ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் பிள்ளையாரும் அம்மனும் குடியிருந்தார்கள். ஊருக்குள் வருவோரை வரவேற்கும் விதமாக ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது. காக்கைகள் குருவிகள் என எப்போதும் நிறைந்து இருக்கும். சிறு சிறு பழங்களாக உதிர்ந்து கீழே கிடக்கும். இவ்வளவு பெரிய ஆலமரத்தின் விதை இவ்வளவு சிறிதா என நினைத்து வியந்த காலங்கள் அவை. ஒருநாள், ஊரைக் கூட்டி மரத்தை வெட்டுவதென்று தீர்மானித்தார்கள். சில நாட்களிலேயே மரம் வெட்டப்பட்டு விட்டது. மரம் வெட்டியதற்கு அவர்கள் சொன்ன காரணம், மரத்தின் வேர் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களை தாக்குகின்றனவாம். இது நடந்து பதினைத்து வருடங்களுக்கு மேலிருக்கும். இப்பொழுது அதே இடத்தில், ஒரு அரசமரக் கன்றையும் ஒரு வேப்ப மரக் கன்றையும் நட்டி தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஒருவேளை அவ்வளவு பெரிய மரத்தை வெட்டியதற்கு, இப்பொழுது வளர்க்கிறார்களோ என்னமோ.

ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை அகலம் செய்யும்போதெல்லாம் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த அத்தனை புளிய மரங்களும் இன்று வெட்டப்பட்டு விட்டன. தினமும் அதன் நிழலில் நடந்த காலம் மலையேறிவிட்டது. தினமும் ஒவ்வொரு இடத்திலும் மரங்கள் அடியோடு சாய்ந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு புளியமரத்தின் கதை' நாவலிலும் ஒரு புளியமரமே சுத்தி சுத்தி வருகிறது. ஊரின் முன்னால் இருப்பதால் அந்தப் புளியமரம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புளியமரம் உள்ள இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்திருக்கிறது. அந்தக் குளம் நாறுவதைக் கண்ட மன்னர், அந்தக் குளத்தை மூடச் சொன்னதாக 'ஆசான்' என்பவர் கதை சொல்கிறார் நாவலில். ஒரு முறை அந்த மரம் வெட்டுப்படுவதைத் தான் தடுத்ததாகவும் சொல்கிறார். அந்த மரத்தைச் சுற்றி கடைகள் நிரம்பி, இப்பொழுது அது கடைவீதி போல் ஆகிவிட்டது.

அந்தப் புளியமரத்தின் அடியில் தாமு என்பவன் கடை வைத்திருக்கிறான். சற்று தள்ளி கடை வைத்துள்ள காதருக்கும், தாமுவுக்கும் சண்டை வந்துவிடுகிறது. தாமுவை ஒழிக்க புளியமரத்தை  வெட்டுவதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வருகிறான் காதர். நகரசபை தேர்தலில் தாமுவும் காதரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் பகை புகைந்து கொண்டே இருக்கிறது.

(புளிய மரங்கள் நிறைந்த கோவை மேட்டுப்பாளையம் சாலை, இப்பொழுது இல்லை)

காதருக்கு இசக்கி என்னும் பத்திரிக்கை நிருபர் துணைக்கு வருகிறான். அவன் பத்திரிக்கையில், 'இந்த மரத்தில் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மரம் காற்றுக்கு தீடீரென கீழே விழுந்தால் பெரிய இழப்பும், மக்களும் அடிபடுவார்கள்' என்று எழுதுகிறான். உடனே நகரசபையில் மரத்தை வெட்ட தீர்மானம் போடுகிறார்கள். ஆனால், தாமு மற்றும் அவன் கூட்டாளிகள் அந்த மரத்துக்கு வெள்ளியில் பட்டயம் சாத்தி, பொட்டிட்டு சாமியாக்கி விடுகிறார்கள். வெட்ட வந்த ஒப்பந்தக்காரன், தான் வெட்டமுடியாது எனச் சொல்லிவிடுகிறான். மரம் தப்பிக்கிறது.

ஆனால், அன்றிரவே காதரின் ஆள் அந்த மரத்தில் சிறு குழி போல் செய்து அதில் ஆசிட்டை ஊற்றிவிட, இரண்டொரு நாளில் மரம் அப்படியே பட்டுப் போய்விடுகிறது. இப்பொழுது புளியமர ஜங்சனில் இப்பொழுது புளியமரம் இல்லை. காதர் சிறைக்குச் செல்ல, அந்த நேரம் பார்த்து தேர்தலில் போட்டியிட்ட 'கடலை' தாத்தா ஜெயித்து விடுகிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், கடலை மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த தாத்தா நகரசபைக்கு புது உடையில் செல்கிறார். இரண்டொரு மாதம் கழிந்த பின்னர், அவர் வழக்கம் போல கடலை மிட்டாய் விற்க கிளம்புகிறார். குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்தவுடன் அவருக்கு முகம் மலர்கிறது.

எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்த மரம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எத்தனை மழைக்கு, வெயிலுக்கு தாங்கி அது இவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. 

இந்நாவல் மரத்தை மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் மக்களையும் சேர்த்தே விவரிக்கிறது. இது ஒரு புளியமரத்தின் கதை என்றாலும், ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் எத்தனை கதைகள் இருக்கும் என்ற ஆச்சரியம் எழுகிறது. மரம் - விருட்சம். அந்த விருட்சமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம், ஆனால் நாம் நம்மால் முடிந்த அளவு அதை வெட்டிக் கொண்டிருக்கிறோம்.  அந்த மரங்கள் நம்மை மன்னிக்கட்டும்.

Comments

  1. லோக்கல் டச்சோடு நாவலை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! அருமை...!

    ReplyDelete
  2. எளிய நடையில் புளியமரம் மனதில் ஒட்டிக்கொள்கிறது.

    ReplyDelete
  3. சாலையின் இரு புறமும் புளிய மரங்கள் இருக்கும் எங்கள் ஊர் பாதையை நினைவு படுத்துகிறது தங்கள் பதிவு அருமை.

    ReplyDelete
  4. //மதுரை அழகு said...

    லோக்கல் டச்சோடு நாவலை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! அருமை...!
    //

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. //ராஜ நடராஜன் said...

    எளிய நடையில் புளியமரம் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
    //
    நன்றிங்க

    ReplyDelete
  6. //சசிகலா said...

    சாலையின் இரு புறமும் புளிய மரங்கள் இருக்கும் எங்கள் ஊர் பாதையை நினைவு படுத்துகிறது தங்கள் பதிவு அருமை.
    //
    நன்றிங்க

    ReplyDelete
  7. அருமை இளங்கோ...படிக்கத் தூண்டும் எழுத்துக்கள்...

    ReplyDelete
  8. @சாமக்கோடங்கி
    நன்றிங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை