியிடம் சொல்கிறார்கள். சொன்னவாறே அவர், அப்புண்ணியை திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

எந்த ஆணின் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காத பாருக்குட்டி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறாள். அப்புண்ணி மேல் படிப்புக்காக வேறு பள்ளி மாற வேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் சங்கரன் நாயரை நாடுகிறாள். சங்கரன் நாயரை அவளுக்கு முன்பே தெரியும் என்றாலும் தயங்கி தயங்கியே அவரிடம் சொல்லுகிறாள். எப்படியோ இருக்க வேண்டிய பெண்மணி தன்னிடம் உதவி கேட்டதும், அதை நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்கிறார். பின்னர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலி அமைக்கவும் உதவுகிறார். பாருக்குட்டியும், நாயரும் பேசிக்கொள்வதை ஊர் திரித்துப் பேசுகிறது . சங்கரன் நாயரும் ஒண்டிக்கட்டையாக இருப்பதே அதற்கு காரணம். அப்புண்ணிக்கு ஊரில் பேசிக்கொள்வது தெரியவர, அவனுக்கு அம்மா மேலும் சங்கரன் நாயர் மேலும் கோபம் வருகிறது. ஒருநாள் அவன் அம்மாவிடம் 'உனக்கு சங்கரன் நாயர் இருக்கிறார் ' எனச் சொல்லிவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

வீட்டை விட்டு வெளியேறிய அப்புண்ணி, தன் அப்பாவைக் கொன்றதாக சொல்லப்படும் செய்தாலியை சந்திக்கிறான். செய்தாலி 'நாயர் என்கூட வரணும், இல்ல நாலுகட்டு வீட்டுக்குப் போகணும்' எனச் சொல்கிறான். அங்கே யாரும் தன்னை மதிப்பதில்லை, போனால் வெளியே அடித்து அனுப்பி விடுவார்கள் எனச் சொல்கிறான் அப்புண்ணி. 'அந்த வீட்டில் உனக்கும் பங்கு உண்டு, சொத்துக்களில் நீயும் ஒரு வாரிசு, அதனால் உனக்கு உரிமை உண்டு' என்று செய்தாலி சொல்லி அவனை நாலுகெட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே போனதும் அம்மும்மா பாட்டி மகிழ்ந்தாலும், பெரிய மாமா அவனை அடிக்க வருகிறார். பாருக்குட்டியின் சகோதரனான குட்டன் மாமா 'அவன் மேல் கை படக்கூடாது. அவனுக்கும் உரிமை உண்டு' எனச் சொல்ல, பெரிய மாமா அவனையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியே போகிறார். பெரிய அளவில் அவனுக்கு அங்கே வரவேற்பில்லை என்றாலும், அவன் ஒரு ஓரமாக அங்கே தங்கிக்கொள்ள முடியும். இருப்பதை உண்டு அப்படியே பள்ளிக்கும் சென்று வருகிறான். 

அப்புண்ணி வடக்கு வீட்டுக்குப் போனதும், பாருக்குட்டி தனியாக வசித்து வருகிறாள். ஒருநாள் கடும் மழைவெள்ளம். பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும் வெளியேறுகிறார்கள். பாருக்குட்டியைக் கூப்பிட அவள் போக மறுத்துவிடுகிறாள். மழை வெள்ளம் ஏறி வருகிறது. வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க கதவைத் திறந்தால் அங்கே சங்கரன் நாயர் தோணியுடன் நின்றுகொண்டிருக்கிறார். 'வாங்க போயிரலாம்' எனக் கூப்பிட, தயக்கத்துடன் தோணியில் ஏறி மயங்கி விழுகிறாள் பாருக்குட்டி. கொஞ்ச நேரம் கழித்து விழித்து 'நாம எங்க போறோம்' என நாயரிடம் கேட்க 'தண்ணி ஏறாத மேட்டுக்கு' எனச் சொல்கிறார். 

வடக்கு வீட்டில் இப்பொழுது நிலைமை சரியில்லை. யாரிடமும் காசு இல்லை. அப்புண்ணிக்கு பள்ளியில் உதவித் தொகை கிடைக்கிறது. அதில் பள்ளியின் கல்வித் தொகை போக மீதியை பாட்டியிடம் கொடுத்து வைக்கிறான். பாட்டியோ தன் மகனான குட்டனிடம் கொடுத்து விடுகிறாள். வடக்கு வீட்டில் விளையும் எல்லாச் செல்வமும் பெரிய மாமாவின் இல்லமான பூந்தோட்டத்துக்கு போவதாக சண்டை வருகிறது. சொத்தைப் பிரிக்க வேண்டும் என குட்டன் முடிவுக்கு வருகிறார். பெரிய மாமா அதெல்லாம் முடியாது என முதலில் தெரிவித்தாலும் பின்னர் சரி என்கிறார். வக்கீல்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

