Friday, October 13, 2023

தமிழகக் கோபுரக்கலை மரபு - குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார். 

கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன;  கோபுரத்தின் தோற்றம், கட்டடக் கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள கலைகள் மற்றும் கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு ஆகும். 



கோபுரம் என்ற சொல்லுக்கு பொருளைச் சொல்லி, கோவிலின் நுழைவு வாயில் கோபுரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை விளக்குகிறது இப்புத்தகம். அனலின் வடிவமாகவே கோபுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம் நிலைத்து நிற்க, சரியான இடம் தேர்வு, கற்கள் தேர்வு, அவற்றை அடுக்கிய முறை என பல காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர். 

கோபுரத்தின் பகுதிகளான நிலைக்கால் முதல் சிகரம் வரை ஒவ்வொன்றுக்கும் உரிய மரபு பெயர்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நிலைகளில் ஆரம்பித்து பின்னர் ஏழு, ஒன்பது என கட்டப்பட்ட கோபுரங்கள், கட்டிய மன்னர்கள், திருப்பணி செய்தவர்கள் என ஒவ்வொன்றையும் ஆய்ந்து மிக விரிவாக பேசுகிறது இந்நூல். மேலும் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆய்வுக்கு உதவிய புத்தகங்கள், கல்வெட்டுகள், தகவல்கள் இணைப்பாக உள்ளது.

சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் அடங்கிய கோபுரங்களில் சில வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறவேண்டும். சுதைச்  சிற்பங்களில் விரிசல் இருப்பின் சீர்செய்து வண்ணம் தீட்ட வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்யவேண்டிய இப்பணியை சிலர் திருப்பணி என்கிற பெயரால் அழிக்கவே முயல்கின்றனர். திருவில்லிப்புத்தூர் கோபுரம் திருப்பணிக்கு பின்னர் அதன் அழகை இழந்ததை நினைத்து வருந்தும் ஆசிரியர், மன்னார்குடி கோபுரம் திருப்பணி எந்த பாதிப்பும் இல்லாமல், பழைய பொலிவுடன் சிறப்பாக நடந்ததை வியக்கிறார். 

மணல் வீச்சு என்ற சுத்தப்படுத்தும் முறையில் சில கோவில்களின் கோபுரங்களில் இருந்த பழமையான ஓவியங்கள் சில மணித்துளிகளில் அழிந்து போனதைக் குறிப்பிடுகிறார். சில கோபுரங்களில் செங்கல் மட்டும் கொண்டு சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செங்கல் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட சில கோபுரங்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், அந்தக் கலையை அறிந்தவர்கள் இன்று யாருமே இல்லை என்கிறது.

சிதைந்து போன கோவில்களில் இருந்து கற்களை எடுத்து எடுக்கப்பட்ட கோபுரங்கள் பற்றியும், திருப்பணிகள் செய்த நபர்கள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. மொட்டை கோபுரமாக இருந்து பின்னர் கட்டப்பட்ட கோபுரங்களையும் இந்நூலில் காணலாம். 

கோபுரங்கள், அவை எடுக்கப்பட்ட காலம், மன்னர்கள்  மற்றும் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு களஞ்சியமாக விளங்கும். 


வெளியீடு:
அகரம்
எண் .1, நிர்மலா நகர் 
தஞ்சாவூர் - 613 007



No comments:

Post a Comment