Friday, April 3, 2020

மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்

சுதந்திரத்துக்கு பாடுபட்டு தன் வாழ்க்கையை மறந்த ஒரு வீரனின் கதை. பிரெஞ்சு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருபகுதி மய்யழி. கேரளாவின் மய்யழி ஆற்றங்கரையில் அமைந்தது அவ்வூர். பிரெஞ்சு தேசத்தினர் வந்து அங்கு தங்கியிருந்து ஆண்ட கதையை சொல்லத்தொடங்கும் நாவல், நாடு சுதந்திரம் பெறுவதில் முடிகிறது. வெள்ளைக்காரர்கள் என்றால் நல்லவர்கள் என்று நம்பும் ஊர் மக்கள், அவர்கள் அடித்து பிடுங்கினாலும் தலை வணங்கும் மக்கள், சாராயப் போதையில் மிதக்கும் மக்கள் என நிரம்பிய ஊர் மய்யழி. உண்மையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் மய்யழியையே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மய்யழி மக்களுடன் நண்பர்களாக பழகி, ஒருவருக்கொருவர் உறவினர் போல மாறிவிடுகிறார்கள். 

மய்யழியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் தந்தைக்கு மகன் தாசன். தாசன் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நிமிரமுடியும் என்ற நிலை. நன்றாக படிப்பதால் அவன் பள்ளி ஆசிரியர் அவனுக்கு நிறைய சொல்லித்தருகிறார். ஆசிரியருக்கு இந்த மய்யழி சீக்கிரம் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலை காரணம் அவர் இயற்கை எய்த நேர்கிறது. தனது மாணவன் யாரேனும் இந்த விடுதலை வேள்வியை தொடர்ந்து நடத்துவான் என்று சொல்லிக்கொண்டே அவர் கண்மூடுகிறார். அவர் சொன்னது போலவே தாசன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்கிறான்.




அவனுக்கும் ஆசிரியரின் அக்கா மகளான சந்திரிகாவுக்கும் காதல். சின்ன வயதில் இருந்தே இருவரும் பழக்கம். தாசன் படித்து முடித்த பின்னர் மய்யழியின் ஊர் மூப்பன் துரை அவனை அழைத்து தனது அரசில் பெரிய வேலையோ அல்லது மேற்படிப்பு படிக்க பிரஞ்சு செல்ல வேண்டினாலும் உதவக் காத்திருப்பதாகச் சொல்கிறார். அவன் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் செய்யும் புரட்சியால் தாசனின் தந்தை சிறை செல்ல நேர்கிறது. தாசன் மய்யழியை விட்டு வெளியேறி ஒதுக்குபுறமாக தங்குகிறான். 

சந்திரிகாவுடன் உள்ள பழக்கம் அப்படியே தொடர்கிறது. தாசனின் தந்தை சிறையிலிருந்து திரும்பிய பின்னர், தாசன் சிறை செல்ல நேர்கிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, மய்யழி சுதந்திரம் அடைகிறது. வெள்ளைக்கார மக்கள் அவர்கள் நாட்டுக்கு செல்கிறார்கள். தாசன் சிறையில் இருந்து விடுதலை பெறுகிறான். அவனின் நண்பர்கள் இப்பொழுது இருக்கும் அரசில், ஏதாவது வேலையில் சேரச் சொல்ல அவன் மறுத்து விடுகிறான். தந்தையின் கோபத்தால் அவனின் வீட்டுக்கும் தாசன் செல்வதில்லை. தாசனுக்கு ஏதாவது வேலை இருந்தால் சந்திரிகாவை கட்டி வைப்போம், இப்படி எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒருவனுக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பதென அவளின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்கிறார். இறுதியில் அது அவளின் இறப்பில் முடிகிறது. 

தாசனின் பாட்டியாக வரும் குறம்பியம்மா, நாவல் முழுதும் வருகிறார். ஊரின் மிக வயது முதிர்ந்த பாட்டி. வெள்ளைக்காரர்கள் மேல் மிகவும் மதிப்பும் வைத்திருக்கும் குறம்பி அவர்களுடன் நன்றாகவே பழகுகிறார். தன் பேரன் தாசன் கோட் சூட் அணிந்து வருவான் என்றே காத்துக்கொண்டிருக்கிறார். சுதந்திரம் பெற்றால், வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள் என்பதை பாட்டியால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் திரும்பவும் எப்பொழுது வருவார்கள் என்று கேட்டு நச்சரிக்கிறார். குறம்பியிடம் எப்பொழுதும் மூக்குப் பொடி வாங்கிப் போடும் வெள்ளைக்காரத் துரை கூட உண்டு. எல்லா வெள்ளையின மக்களும் தங்கள் அதிகாரத்தை காட்டாமல், சிலர் மக்களுடன் இயல்பாக பழகுகிறார்கள். 


குறம்பி பாட்டி தாசனின் சின்ன வயதில் நிறையக் கதைகள் சொல்கிறார். அதில் ஒரு கதை, கடற்கரையில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் ஒரு மலை போன்ற வெள்ளியங்கல்லில் தான் நாம் எல்லாம் தும்பிகளாகத் திரிந்தோம். பின்னர் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து, வயது மூத்து இறந்தாலும் அங்கே தான் செல்வோம் என்று கதை சொல்ல, தாசனுக்கு அது மனதில் பதிந்து விடுகிறது. அங்கே சந்திரிகாவும் தும்பியாக பறந்து கொண்டிருப்பாள் என்று நம்புகிறான். இப்பொழுது மய்யழியில் அவனைத் தவிர அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறான் தாசன். கூடிய சீக்கிரமே அவனும் அங்கே வெள்ளியங்கல்லின் மீது தும்பியாக பறந்து கொண்டிருந்தான். 

நாவலில் சில உரையாடல்களும், முக்கியமான வார்த்தைகளும் பிரஞ்சு மொழியிலேயே இருக்கிறது. இவ்வாறு இருப்பது நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை தருகிறது. வலிந்து திணித்த வார்த்தைகளும், உரையாடல்களும் இல்லாமல் கதை தன் போக்கில் நகர்கிறது. கதை மாந்தர்கள் அனைவரின் சித்தரிப்பும் மய்யழி ஊரை நம் முன்னே வந்து காட்டுகிறது. மலையாள மூலத்தில் இருந்து இளையபாரதி அவர்கள் தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 



No comments:

Post a Comment