அப்புண்ணியின் படிப்பும் முடிகிறது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண். மேலே படிக்க வசதியில்லை என தன் ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு, டீ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போகிறான். அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவது செய்தாலிகுட்டி. அவன் அப்பாவை கொன்றதாக சொல்லும் அதே செய்தாலி தான் அவனுக்கு உதவுகிறார். பாவ மன்னிப்பு போல அவனுக்கு உதவி செய்கிறார். அந்த வேலையில் அவனுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டன. அவன் ஊருக்கே திரும்பிப் போகவில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. 

ஒருநாள் அவன் தன் சொந்த ஊருக்குப் போக முடிவு செய்கிறான். அப்பாவியான மீனாட்சி பெரியம்மா வீட்டில் தங்குகிறான். அவனிடம் பணம் இருப்பதை அறிந்துகொண்டு, உறவு கொண்டாட வருபவர்களை அவன் கண்டுகொள்வதில்லை. பாகம் பிரித்த பின்னர் நாலுகெட்டு வீடு இப்பொழுது பெரிய மாமாவுக்கு சொந்தம். அவருக்கு அந்த வீட்டின் மேல் கொஞ்சம் கடனிருக்கிறது. அப்புண்ணியிடம் அவர் பணம் கேட்க, அப்புண்ணியோ கடன் எல்லாம் தரமுடியாது வேண்டுமானால் இந்த வீட்டை நானே வாங்கிக்கொள்கிறேன் என்கிறான். முதலில் தயங்கும் அவர், பின்னர் சரி எனச் சொல்கிறார். இப்பொழுது நாலுகெட்டு வீட்டுக்கு சொந்தக்காரன் அப்புண்ணி. பாருக்குட்டியின் மகன் அப்புண்ணியின் வீடு. அப்புண்ணி, அம்மா பாருக்குட்டியையும், சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு கூட்டி வருகிறான். எத்தனையோ வருடங்கள் அந்த வீட்டில் பாருக்குட்டியின் காலடி படாமல் இருந்த அந்த பரம்பரை வீடு இப்பொழுது அவளுக்கு சொந்தம். 

இந்நாவலில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மாளு, பெரிய மாமா, பெரிய மாமாவின் பெண் அம்மிணி, முத்தாச்சி பாட்டி, செய்தாலி என பலர். அப்புண்ணிக்கு உதவும் பலர், அவனிடம் என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கும் சிலர் என நாவல் முழுதும் மனித மனங்களின் அழுக்குகளையும், தூய எண்ணங்களையும் பார்க்கலாம். அதிலும் ஒரு பெரியம்மா, தனக்கென சொத்திருந்தாலும் அங்கே போகாமல், நாலுகெட்டு வீட்டில் என்ன கிடைக்கும் என அங்கேயே தங்கியிருந்து, அவ்வப்பொழுது 'நானும் என் பிள்ளைகளும் என்ன செய்வோம்' என புலம்புகிறாள். 

மூன்று தலைமுறைகளை சுற்றி நாவல் சுழல்கிறது. அப்புண்ணிக்கு படிப்பு ஒன்றே வாழ்க்கையின் பிடிப்பாக இருக்கிறது. அவனை மீட்பதும், பின்பு அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர காரணமாக இருப்பதும் படிப்புதான். அந்த வீட்டிலேயே வளர்ந்து படிப்பு வராமல் அதே ஊரில் தங்கி இருக்கும் அவனின் பெரியம்மா பிள்ளைகள் போல அல்ல அப்புண்ணி. பழம் பெருமைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கடைசியில் தான் வாங்கிய அந்த நாலுகெட்டு வீட்டை இடித்து புதிதாக கட்டலாம் என்கிறான் அப்புண்ணி. ஆம், பழம் பெருமைகள் ஒரு வரலாறாக அப்படியே இருக்கட்டும். 

தமிழில் நாவல் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப் 


Thursday, January 7, 2021

பேய்ச்சி - ம.நவீன்

பேய்ச்சி நாவல் பற்றி ஜெயமோகன் தளம் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் படித்த பொழுதே வாங்க நினைத்தேன். வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். நாவல் மீதான தடையை அறிந்த பின்னர் உடனடியாக இந்நாவலை வாங்க முடிவு செய்து பனுவல் தளத்தில் வாங்கினேன். புத்தகம் வந்து சேர்ந்து படித்தும் விட்டேன்.

எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் சிறுகதைகளை இணையத்தில் படித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் சந்திப்பில் அவரைப் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. பேய்ச்சி நாவலில் அவரின் எழுத்து நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது. மூன்று நான்கு தலைமுறை மக்கள் நாவலில் வந்துபோகிறார்கள். 

ரப்பர் தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள், அங்கே அவர்களின் வாழ்க்கை, தம் சொந்த நிலமான தமிழகத்தை விட்டு இங்கே வந்து பின்னர் இதுவே சொந்த மண் என்று நினைக்கும் மக்கள், பக்கத்தில் இருப்பவர்களே சொந்த பந்தங்கள் என விரிகிறது நாவல். ரப்பர் தோட்டங்களில் மரங்கள் வேரோடு  தோண்டப்பட்டு, செம்பனை மரங்கள் நடும்பொழுது ஏற்படும் வேலை இழப்புகள், தோட்டத்தில் இருந்து பிரிய வேண்டிய நேரம் என புலம்பெயர் மக்களின் வாழ்வை பேசும் நாவல்,. ஜப்பான், பிரிட்டிஷ் என மாறி வரும் ஆட்சிகள், சீனர்களின் உழைப்பு என்று கதையோடு சொல்கிறது. 

ஓலம்மாவின் கணவன் மணியம், நல்லவனாக தெரிந்தாலும் சீன பெண் மீது சபலப்படுகிறான். மணியம் அவளைக் கல்யாணம் செய்யும் முன் அவளுக்கு சித்தம் பிறழ்ந்த குமரன் என்னும் மகன் உண்டு. அப்பிள்ளை அவனைத் தொந்திரவு செய்கிறான். வயதாக வயதாக அவனைச் சமாளிக்க முடியவில்லை என்று வைத்தியர் ராமசாமியிடம் புலம்புகிறான். ஓலம்மா அவன் அப்படி இருந்தால் என்ன, எனக்கு எப்பவுமே அவன் பிள்ளைதான் என்கிறாள். மணியம் குமரனைக் கொல்ல முடிவு செய்து, விஷம் வைத்துக் கொல்கிறான். 

ஓலம்மாவுக்கு நண்பனாக வைத்தியர் ராமசாமி. அவரின் அப்பா கோப்பேரன் தமிழகத்திலிருந்து வந்தவர். பேய்ச்சி அம்மனுக்கு பூசாரியாக இருந்த கோப்பேரன், அவரின் மனைவிக்கு பிறந்த ஆறு அல்லது ஏழு குழந்தைகள் இரண்டு வாரங்களில் இறந்து போக, இந்தப் பிள்ளையையும் பேய்ச்சி காவு வாங்கிவிடுவாள் எனப் பயந்து குழந்தையான ராமசாமியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார். பின்னர் ஒரு செட்டியாரிடம் வேலைக்குச் சேர்ந்து மலேசியா வந்து சேர்கிறார். வைத்தியராக கோப்பேரன், ஊரை விட்டு, பேய்ச்சியை விட்டு வந்த பின்னர் யாருக்கும் வைத்தியம் பார்ப்பதில்லை. பேச்சியாக வந்து சொன்னால்தான் வைத்தியம் பார்ப்பேன் என்பவருக்கு ஒரு நாகம் தரிசனம் தருகிறது. பின்னர் வைத்தியம் பார்க்கும் அவர், தன் மகன் ராமசாமிக்கும் வைத்திய முறைகளை சொல்லித் தருகிறார். 

தோட்டத்தில் சாராயக் கடை நடத்தி வரும் சீனர்களான சின்னி மற்றும் ஆங்சோ ஆகிய இருவருக்கும் தொழில் போட்டி வருகிறது. சின்னியின் சாராய ஊறலில் ஆங்சோ விசத்தைக் கலந்து விடுகிறான். சின்னி கடையில் சாராயம் குடித்த அனைவரும் இறக்கின்றனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஓலம்மாவின் கணவன் மணியம், சின்னியை பாலியல் உறவு கொள்கிறான். தைப்பூச விழாவுக்கு சென்றிருந்த ஓலம்மா இதை பார்க்க நேரிடுகிறது. சின்னியையும் மணியத்தையும், வைத்தியர் ராமசாமி துணையுடன் கொல்கிறாள். 

