Monday, April 20, 2020

மாடித் தோட்டம்

இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம்.

எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் கீரையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

பெரும்பாலும் நாம் கடைகளில் தான் கீரை, காய்கறிகள் வாங்குகிறோம். தோட்டம் போட்டாலும் நாம் கடைக்குப் போகத்தான் வேண்டும். ஆனால், இரண்டு கொத்து கருவேப்பிலை வாங்க ஒரு கட்டு கீரை வாங்க என அடிக்கடி போக வேண்டியதில்லை.

இரண்டு கத்தரி காய்த்தாலும் அது நாம் விளைவித்தவை. எந்த மருந்தும் அடிக்காமல் வளர்ந்தது. ஆர்கானிக் என்று அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை உணவுகளை பெறமுடியும். முயன்று பாருங்கள்.

















Wednesday, April 8, 2020

என் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று எண்ணும் பெற்றோரா நீங்கள் ?

எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'கால் முளைத்த கதைகள்'. அப்பொழுது அந்தப் புத்தகம் அவனுக்கு கதை சொல்வதற்காக நான் வாங்கியது. பலமுறை அதில் உள்ள கதைகளை அவனுக்குப் படிததுச் சொல்லியிருக்கிறோம்.


பின்னர் தெனாலி ராமன், பீர்பால், மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் என நகைச்சுவை புத்தகங்களில் அவனுக்கு கதைகள் சொல்லி இருக்கிறோம். பள்ளி செல்லத் தொடங்கிய பின்னர் அமர் சித்திர கதைகள் வாங்கித் தர, சித்திரப் படம் அவனுக்குப் பிடித்து வாசிக்க முயற்சி செய்தான். புத்தக விழாக்களுக்கு அழைத்துச் சென்று அவனையே எடுக்கச் சொல்லி வாங்கி வந்துள்ளோம். சிறார் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, விழியன் போன்றோரின் புத்தகங்கள் தும்பி, றெக்கை போன்ற மாத இதழ்கள் என படிக்க ஆரம்பித்தான். இப்பொழுது ஜெயமோகனின் 'பனி மனிதன்' நாவலை நான்கே நாளில் முடித்துவிடுகிறான்.

இதை இங்கே சொல்லக் காரணம், படிப்படியாக அவர்களை வாசிப்புக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்றுதான். ஒரே நாளில் அவர்களை வாசிக்க வைக்க முடியாது. ஒரு புத்தகம் படிக்கவில்லை என்றால், அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து புத்தகம் வாங்க வேண்டும். படிக்காமல் விட்ட புத்தகத்தை பின்னர் நிச்சயம் படிப்பார்கள்.

தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் பேச்சு மற்றும் பயிற்று மொழி ஆங்கிலத்தில் இருக்கும். தமிழ் மொழியைத் தள்ளியே வைத்திருப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போன முறை பெற்றோர் சந்திப்பில் ஒரு தந்தை, ஆங்கிலத்தில் தன் குழந்தை சிறப்பாக பேச மறுக்கிறாள், நீங்கள் இன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் சொன்னார். அந்தக் குழந்தை படிப்பது மூன்றாம் வகுப்பு :(. இப்படி பெற்றோர் இருப்பதால் , பள்ளி நிர்வாகத்தால் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சரி தமிழ் படிக்க வைக்க என்ன செய்யலாம்?

* சின்ன வயதில் குழந்தைகள் புத்தகத்தை கிழித்து விடுவார்கள் என்று நாம் புத்தகம் வாங்கித் தராமல் இருக்கிறோம். கிழித்தாலும் பரவாயில்லை, அவர்களைப் படிக்க வைக்க முயல வேண்டும். கெட்டியான பக்கங்கள் உள்ள வண்ண பட கதைகள் கொண்ட சிறு புத்தகங்கள் உண்டு. அவற்றை வாங்கித் தரலாம்.

* அவர்களைப் படி படி என்று சொல்லிவிட்டு நாம் தொலைக்காட்சி மற்றும் போனில் மூழ்க கூடாது. அவர்களுடன் சேர்ந்து நாமும் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாளிதழ் படிக்கலாம்.

* அவர்கள் படிக்கவில்லை என புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த கூடாது. இந்த புத்தகம் இல்லை என்றால் அடுத்த புத்தகங்களை விரும்பக் கூடும்.

* ஒரே மாதிரியான புத்தகங்களை வாங்காமல், நகைச்சுவை(தெனாலி போல்), வரலாறு, அமர் சித்திரக் கதைகள் என முயற்சி செய்யலாம்.

* புத்தக விழாக்களுக்கு சென்று அவர்களைத் தேர்வு செய்ய சொல்லலாம். கண்டிப்பாக படிப்பார்கள்.

* சில புதிய வார்த்தைகள் கதைகளில் வரும். அவர்கள் அதற்கு அர்த்தம் கேட்கும்போது சொல்லிக்கொடுக்க வேண்டும். இது கூட தெரியாதா என அவர்களைத் திட்ட கூடாது.

இப்படியெல்லாம் அவர்கள் படிப்பதால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.

* தமிழ் என்னும் மிகச் சிறப்பான மொழியில் அவர்கள் படிக்கிறார்கள். தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் தாய் மொழியில் படிக்க வேண்டும்.

* அவர்களின் மொழி வளம் பெருகும். நிலா/சந்திரன்/மதி/திங்கள் - ஆகிய வார்த்தைகள் குறிப்பது ஒன்றையே என்பது நிறைய படிக்க தெளிந்து வரும்.

* பாடப் புத்தகம் தாண்டிய அறிவைப் பெறுவார்கள்.

* இலக்கியம் தீர்வுகளை தராது, ஆனால் இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும். சிக்கலான சமயங்களில் முடிவுகள் எடுக்க பிற்காலத்தில் உதவும்.

* கதைப் புத்தகங்கள் படித்தால், பாடப் புத்தகத்தில் ஆர்வம் இருக்காது எனச் சிலர் நினைக்கலாம். உண்மையில் பாடப் புத்தகம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது வாசிப்பு பழக்கம்.

இந்த தனிமை நாட்களில் வெளியே சென்று புத்தகம் வாங்கவோ, ஆன்லைனில் வாங்கவோ முடியாது. குறைந்தபட்சம் அவர்களிடம் பள்ளி தமிழ் பாடப் புத்தகம் இருந்தால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதை வாசிக்க சொல்லி பிழைகளைத் திருத்துங்கள். தமிழில் படிப்பது எளிது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.


Friday, April 3, 2020

மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்

சுதந்திரத்துக்கு பாடுபட்டு தன் வாழ்க்கையை மறந்த ஒரு வீரனின் கதை. பிரெஞ்சு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருபகுதி மய்யழி. கேரளாவின் மய்யழி ஆற்றங்கரையில் அமைந்தது அவ்வூர். பிரெஞ்சு தேசத்தினர் வந்து அங்கு தங்கியிருந்து ஆண்ட கதையை சொல்லத்தொடங்கும் நாவல், நாடு சுதந்திரம் பெறுவதில் முடிகிறது. வெள்ளைக்காரர்கள் என்றால் நல்லவர்கள் என்று நம்பும் ஊர் மக்கள், அவர்கள் அடித்து பிடுங்கினாலும் தலை வணங்கும் மக்கள், சாராயப் போதையில் மிதக்கும் மக்கள் என நிரம்பிய ஊர் மய்யழி. உண்மையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் மய்யழியையே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மய்யழி மக்களுடன் நண்பர்களாக பழகி, ஒருவருக்கொருவர் உறவினர் போல மாறிவிடுகிறார்கள். 

மய்யழியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் தந்தைக்கு மகன் தாசன். தாசன் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நிமிரமுடியும் என்ற நிலை. நன்றாக படிப்பதால் அவன் பள்ளி ஆசிரியர் அவனுக்கு நிறைய சொல்லித்தருகிறார். ஆசிரியருக்கு இந்த மய்யழி சீக்கிரம் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலை காரணம் அவர் இயற்கை எய்த நேர்கிறது. தனது மாணவன் யாரேனும் இந்த விடுதலை வேள்வியை தொடர்ந்து நடத்துவான் என்று சொல்லிக்கொண்டே அவர் கண்மூடுகிறார். அவர் சொன்னது போலவே தாசன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்கிறான்.




அவனுக்கும் ஆசிரியரின் அக்கா மகளான சந்திரிகாவுக்கும் காதல். சின்ன வயதில் இருந்தே இருவரும் பழக்கம். தாசன் படித்து முடித்த பின்னர் மய்யழியின் ஊர் மூப்பன் துரை அவனை அழைத்து தனது அரசில் பெரிய வேலையோ அல்லது மேற்படிப்பு படிக்க பிரஞ்சு செல்ல வேண்டினாலும் உதவக் காத்திருப்பதாகச் சொல்கிறார். அவன் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் செய்யும் புரட்சியால் தாசனின் தந்தை சிறை செல்ல நேர்கிறது. தாசன் மய்யழியை விட்டு வெளியேறி ஒதுக்குபுறமாக தங்குகிறான். 

சந்திரிகாவுடன் உள்ள பழக்கம் அப்படியே தொடர்கிறது. தாசனின் தந்தை சிறையிலிருந்து திரும்பிய பின்னர், தாசன் சிறை செல்ல நேர்கிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, மய்யழி சுதந்திரம் அடைகிறது. வெள்ளைக்கார மக்கள் அவர்கள் நாட்டுக்கு செல்கிறார்கள். தாசன் சிறையில் இருந்து விடுதலை பெறுகிறான். அவனின் நண்பர்கள் இப்பொழுது இருக்கும் அரசில், ஏதாவது வேலையில் சேரச் சொல்ல அவன் மறுத்து விடுகிறான். தந்தையின் கோபத்தால் அவனின் வீட்டுக்கும் தாசன் செல்வதில்லை. தாசனுக்கு ஏதாவது வேலை இருந்தால் சந்திரிகாவை கட்டி வைப்போம், இப்படி எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒருவனுக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பதென அவளின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்கிறார். இறுதியில் அது அவளின் இறப்பில் முடிகிறது. 

தாசனின் பாட்டியாக வரும் குறம்பியம்மா, நாவல் முழுதும் வருகிறார். ஊரின் மிக வயது முதிர்ந்த பாட்டி. வெள்ளைக்காரர்கள் மேல் மிகவும் மதிப்பும் வைத்திருக்கும் குறம்பி அவர்களுடன் நன்றாகவே பழகுகிறார். தன் பேரன் தாசன் கோட் சூட் அணிந்து வருவான் என்றே காத்துக்கொண்டிருக்கிறார். சுதந்திரம் பெற்றால், வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள் என்பதை பாட்டியால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் திரும்பவும் எப்பொழுது வருவார்கள் என்று கேட்டு நச்சரிக்கிறார். குறம்பியிடம் எப்பொழுதும் மூக்குப் பொடி வாங்கிப் போடும் வெள்ளைக்காரத் துரை கூட உண்டு. எல்லா வெள்ளையின மக்களும் தங்கள் அதிகாரத்தை காட்டாமல், சிலர் மக்களுடன் இயல்பாக பழகுகிறார்கள். 


குறம்பி பாட்டி தாசனின் சின்ன வயதில் நிறையக் கதைகள் சொல்கிறார். அதில் ஒரு கதை, கடற்கரையில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் ஒரு மலை போன்ற வெள்ளியங்கல்லில் தான் நாம் எல்லாம் தும்பிகளாகத் திரிந்தோம். பின்னர் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து, வயது மூத்து இறந்தாலும் அங்கே தான் செல்வோம் என்று கதை சொல்ல, தாசனுக்கு அது மனதில் பதிந்து விடுகிறது. அங்கே சந்திரிகாவும் தும்பியாக பறந்து கொண்டிருப்பாள் என்று நம்புகிறான். இப்பொழுது மய்யழியில் அவனைத் தவிர அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறான் தாசன். கூடிய சீக்கிரமே அவனும் அங்கே வெள்ளியங்கல்லின் மீது தும்பியாக பறந்து கொண்டிருந்தான். 

நாவலில் சில உரையாடல்களும், முக்கியமான வார்த்தைகளும் பிரஞ்சு மொழியிலேயே இருக்கிறது. இவ்வாறு இருப்பது நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை தருகிறது. வலிந்து திணித்த வார்த்தைகளும், உரையாடல்களும் இல்லாமல் கதை தன் போக்கில் நகர்கிறது. கதை மாந்தர்கள் அனைவரின் சித்தரிப்பும் மய்யழி ஊரை நம் முன்னே வந்து காட்டுகிறது. மலையாள மூலத்தில் இருந்து இளையபாரதி அவர்கள் தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.