காலங்கள் ஓடி ஓலம்மாவுக்கு வயதாகிறது. இப்பொழுது கிழவியுடன் பேரனான அப்போய் வசிக்கிறான். சிறுவனான அவனிடம் பாசத்தைக் கொட்டி வளர்க்கிறாள். ஆனால் மகள் முனியம்மா அவனை தன்னோடு அழைத்துச் செல்வதாகச் சொன்னவுடன் அவளுக்கு பயம் வருகிறது. பேரன் அப்போய் ராமசாமியுடன் நட்பாக பழகுகிறான். ராமசாமியுடன் அவன் ஒருநாள் காட்டுக்குள் சென்று வந்ததில் காய்ச்சல் வருகிறது. அவனைத் தூக்கிக்கொண்டு முனியம்மா, ஓலாம்மாவிடம் கோபப்பட்டு புறப்படுகிறாள். இதற்கு முன்னர் அம்மாவைத் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியவள், இப்பொழுது எதுவும் சொல்லாமல் போகிறாள். சீன முதலாளி அவள் வீட்டைக் காலி செய்து வெளியே போகுமாறு சொல்கிறான். 

தன் கணவன் குற்றம் செய்தவன் என்று அறிந்தவுடன் அவனைக் கொல்ல முடிவெடுக்கும் ஓலம்மா பேய்ச்சி அம்மனின் இன்னொரு வடிவம் தான். எல்லோரையும் தன் சொந்தமாக நினைக்கும் ஓலம்மா, ஏதாவது பிரச்சினை என்றால் முன்னால் நிற்கிறாள். ஒரு பக்கம் அன்பை பொழிபவளாக மறுபக்கம் தீமை கண்டு பொங்குபவளாக ஓலம்மா. வயதான காலத்தில் தோட்டத்தை விட்டு பிரிய மறுப்பவளுக்கு சீன முதலாளி கெடு  விதித்த பின்னர், தான் ஆசை ஆசையாக வளர்த்த மரங்கள், பிராணிகள் என அழித்து விட்டு தன்னையும் அழித்துக்கொள்கிறாள்.     

சிறுவன் அப்போய் வளர்ந்து இப்பொழுது பெரியவனாகி விட்டான். அவனின் மனைவி மாலதிக்கு குழந்தை வயிற்றில் தங்குவதில்லை. தன் பாட்டியின் ஊரான ஆயேர் தோட்டத்துக்கு செல்கிறான். செம்பனைகளின் நடுவில் பேய்ச்சியின் கோவிலை கண்டுபிடித்து அங்கே இருக்கும் பூசாரியிடம் பேசுகிறார்கள். மாலதியின் கையால் சேவல் அறுத்தால், பேய்ச்சி கனிந்து குழந்தை வரம் அருள்வாள் எனச் சொல்கிறார் பூசாரி. முதலில் மறுக்கும் மாலதி பின்னர் சேவலை அறுக்கிறாள். பூசாரியிடம் இருந்து பறக்க நினைக்கும் சேவலை, ஒரு கையால் பிடித்து இறக்கையை காலால் மிதித்து அவள் சேவலை பலிகொடுக்கும்போது ரத்தம் தெறிக்கிறது. பூசாரி உட்பட எல்லோரும் ஒருகணத்தில் நடுங்கி பின்னர் பேச்சியை வணங்குகிறார்கள் என்பதுடன் நாவல் முடிகிறது. பேச்சிகள் எப்போதும் மறைவதில்லை.

இந்நாவலுக்கு தடை பற்றி சொன்னால், வியப்பாக இருக்கிறது. தமிழ் நாவல்களைப் படிப்பவர்களே கொஞ்சம் பேர். அவர்கள் இந்நாவலைப் படித்து கெட்டுப் போவார்கள் என்று அரசு நினைத்திருக்கலாம். இதில் வரும் பாலியல் சம்பவங்கள் தான் அவர்களை உறுத்துகிறது என்றால் என்ன சொல்வது.

கோவிலுக்குப் போகிறோம். நாள்பட்ட பலகாரங்களை வைத்துக் கொண்டு கடைக்காரர் பார்க்கிறார், சச்சரவு மிக்க மக்கள்,  பக்தியை காசாக்க நினைக்கும் பக்திமான்கள், கோவிலுக்கு வருபவனிடம் பணம் பறிக்க நினைக்கும் மக்கள் என பலபேர் உண்டு. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி கோவில் கருவறை முன் நிற்கும் பொழுது, தரிசனம் பார்க்கும்பொழுது அவை அனைத்தும் மறந்துபோய், பரம்பொருளே மனதில் நிற்கும். அதுபோல இந்நாவலில் பேய்ச்சியின் தரிசனம். அதைவிட்டு, நாவலில் வரும் பாலியல் சம்பவங்களே மனதில் இருக்கிறது என்றால் பிரச்சினை நாவலில் இல்லை.